Monday, April 30, 2007

ரஜிவர்மன் படுகொலையானது துயரமான இழப்பு: புலிகளின் மனித உரிமை விவகாரங்களுக்கான பேச்சாளர்.

[திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2007]


யாழ்ப்பாணத்தில் உதயன் செய்தியாளர் ரஜிவர்மன் படுகொலை செய்யப்பட்டமையானது துயரமான இழப்பு என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமை விவகாரங்களுக்கான பேச்சாளர் செல்வி தெரிவித்துள்ளார்.

அவர் இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

சிறிலங்கா இராணுவ வன்முறைகளை எதிர்த்து எழுதுகிற ஊடகவியலாளர்களை திட்டமிட்டு அழிக்கும் நிகழ்வின் மற்றொரு சம்பவமாக யாழ். நாளிதழின் செய்தியாளர் ரஜிவர்மன் கடந்த ஏப்ரல் 29 ஆம் நாள் யாழில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

உதயன் நாளிதழ் பலமுறை சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணைக்குழுவினரின் தாக்குதல்களுக்குள்ளாகியுள்ளது.

2006 ஆம் ஆண்டு மே 2 ஆம் நாள் உதயன் அலுவலகத்தை சிறிலங்கா இராணுவத்தினர் முன்னிலையிலேயே துணை இராணுவக் குழுவினர் தாக்கினர். இதில் உதயன் பணியாளர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டனர். நாளிதழ் அலுவலக உபகரணங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இது தொடர்பில் எவர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 18 ஆம் நாள் பாதுகாவலர்களை கட்டிப்போட்டுவிட்டு உதயன் களஞ்சியத்தை துணை இராணுவக் குழுவினர் எரித்தனர்.

சிறிலங்கா இராணுவம் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் இதுவரை படுகொலை செய்யப்பட்டுள்ள சில ஊடகவியலாளர்கள் விவரம்:

- 2004 ஆம் ஆண்டு யூன் மாதம் பணிக்குச் செல்லும் வழியில் ஊடகவியலாளர் நடேசன் படுகொலை செய்யப்பட்டார்

- 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அனைத்துலகம் நன்கறிந்த ஊடகவியலாளரும் தமிழ்நெட் இணையத்தள ஆசிரியருமான சிவராம் தர்மரட்ணம், கொழும்பு நகரில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

- 2006 ஆம் ஆண்டு ஜனவரியில் கொழும்பிலிருந்து வெளியாகும் சுடரொளி தமிழ் நாளிதழின் திருகோணமலை செய்தியாளர் சுகிர்தராஜன், அவரது வீட்டுக்கு அருகே சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

- 2006 ஆம் ஆண்டு யூலை 2 ஆம் நாள் சுயாதீன ஊடகவியலாளர் சம்பத் லக்மல் டி சில்வா கொழும்பில் படுகொலை செய்யப்பட்டார்.

- 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 20 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் நமது ஈழநாடு நாளிதழின் நிர்வாக மேலாளர் சிவமகராசாவை சிறிலங்கா இராணுவ அதி உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்தனர்.

- 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் நாள் நிலம் மாத இதழின் ஆசிரியர் சுபாஸ் சந்திரபோசை வவுனியாவில் அவரது வீட்டு அருகே படுகொலை செய்தனர்.

படுகொலை செய்யப்பட்ட நாளிதழ் விநியோகிப்பாளர்கள்:

- 2005 ஆம் ஆண்டு யூனில் மட்டக்களப்பில் ஈழநாதம் விநியோகிப்பாளர் ஏ.கன்னமுத்து படுகொலை

- 2005 ஆம் ஆண்டு செப்ரெம்பரில் ஈழநாதம் நாளிதழின் மற்றொரு விநியோகிப்பாளர் கே.யோககுமார் படுகொலை

- 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 15 ஆம் நாள் உதயன் நாளிதழின் விநியோகிப்பாளர் சதாசிவம் பாஸ்கரன் யாழ்ப்பாணத்தில் படுகொலை

தாக்குதலுக்குள்ளான அலுவலகங்கள்:

- 2004 ஆம் ஆண்டு டிசம்பரில் மட்டக்களப்பில் உள்ள தினக்குரல் அலுவலகம் மீது தாக்குதல்

- 2005 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 29 ஆம் நாள் கொழும்பில் உள்ள சுடரொளி வார வெளியீட்டு அலுவலகம் மீது தாக்குதல். அந்த அலுவலகத்துக்குள் இரு கையெறி குண்டுகள் வீசப்பட்டன. இதில் பாதுகாப்பு பணியாளர் டேவிட் செல்வரட்ணம் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தார். மேலும் மூன்று பணியாளர்கள் படுகாயமடைந்தனர்.

- 2006 ஆம் ஆண்டு மே 2 ஆம் நாள் உதயன் நாளிதழ் அலுவலகம் மீது தாக்குதல். இதில் இரு பணியாளர்கள் படுகொலை. அலுவலக உபகரணங்கள் நொறுக்கப்பட்டன.

- 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 26 ஆம் நாள் உதயன் களஞ்சியப் பகுதி தீக்கிரையாக்கப்பட்டது.

சிறிலங்கா இராணுவத்தினரால் திறமையான ஊடகவியலாளர்களும் ஊடக நிறுவனங்களும் தொடர்ந்து அச்சுறுத்தல்களுக்குள்ளாகி வருகின்றனர் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி:புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.