Monday, April 30, 2007

அமெரிக்காவின் ஆலோசனைகள் மூலம் வான்புலிகளை முறியடிக்க அரசு முயற்சி: கொழும்பு ஊடகம்.!!

[திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2007]


சிறிலங்காவின் ஆயுதப்படைகளின் வலிமையை ஆராய்ந்த அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கட்டளைப்பீடம் 2002 ஆம் ஆண்டு சமர்ப்பித்த அறிக்கையை தற்போது மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தேடி எடுத்து செயற்படுத்த முற்பட்டுள்ளதாக 'சண்டே ரைம்ஸ்' வார ஏட்டின் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து வெளிவரும் 'சண்டே ரைம்ஸ்' வார ஏட்டில் இக்பால் அத்தாஸ் எழுதியுள்ளதாவது:

பாலாவியில் உள்ள பாதுகாப்பு அரனில் கடமையாற்றிக் கொண்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினர் கடந்த வியாழக்கிழமை இரவு 10.30 மணியளவில் அடையாளம் தெரியாத 3 வானூர்திகளை கண்டுள்ளனர்.

அவை தென்பகுதி நோக்கிச் சென்று கொண்டிருந்தன, ஒரு வானூர்தி வெளிச்சத்துடன் அதிக உயரத்திலும், இரு வானூர்திகள் வெளிச்சங்கள் அற்ற நிலையில் தாழ்வாகவும் சென்றுகொண்டிருந்தன.

எனினும் வெளிச்சத்துடன் சென்ற வானூர்தி அனைத்துலக வானூர்தி நிறுவனம் ஒன்றின் வானூர்தி எனவும் ஏனையவை விடுதலைப் புலிகளினுடையது எனவும் அடையாளம் காணப்பட்டன.

கட்டுநாயக்கவின் வான் பாதுகாப்பு தொகுதிகள் உடனடியாக இயங்கத் தொடங்கின. வான்படைத் தளத்தைச் சுற்றியுள்ள சுடுகலங்களும் விழிப்பு நிலைக்குட்படுத்தப்பட்டன. மின் வெளிச்சம் அணைக்கப்பட்டது.

மேஜர் ஜெனரல் லோறன்ஸ் பெர்னாண்டோ தலைமையிலான கொழும்பு நடவடிக்கை தலைமையகம் விழிப்பு நிலைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அனுராதபுர, வவுனியா வான்படைத் தளங்களும் விழிப்பு நிலைக்குட்படுத்தப்பட்டன.

இம்முறையும் படையினரின் ராடார் மையங்கள் தொழிற்படவில்லை, எனவே எலெக்ரோனிக் முறையில் வானத்தை அவதானிப்பது சாத்தியமற்றது. ராடாரில் வானூர்திகள் அவதானிக்கப்படவில்லை.

கும்பிகன்ட பகுதியில் இருந்த இராணுவத்தினர் ஒருவரே வானூர்தியை முதலில் கண்டார். முன்னரைப் போல் அல்லாமல் இம்முறை விடுதலைப் புலிகளின் வானூர்திகள் வெளிச்சங்களுடன் வந்தன, இது அனைத்துலக வானூர்தி நிலையத்தின் ராடார்களை குழப்பும் உத்தியாக இருக்கலாம்.

சிறிலங்கா இராணுவத்தினர் தாக்குதலை நடத்தத் தொடங்கினர்.

வான்படைத் தளத்தின் வான்பகுதி மீது தாக்குதல் செறிவானது, சில படையினர் தமது தாக்குதல் துப்பாக்கிகள் மூலமும் தாக்குதலை மேற்கொண்டனர். தொலைபேசிகள் அலறத் தொடங்கின.

வான் தாக்குதலை விடுதலைப்புலிகள் நடத்துவதாக நாடு முழுவதும் செய்திகள் பரவின.

அனைத்துலக வானூர்தி நிலையத்தையும் பீதிகள் தொற்றிக் கொண்டன. அதில் ஒரு சம்பவத்தில் பெல்ஜியத்தைச் சேர்ந்த 100 சுற்றுலாப் பயணிகள் தமது பயணத்தை முடித்து பிரசல்ஸ் வழியாக பிரான்ஸ், பாரிசுக்கு செல்வதற்காக காத்திருந்தனர்.

தாக்குதல் அச்சம் காரணமாக அவர்கள் நிலத்தில் படுத்ததுடன், மேசைகளின் கீழும் பதுங்கிக் கொண்டனர். அதன் பின்னர் அவர்கள் தமது தொலைபேசிகள் மூலம் சம்பவத்தை தமது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரிவித்ததுடன், சிலர் தாம் இனிமேல் சிறிலங்காவுக்குத் திரும்பி வரமாட்டோம் என வானூர்தி நிலைய அதிகாரிகளிடமும் தெரிவித்தனர்.

கொழும்பில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. எல்லோரும் பாதுகாப்புத் தேடி ஒதுங்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இது இரண்டாம் உலகப்போரை நினைவு படுத்ததுவதாக முதியோர்கள் தெரிவித்தனர்.

அதாவது ஏனைய ஈழப்போர்களை விட நாலாம் கட்ட ஈழப்போர் தென்னிலங்கை மக்களை வெகுவாக பாதித்துள்ளது.

அனுராதபுரம் மற்றும் கொழும்பு வான்படைத் தளங்களில் இருந்து மேலெழுந்த இரு கே-8 வானூர்திகள், விடுதலைப் புலிகளின் வானூர்திகளை தேடும் நடவடிக்கையை தொடங்கின. இவை இரவில் தொழிற்படும் தகமை உள்ளவை.

எனினும் அனுராதபுரத்தில் இருந்து மேலேழுந்த எம்.ஐ - 24 ரக உலங்குவாணூர்தி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வீழ்ந்ததால் கடுமையாக சேதமடைந்தது.

இந்த நாடகம் 3 மணிநேரம் நீடித்தது. இந்த தாக்குதலானது கொழும்பில் விடுதலைப் புலிகள் மேலும் தாக்குதலை நடத்தலாம் என்ற அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

பாலாவியில் வானூர்தியை அவதானித்த பின்னர் மீண்டும் ஒரு மணிநேரத்தில் மீண்டும் வானூர்திகள் திரும்பிச் செல்வதனை அவர்கள் அவதானித்துள்ளனர். இம்முறை அங்கு நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான மக்கள் வானூர்தியை கண்டுள்ளனர். அதன்போதும் வான்படையினர் வானூர்தியை நோக்கிச் சுட்டார்கள்.

கடந்த செவ்வாய்க்கிழமை பலாலி கூட்டுப்படைத் தளத்தின் மீது நடைபெற்ற விடுதலைப் புலிகளின் வான்தாக்குதலின் போதும் பலாலி வான்படைத் தளத்தில் இருந்த ராடார்களினால் வானூர்தியை கண்டறிய முடியவில்லை.

மேலும் பலாலிப் பகுதியில் வான்பறப்பில் ஈடுபட்டிருந்த கரையோர கண்காணிப்பு வானூர்தியினாலும் விடுதலைப் புலிகளின் வானூர்திகளை கண்டறிய முடியவில்லை.

இதனிடையே சிறிலங்காவின் ஆயுதப்படைகளின் வலிமையை ஆராய்ந்த அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கட்டளைப்பீடம், அவர்களிடம் புலனாய்வு, கண்காணிப்பு, கண்டறிதல் ஆகியன தொடர்பாக பல குறைபாடுகளும் பற்றாக்குறைகளும் நிலவுவதாக தெரிவித்திருந்தனர்.

2002 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையில்:

சிறிலங்கா வான்படையினரிடம் உள்ள வளங்கள் போதாது - கனரக சரக்கு வானூர்திகளின் ஸ்குவாட்ரனில் இரு ஹெக்கூல்ஸ் சி-130 வானூர்திகளும், இரு அன்ரனோவ் - 32 வானூர்திகளுமே பயன்படுத்தக்கூடியவை. - சிறிலங்காவிடம் 7 அன்ரனோவ் - 32 ரக வானூர்திகள் உள்ளன. அதற்கு உகந்த பராமரிப்பு இல்லை- வானூர்தி உதிரிப் பாகங்களின் குறைபாடுகள் உள்ளன எனக் கூறப்பட்டிருந்தது.

மேலும் சிறிலங்கா வான்படையினர் புதிய வானூர்திகளை கொள்வனவு செய்வது அவர்களிடம் உள்ள வானூர்திகளுக்கான உதவிகளைப் பாதிக்கக்கூடியது.

உதாரணமாக இரு மிக்-27 ரக வானூர்திகளை கொள்வனவு செய்வது கிபீர் வானூர்திகளின் ஆயுத புனரமைப்பு மற்றும் பாராமரிப்புக்களை பாதிக்கலாம்.

உயர்ந்த விலையுள்ள கடந்த ஊதா பார்வைப்புல கருவிகள் கொள்வனவு செய்யப்பட்ட போதும், இரவு பார்வைக்குரிய சாதனங்களோ அல்லது வழிகாட்டும் ஆயுதங்களோ கொள்வனவு செய்யப்படவில்லை என பல குறைபாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க அதிகாரிகள் பின்வருவனவற்றை பரிந்துரை செய்துள்ளனர்:

- தற்போதுள்ள புலனாய்வு, கண்காணிப்பு, கண்டறிதல் வானூர்திகளை முழுமையாக இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் வரையிலும் புதிய கொள்வனவுகள் தேவையற்றது.

- தாக்குதல் நடவடிக்கைகளுக்கு தேவையான உதிரிப்பாகங்களை உடனடியாக கொள்வனவு செய்தல் வேண்டும்.

- தேவை எனில் சி-130, மிக்-27 போன்ற குறைவான வானூர்திகளை விற்பனை செய்துவிட்டு அல்லது தரையில் நிறுத்திவிட்டு அதிகளவில் உள்ள அன்ரனோவ்-32 மற்றும் கிபீர் வானூர்திகளை மறுசீரமைப்பதுடன் எம்.ஐ - 24, எம்.ஐ - 17 போன்றவற்றில் கவனம் செலுத்தவேண்டும்.

- புதிய தாக்குதல் உத்திகளை விருத்தி செய்தல் அதாவது இரவு பார்வைச்சாதானம், மிகவும் அண்மையிலான வானில் இருந்து வானுக்கான தாக்குதல், வானூர்தி மூலம் தரையிறங்குதல் போன்றவற்றை பெறுதல்.

- குறைந்த செலவில் தாக்குதல் உத்திகளை அதிகரித்தல்.

- புதிய வானூர்திகளை கொள்வனவு செய்வதாயின் எம்.ஐ-24 வகை உலங்குவானூர்திகளை கொள்வனவு செய்தல்.

ஆகியன பரிந்துரைக்கப்பட்டன.

சிறிலங்காவுக்கு வந்த அமெரிக்க குழு ஒருங்கிணைக்கப்பட்ட ஆயுதக்குழு, கடற்படைக் குழு, வான்படைக்குழு, சிறிய அளவில் உத்திகளை வகுக்கும் குழு என நான்கு குழுக்களாக பிரிந்து ஆய்வுகளை நடத்தியிருந்தனர்.

இந்த அறிக்கை கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்களான மிலிந்த மொறகொட, ஒஸ்ரின் பெர்னான்டோ ஆகியோரிடமும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடமும் கையளக்கப்பட்டன. ஆனால் ரணில் விக்கிரமசிங்கவிடமும், சந்திரிகாவிடமும் சமர்ப்பிக்கப்படவில்லை.

தற்போது மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் உள்ள மிலிந்த மொறகொட அந்த அறிக்கையை பாதுகாப்பு அமைச்சிடம் சமர்ப்பித்துள்ளார். ஆனால் முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட மூலப்பிரதியை மகிந்த அரசாங்கத்தினால் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்று இக்பால் அத்தாஸ் எழுதியுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.