தமிழக காவல்துறைத் தலைவர் குற்றம் சாட்டுபவராகவும், அதேவேளையில் நீதிபதியாகவும் இருந்து தீர்ப்புச் சொல்பவராகவும் மாறியுள்ளார். இந்த அதிகாரத்தை அவருக்கு யார் கொடுத்தது? எனக் கேள்வி எழுப்பி உள்ளார் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்.
தமிழக காவல்துறைத் தலைவர் முகர்ஜி, தமிழக மீனவர்களைச் சுட்டது விடுதலைப் புலிகள் என்றும், காணமல் போன 12 மீனவர்கள் விடுதலைப் புலிகளின் காவலில் உள்ளனர் என்றும் நேற்று திடீரென வெளியிட்டுள்ள அறிக்கையை கண்டித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே பழ. நெடுமாறன் மேற்கண்டவாறு கேள்வியை எழுப்பி உள்ளார்.
பழ. நெடுமாறன் அவர்களது அறிக்கையின் முழு விபரமாவது:
தமிழக மீனவர்களைச் சுட்டது விடுதலைப் புலிகள் என்றும் காணமல் போன 12 மீனவர்கள் விடுதலைப் புலிகளின் காவலில் உள்ளனர் என்றும் தமிழக காவல்துறைத் தலைவர் முகர்ஜி திடீரென அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
குற்றம் சாட்டுவதும் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவதும்தான் காவல்துறையின் வேலையாகும். குற்றச்சாட்டுக்கள் மெய்ப்பிக்கப்பட்டால் உரிய தண்டனை வழங்குவது நீதிமன்றத்தின் வேலையாகும். ஆனால் தமிழகக் காவல்துறைத் தலைவர் குற்றம் சாட்டுபவராகவும், அதேவேளையில் நீதிபதியாகவும் இருந்து தீர்ப்புச் சொல்பவராகவும் மாறியுள்ளார். இந்த அதிகாரத்தை அவருக்கு யார் கொடுத்தது?
தமிழக மீனவர்களைத் தொடர்ந்து சிங்களக் கடற்படையினர் சுட்டுக்கொன்று வருகிறார்கள் என்பது உலகம் அறிந்த உண்மையாகும். குமரி மாவட்ட மீனவர்களை சுட்டுக்கொன்றவர்கள் சிங்களர்கள்தான் என்பதை உயிர்தப்பிப்பிழைத்த மீனவர்கள் அளித்த வாக்குமூலங்களிலும் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டிகளிலும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்கள்.
ஏப்ரல் 12 ஆம் திகதியன்று இந்தியக் கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் படகில் வந்த 6 சிங்களவர்களை கடலோரக் காவல் படையினர் கைது செய்ததாகவும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்ச்சியில் இவர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என்றும் தமிழகத்தின் அனைத்துப் பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏப்ரல் 13 ஆம் தேதியன்று இந்த 6 சிங்களவர்களும் விசாரணைக்காக கியூ பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்களென்று தமிழக அரசு வெளியிட்டுள்ள பத்திரிகைக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இப்போது திடீரென அந்த 6 பேரும் விடுதலைப் புலிகள் என்று காவல்துறைத் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். எது உண்மை? எதையோ மூடிமறைக்க யாரையோ காப்பாற்ற காவல்துறைத் தலைவரைப் பயன்படுத்துவது அந்தப் பதவிக்கே இழுக்கைத் தேடித்தருவதாகும். குமரி மாவட்ட மீனவர்கள் தங்களைச் சுட்டது சிங்களவர்கள்தான் எனத் திட்டவட்டமாக அறிவித்து அதற்காகப் போராட்டங்களை நடத்திவரும் சூழலில் பிரச்சினையைத் திசை திருப்ப முயற்சி நடைபெறுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழ்நாட்டு மீனவர்கள் யாரையும் விடுதலைப் புலிகள் சுட்டதாகவோ, சிறைப்பிடித்ததாகவோ இதுவரை புகார்கள் எழுந்தது இல்லை. சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலைப் புலிகள் போராடி மீட்டு பத்திரமாக தமிழகத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்களே தவிர, அவர்கள் ஒருபோதும் தீங்கிழைத்தது இல்லை.
தமிழக மீனவர்களே கூறாத ஒரு குற்றச்சாட்டை திடீரென காவல்துறைத் தலைவர் கூறுவது ஏன்?
சிங்களக் கடற்படையும் இந்தியக் கடற்படையும் கூட்டு ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் என்றத் திட்டத்திற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுவிட்டக் காரணத்தினால் இப்படியொரு பொய்யானச் செய்தியைப் பரப்பி கூட்டுரோந்து நடவடிக்கையை நியாயப்படுத்துவதற்காக காவல்துறைத் தலைவர் இந்த அறிக்கை வெளியிட்டுப்பட்டிருப்பதாக நான் குற்றம் சாட்டுகிறேன்.
வான்புலிகளின் சாதனைகளைக் கண்டு உலகமே வியந்து பாராட்டும் இந்த கட்டத்தில் புலிகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் குற்றம்சாட்டி தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கை அழிப்பதற்கான முயற்சி நடைபெறுகிறது. இந்த முயற்சிக்கு காவல்துறைத் தலைவர் ஒத்துழைப்பது என்பது மிகத் தவறான முன் உதாரணமாகும். வரம்பு மீறி செயல்பட்டிருக்கும் காவல்துறைத் தலைவரை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
நன்றி:புதினம்
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.