Sunday, April 15, 2007

சிறீலங்கா அரசு ஊடகங்களை நசுக்குகின்றது - எல்லைகளற்ற ஊடகர் அமைப்பு.!!

சிறீலங்கா அரசாங்கம் ஊடகங்களின் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை நசுக்குவதற்கு பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி வருவதாக, எல்லைகளற்ற ஊடகர் அமைப்பும் கண்டனம் வெளியிட்டுள்ளது. பிரான்ஸை தளமாகக் கொண்ட எல்லைகளற்ற ஊடகர் அமைப்பு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மௌபிம, சண்டே ஸ்ரான்டட் போன்ற பத்திரிகைகளை வெளியிட்ட நிறுவனத்தின் நிதி முகாமையாளர் துஸந்த பஸ்நாயக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். பஸ்நாயக்க விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க எந்தவித ஆதாரங்களும் அரசிடம் இல்லை எனவும், எல்லைகளற்ற ஊடகர் அமைப்பின் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களை விசாரணைகள் இன்றி 12 மாதங்களுக்கு தடுத்து வைத்திருக்க முடியும் என்பதால், சிறீலங்கா அரசு பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொள்வதாகவும், அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிறீலங்கா அரசாங்கம் ஊடகர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி, ஊடக சுதந்திரத்தை நசுக்கி வருவதாக, நியூயோர்க்கை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் கடந்த வியாழக்கிழமை கண்டனம் வெளியிட்டிருந்தது. சிறீலங்காவின் ஊடக சுதந்திரம் பற்றி கருத்துத் தெரிவித்த சுதந்திர ஊடக இயக்கத்தின் பேச்சாளர் சுனந்த தேஸப்பிரிய, சிறீலங்கா அரசு சுதந்திரமான கருத்து வெளிப்பாட்டு உரிமைக்குத் தடையாக இருப்பதாக, கடுமையான கண்டனத்தை வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.