Sunday, April 15, 2007

சிறிலங்காவில் அனைத்துலக விசாரணை ஆணைக்குழு அமைப்பதற்கு அமெரிக்கா ஆதரவு.!!

[ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2007]

"சிறிலங்காவின் அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இடம்பெற்று வரும் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் கவலையை தருகின்றன. மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அரசாங்கம், தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதனை அமெரிக்க ஊக்கப்படுத்துகின்றது. மனித உரிமை மீறல்கள் தொடர்பான முழுமையான விசாரணைகளுக்கு அனைத்துலக விசாரணை ஆணைக்குழுவை அமைப்பதற்கு அமெரிக்கா தனது ஆதரவை வழங்கும்."

கடந்த செவ்வாய்க்கிழமை அமொரிக்காவின் வாசிங்ரனில் அனைத்துலக ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசும் போது அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்திய வெளிவிவகார துணை அமைச்சக தூதுவர் றிச்சர்ட் பெளச்சர் மேற்கண்டாவறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

"மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம், தீவிரமான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். சட்டவியல் அதிகாரிகள் இது தொடர்பாக கவனமான நடவடிக்கைகளை எடுப்பதனை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.

சிறிலங்காவில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள், விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்படும் சிறார் படைச் சேர்ப்பு, பொதுமக்களின் பேரூந்துகள் மீதான குண்டுத் தாக்குதல் என்பன கவலைகளை தருகின்றன.

இங்கே, நாங்கள் இரு காரணிகளை பார்க்க வேண்டும் என நான் நினைக்கின்றேன்.

முதலாவதாக, ஒரு ஜனநாயக நாடான சிறிலங்கா பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவது, விடுலைப் புலிகளால் மேற்கொள்ளப்படும் சிறார் படைச்சேர்ப்பு, பேரூந்துகள் மீதான குண்டு வெடிப்புக்கள் என்பனவாகும்.

இரண்டாவதாக, அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இடம்பெற்று வரும் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அரசாங்கம் உண்மையான விசாரணைகளை நடத்த வேண்டும். சிறிலங்காவின் நீதித்துறையினரால் தெளிவான முறையில் நீதி விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பனவாகும்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பான முழுமையான விசாரணைகளுக்கும், அதற்கு உறுதுணையாக அனைத்துலக விசாரணை ஆணைக்குழுவை அமைப்பதற்கும் அமெரிக்கா ஆதரவு வழங்கும். சிறிலங்காவில் இடம்பெறும் முழு அளவிலான மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் நாம் கவனத்தை செலுத்தியுள்ளோம். எம்மால் அவதானிக்கப்படும் கடுமையான நிலைமைகள் தொடர்பாக நாம் அக்கறை கொண்டுள்ளோம்" என்றார் அவர்.

றிச்சர்ட் பௌசர் சிறிலங்காவில் நடைபெற்று வந்த அமைதி முயற்சிகளில் பங்கு பற்றியவர் என்பதுடன் இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகளுடன் பல கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே "உலகில் மோதல்கள் இடம்பெற்று வரும் நாடுகளில் முன்னனியில் நிற்கும் ஊடகவியலாளர்கள் மிகவும் கடுமையான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். செய்திகளை சேகரிப்பதற்காக தமது உயிர்களையும் அவர்கள் இழக்கின்றனர். சில நாடுகளில் சுதந்திரம் இல்லை என்பதே உண்மை. அங்குள்ள மக்கள் முழுமையான சுதந்திரங்களை அனுபவிப்பதில்லை" என அனைத்துலக ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசும் போது அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் கொண்டோலீசா றைஸ் தெரிவித்துள்ளார்.

நன்றி:புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.