Thursday, April 26, 2007

இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவு விநியோகம் தற்போதும் பெரும் நெருக்கடியில் உள்ளது: ஐ.நா.

[வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2007]

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெயர்ந்துள்ள 140,000 மக்களுக்கான உணவு விநியோகத்தில் ஒரளவு முன்னேற்றம் ஏற்பட்ட போதும், முழு அளவிலான உணவுத் தேவைகைளை எட்டுவதற்கு அரசாங்க அதிகாரிகளும், உதவி நிறுவனங்களும் முயற்சி எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ள மக்களுக்கான உணவு விநியோகத்தை சீர்செய்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ள 18,000 மக்களுக்கான உணவு விநியோக வழிகளை ஆராய்ந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக அமைப்பு தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை கடந்த பெப்ரவரி மாதம் 79,000 ஆக இருந்த போதும் மார்ச் மாதம் நடைபெற்ற இராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து அது 160,000 ஆக அதிகரித்திருந்தது. எனினும் தற்போது 140,000 மக்களே இடம்பெயர்ந்து வாழ்வதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் உள்ள இடம்பெயர்ந்த மக்களில் 50 வீதத்தை விட அதிகமான மக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெயர்ந்துள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்களுக்கான மேலதிக உணவுத் தேவைக்கான தமது கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும், தற்போதுள்ள உணவுக் கையிருப்பு எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு போதுமானது எனவும் உலக உணவு திட்டத்தின் நாட்டுக்கான பணிப்பாளர் ஜெப்ஃ ரப்ஃ டிக் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

எமக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மத்திய அவசர நிதி உதவி மற்றும் யப்பானின் நிதி உதவிகள் கிடைத்துள்ளன. அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் தமது வளங்கல்களை அதிகரித்துள்ளன.

வடக்கு - கிழக்கில் உள்ள இடம்பெயர்ந்த 400,000 மக்களின் உணவுத் தேவைகளுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒரு வாரத்திற்கு தேவை.

இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவியில் மட்டக்களப்புக்கு விநியோகிக்க என ஜப்பான் 3,175 மெற்றிக் தொன் அரிசியை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. அதில் 422 மெற்றிக் தொன் இங்கு வந்து சேர்ந்துவிட்டது. இது 100,000-க்கும் அதிகமான மக்களின் உணவுத் தேவைக்கு போதுமானது.

எதிர்வரும் ஜூன் மாதம் வரையிலும் விநியோக வழிகள் பாதுகாப்பாக உள்ளன. எமக்கு சில உதவிகள் நிதியாகவும் கிடைத்துள்ளன. அதனைப் பயன்படுத்தி நாம் விநியோகங்களை பெற்றுக் கொள்ள முடியும். உள்ளுரில் கொள்வனவு செய்யப்படும் இந்த உணவுப் பொருட்களின் மூலம் நேரச் செலவு மீதப்படுத்தப்படுவதுடன், உள்ளுர் பொருளாதாரமும் உயர்வடையும்.

70 வீதமான உணவுத் தேவைகளை நாம் நிறைவேற்றுகின்ற போதும் மிகுதியை அரசாங்க மற்றும் உள்ளுர் நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. நாம் மாதம் தோறும் 1,500 மெற்றிக் தொன் நிறையுள்ள அரிசி, கோதுமை மா, பருப்பு, சீனி, சமயல் எண்ணை போன்றவற்றை வழங்குகின்றோம் என்றார் அவர்.


நன்றி:புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.