Thursday, April 26, 2007

புலிகளின் வான்பலம் அழித்தொழிக்கப்படும் -விமானப் படையினர் சூளுரைப்பு. !!

[வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2007]

விடுதலைப் புலிகளின் வான் பலத்தை அழித்தொழிக்கப் போவதாக விமானப் படையினர் சூளுரைத்துள்ளனர்.

பலாலி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளின் விமானப் படை தாக்குதலை நடத்திய மறுநாள், புலிகளின் வான் பலத்தை அழிக்கப் போவதாக விமானப் படையினர் சூளுரைத்துள்ளனர்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே இவ்வாறு சூளுரைக்கப்பட்டுள்ளது.

பலாலியில் புலிகள் நடத்திய தாக்குதலுக்கு அவர்கள் ஒரு விமானத்தையே பயன்படுத்தியதாகவும் புலிகள் கூறியது போல் இரு விமானங்கள் அங்கு தாக்குதல் நடத்த வரவில்லையென்றும் செய்தியாளர்களிடம் விமானப் படை பேச்சாளர் குறூப் கப்டன் அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன், புலிகளது இந்த விமானம் அப்பகுதியில் சுமார் எட்டு நிமிடங்களே பறந்ததாகவும் தெரிவித்தார்.

புலிகளின் விமானத்தை நோக்கி தரைப் படையினர் தாக்குதல்களைத் தொடுத்ததால் அந்த விமானத்திற்கு சேதங்கள் ஏற்பட்டிருக்கலாமெனவும் எனினும் அந்த விமானத்தை தரைப்படையினரால் சுட்டு வீழ்த்த முடியாது போய்விட்டதாகவும் கூறினார்.

விடுதலைப் புலிகள் வசமுள்ள விமானங்களை அழிப்பதே தற்போது தங்கள் அதி முன்னுரிமையான திட்டமெனவும் தெரிவித்தார். இதேநேரம் இந்தச் செய்தியாளர் மாநாட்டில் அஜந்த டி சில்வாவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்கவும் கூறுகையில்;

வானில் தாழப் பறந்து தாக்குதல் நடத்த வரும் புலிகளின் விமானங்களை தாக்கி அழிக்க புதிய தொழில் நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளதாக இராணுவ மற்றும் விமானப் படை பேச்சாளர்கள் தெரிவித்தனர்.

ராடரில் சிக்காமல் தாழப் பறந்து வந்து தாக்கிவிட்டு திரும்பிச் செல்லும் புலிகளின் வான் நடவடிக்கைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

அதற்கான வியூகங்கள், ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த இரகசியங்களை வெளியிட முடியாது.

ராடரில் சிக்காது தாழப் பறக்கும் விமானங்களை கண்டறிந்து சுட்டு வீழ்த்த வான் படை புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தவுள்ளது.

இத் தொழில்நுட்பத்தை மீறி இனிமேல் புலிகளின் விமானங்கள் பறக்க முடியாது. புலிகளின் விமானமொன்று பலாலி படைத் தலைமையகத்தை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுவிட்டதாக தவறான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை பலாலி விமானத் தளத்தை தாக்கும் நோக்குடன் புலிகளின் சிறிய விமானமொன்று வருவது தெரிய வந்ததும், படையினர் உஷாரடைந்து அந்த விமானத்தை நோக்கி தாக்குதல் தொடுத்தனர். அதனால் அவர்களின் நோக்கம் நிறைவேறாது போகவே அந்த விமானம் தப்பிச் சென்றுள்ளது.

பலாலி விமானப் படைத்தளமுள்ள பாதுகாப்புப் பகுதிக்குக் கூட வர முடியாமல் போன அந்த விமானத்தினால் எவ்வாறு பலாலித் தளம் மீது தாக்க முடியும்?

பின்வாங்கிச் சென்ற போது அந்த விமானத்திலிருந்து மயிலிட்டி பகுதியில் 3 குண்டுகள் வீசப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு, வீடுகள் மீதும் ஒன்று வீதியிலும் வீழ்ந்து வெடித்துள்ளன.

பூநகரியிலிருந்து ஏவப்பட்ட மோட்டார் குண்டுகள் வீழ்ந்தே படையினர் 6 பேர் பலியாகினர்.

இச்சம்பவம் நடந்த போது அந்த வான் பரப்பில் ஆளில்லா கண்காணிப்பு விமானமொன்று பறந்ததுடன் அதன் மூலம் கிடைத்த தகவலின்படி பூநகரி மோட்டார் ஏவுதளம் அழிக்கப்பட்டது.

புலிகளின் விமானம் 200 மீற்றர் உயரத்தில் 8 நிமிட நேரம் மட்டுமே பறந்துள்ளது. அதனால், அதனை சுட்டு வீழ்த்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. முதலில் முகமாலைப் பகுதியில் கேட்ட சத்தம் மூலம் மர்ம விமானம் தொடர்பாக தகவல் பலாலி விமானத்தலைமையகத்திற்கு தெரியப்படுத்தப்பட்டது. அந்த விமானம் கடலோர வழியாக பறந்து வந்து பின் கடல் வழியாக விடத்தல்தீவுப் பக்கமாக தப்பிச் சென்று விட்டதாகவும் தெரிவித்தனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.