Thursday, April 12, 2007

தென்னிலங்கை அரசியல் தலைமைகள் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே ,!!

[வியாழக்கிழமை, 12 ஏப்ரல் 2007] பௌத்த மத மறுமலர்ச்சி என்ற சுலோகத்தின் கீழ் சிங்களத் தேசியவாதப் போக்கு என்ற கருத்தியல் தென்னிலங்கையில் மேலாண்மை வடிவம் பெற்று பூதாகரமாக விஸ்வரூபம் எடுத்தது. அது தமிழர் மீதான காழ்ப்புணர்வைப் பலமாக (அ)கோரமாக வெளிப்படுத்தியது. இதுவே கடந்த நூற்றாண்டின் இலங்கைத் தீவின் வரலாற்றின் அடிநாதம் அடிப்படை எனலாம். இந்த பௌத்த, சிங்கள மேலாண்மைக் கருதியலோடு ஒன்றித்து அசைந்த அரசியல் கட்சிகளினால் மட்டுமே தென்னிலங்கையில் ஜனநாயகம் என்ற கேலிக்கூத்து வரையறைக்குள் நின்று பிடித்து நிமிர முடிந்தது. இதைமீறி, நியாயம் இன்னதுதான் என்பதை உரைக்க அல்லது அதன்வழி செயற்பட முயன்ற சக்திகளும் கட்சிகளும் தென்னிலங்கையில் அடிபட்டுப் போயின. கடந்த நூற்றாண்டில் பெரும் திமிரோடு அங்கு எழுந்த பேரினவாதச் சிந்தனைக்கு வீச்சுக்கு ஈடுகொடுக்காமல், அரசியல் நடத்த முடியாது என்பதை உணர்ந்து கொண்ட தெற்கின் பிரதான அரசியல் கட்சிகள் அதனால் அந்தப் பேரினவாத சகதிக்குள் முற்றாகத் தம்மை மூழ்கடித்துக் கொண்டன. அதேபோல புதிதாக உருவாக்கம் பெற்ற அடுத்த நிலைக் கட்சிகளும் கூட, ஜனநாயக வழிமுறைகளின் கீழ் செல்வாக்கைப் பெருக்கி, வாக்கு வங்கியை வளர்த்து, தம்மை நிலைப்படுத்தி, ஸ்திரப்படுத்த பேரினவாதமே உதவும் என்பதை உணர்ந்து அரசியலில் நிலைபெறுவதற்கான குறுக்கு வழியாக பேரினவாதக் கருத்தியலையே தமது பாதையாக வரித்துக் கொண்டன. பொதுவாகவே, வர்க்கம், சுரண்டலுக்கு எதிரான சிந்தனை, சமத்துவம் என்ற சிந்தனைப்போக்கில் செயலாற்றும் இடதுசாரிகளால் கூட, இந்தப் பேரினவாதப் புயலுக்கு எதிராக நிமிர்ந்து நிற்கமுடியவில்லை. ஆரம்பத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான இந்தத் தேசிய ஒடுக்குமுறையைக் கண்டித்துக் குரல் எழுப்பிய அவர்கள், அதனால் தென்னிலங்கை அரசியலில் ஆதரவு திரட்ட முடியாமல் அடிபட்டுப்போக, காலப்போக்கில் அவர்களும் பேரினவாத சிந்தனைப் போக்கை விரும்பியோ, விரும்பாமலோ ஏற்றுக் கொண்டு அந்தச் சேற்றுக்குள் தாமும் போய் வீழ்ந்துகொண்டனர். இப்படித்தான் தென்னிலங்கை அரசியல் முற்றும் முழுதாக பௌத்த சிங்கள மேலாண்மைப் போக்குக் கருத்தியலில் தோய, அதன் வெளிப்பாடாக சிறுபான்மைத் தமிழர்களுக்கு எதிரான தேசிய ஒடுக்குமுறை இலங்கைத் தீவில் முனைப்புற்று உச்சம் பெற்றது. இந்தத் தேசிய ஒடுக்குமுறையின் விளைவே இன்று பெரும் இனப்போராக கோர யுத்தமாக வெடித்து, இத் தீவைப் பேரழிவுக்குள்ளும் பேரனர்த்தத்துக்குள்ளும் ஆழ்த்தி நிற்கின்றது. இந்தப் பேரவலத்துக்கு மூல காரணி பெரும்பான்மையினரின் இனவாதச் சிந்தனைப் போக்கே என்பதை அவர்கள் இன்னும் உணராமல் அல்லது உணர விரும்பாமல் இருப்பதே இந்தத் தீவின் சாபக்கேடாகும். தென்னிலங்கையின் பிரதான கட்சிகளுள் ஒன்றான ஐ. தே. கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இந்தப் பேரினவாதச் சிந்தனையிலிருந்து விடுபட்டவராகத் தம்மைக் காட்டுவதற்கு முயன்றார். எனினும், அவரும், அவரது கட்சியினரும் கூட அந்த சேற்றிலிருந்து மீண்டவர்களாக இல்லை என்பதுதான் உண்மை. "ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பதுபோல ரணிலின் கொள்கைப் போக்கைத் தமிழர் அளவிட ஒரு விடயத்தை எடுத்துக் கொள்ளலாம். தமிழர் தாயகம் மீது இப்போது பெரும் போர் தொடுக்கப்பட்டிருக்கின்றது. இதை வழிப்படுத்துபவர் ஜனாதிபதியின் சகோதரரும், பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷதான் என்பது எல்லோருக்கும் தெரிந்த சங்கதியே. அவரைப் பதவிநீக்கிவிட்டு அவரின் இடத்துக்கு தற்போது ஆஸ்திரேலியாவில் இலங்கைத் தூதுவராகப் பணியாற்றும் ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரல் ஜானக பெரேராவை நியமிக்க வேண்டும் என்று கோரியிருக்கின்றார் ரணில் விக்கிரமசிங்க. அப்படி நேர்ந்தால், தமிழரைப் பொறுத்தவரை அது "சட்டியிலிருந்து அடுப்புக்குள் வீழ்ந்த' கதைதான். இப்போது தமிழர்களைப் பெரும் துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளியிருக்கும் பல்வேறு அம்சங்களில் முக்கியமானது ஆட்கள் கடத்தப்படுதல், காணாமற் போகச் செய்தல் போன்ற மனித உரிமைமீறல் செயற்பாடு. தமது இராணுவப் பதவிக்காலத்தில் இதே விவகாரத்துக்காக மோசமாகக் குற்றம் சுமத்தப்பட்டவர் ஜெனரல் ஜானக பெரேரா. 1995 96 இல் யாழ். குடாநாட்டை இலங்கை அரசுப் படைகள் கைப்பற்றிய கையோடு பலநூறு தமிழ் இளைஞர்கள் கைதாகிப் பின்னர் காணாமற் போயினர். இவர்களில் பலர் செம்மணியில் மண்ணோடு மண்ணாகினர் என்று கருதப்படுகின்றது. செம்மணி உட்பட ஆட்கள் காணாமற்போன பிரதேசங்களில் ஜெனரல் ஜானக பெரேராவை தளபதியாகக் கொண்ட இராணுவ டிவிஷன்தான் நிலை கொண்டிருந்தது. இப்போதுபோல, அச்சமயம் அங்கு எழுந்த காணாமற்போவோர் பிரச்சினை, அந்த டிவிஷன் பொறுப்பிலிருந்து ஜெனரல் ஜானக பெரேரா இடமாற்றம் பெற்று, வெளிநாட்டுப்பயிற்சிக்குப் புறப்பட்ட பின்னர் ஓரளவு முடிவுக்கு வந்தது என்பதும் மறக்கற்பாலதல்ல. மீண்டும் வெளிநாட்டுப்பயிற்சியை முடித்து ஜெனரல் ஜானக பெரேரா கிழக்கில் மட்டக்களப்பில் பொறுப்பை ஏற்றதும் "கல்லுளி மங்கன் போனவழி காடுமேடெல்லாம் தவிடுபொடி' என்பதுபோல மட்டக்களப்பில் காணாமற் போவோர் பிரச்சினை மீண்டும் தலையெடுத்து விஸ்வரூபம் எடுத்ததும் மறைக்கக் கூடிய விடயமல்ல. ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரலான ஜானக பெரேரா ஆஸ்திரேலியாவுக்கான தூதுவராக நியமிக்கப்படுவதை எதிர்த்து அவருக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பெரும் ஆர்ப்பாட்டங்களை புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழர்கள் நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது. அத்தகைய ஒருவரை பாதுகாப்புச் செயலாளர் பதவிக்கு முன்மொழிவதன் மூலம் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் தனது பேரினவாத எண்ணப்போக்கை வெளிப்படுத்துகின்றார் என்றே தமிழர்கள் கருதவேண்டியிருக்கின்றது. தென்னிலங்கை அரசியல் தலைமைகள் "ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தாம்' என்பதும் நிரூபணமாகி வருகின்றது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.