[ஞாயிற்றுக்கிழமை, 25 பெப்ரவரி 2007] நீதியமைச்சர் டிலான் பெரேராவும் சட்டமா அதிபர் கே.சி.கமலசபேசனும் தமது குறைகளை கேட்டறிவதற்கு சிறைச்சாலைக்கு வருகை தரவேண்டும் என்று புதிய மகசீன் சிறைச்சாலையில் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தம்மை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி தமிழ் அரசியல் கைதிகள் 21 பேர் கடந்த புதன்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். நேற்று மூன்றாவது நாளாகவும் கைதிகளின் உண்ணாவிரதம் தொடர்ந்து நடைபெற்றது. உண்ணாவிரதம் இருந்துவரும் கைதிகளை மலையக மக்கள் முன்னணியின் எம்.பி.யும் பிரதியமைச்சருமான பெ.இராதாகிருஷ்ணன் நேற்று சிறைச்சாலைக்கு விஜயம் செய்து பார்வையிட்டார்.





