Tuesday, February 27, 2007

மட்டக்களப்பில் ஆட்டிலறி தாக்குதலில் அமெரிக்க உயர்ஸ்தானிகர் உட்பட 12 பேர் காயம்.

[செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2007]

மட்டக்களப்பு நகரில் உள்ள சிறிலங்கா விமானப்படையினரின் விமான ஓடுபாதையை நோக்கி நடத்தப்பட்ட எறிகணை வீச்சில் சிறிலங்காவிற்கான அமெரிக்க தூதுவர் றிச்சர்ட் ஓ பிளேக், இத்தாலிய தூதுவர் பியோ மரியானி ஆகியோர் எறிகணையின் சிதறல்களால் சிறுகாயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.40 மணியளவில் இடம்பெற்றது.


ஏறத்தாழ 15 தூதுவர்களும் ஏனைய உயரதிகாரிகளும் மட்டக்களப்பு நகருக்கு பயணத்தை மேற்கொண்டதாகவும் அவர்கள் உலங்குவானூர்தியை விட்டு இறங்க முற்பட்ட வேளை எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, சிறிலங்காவின் பேரனர்த்த நிவாரண அமைச்சரை ஏற்றிச் சென்ற 2 உலங்குவானூர்திகள் மட்டக்களப்பில் வெபர் விளையாட்டரங்கில் தரையிறக்கிய போது நடத்தப்பட்ட 122 மி.மீ ஆட்டிலெறி எறிகணை வீச்சுத் தாக்குதலில் இருந்து 2 உலங்குவானூர்திகள் மயிரிழையில் தப்பியதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் காயமடைந்த அமெரிக்க தூதுவர் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் இத்தாலிய தூதுவர் மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதலில் 2 சிறிலங்கா விமானப் படையினரும், காவல்துறையைச் சேர்ந்த ஒருவரும் 2 சிறப்பு அதிரடிப்படையினரும், பொதுமகன் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.

இத் தாக்குதலையடுத்து தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள மேலும் தெரிவித்தன..