Friday, October 11, 2013

ஒடிசாவை நெருங்கியது பாய்லின் புயல்: மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்

வங்கக் கடலில் அந்தமான் அருகில் உருவான பாய்லின் புயல், மிகவும் வலுவடைந்து வடமேற்கு நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. ஒடிசாவின் கோபால்பூரில் இருந்து சுமார் 450 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ள இந்த புயல் நாளை மாலை ஆந்திராவுக்கும் ஒடிசாவுக்கும் இடையில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது சராசரியாக 200 கி.மீ. வேகத்தில் காற்று வீசலாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

புயல் நெருங்கி வருவதால், இரண்டு மாநிலங்களிலும் இன்று மாலை மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இந்த மழை தீவிரமடைவதுடன் பலத்த காற்றும் வீசும் என்றும், இதனால் வீடுகள், தொலைத்தொடர்பு மற்றும் மின் திட்டங்கள், விவசாயப் பயிர்கள் பெருமளவில் சேதம் ஏற்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து இரு மாநிலங்களிலும் கடலோர பகுதிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த புயலின் தாக்கத்தால் வடக்கு சத்தீஷ்கர், தெற்கு ஜார்க்கண்ட், கிழக்கு உத்தர பிரதேசம் மற்றும் பீகாரில் சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

அமெரிக்காவைத் தாக்கிய கேத்ரினா புயல் போன்று கடும் பாதிப்புகளை, பாய்லின் புயல் ஏற்படுத்தும் என்று வானியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

இந்த புயலால் 1.2 கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் எதிர்பார்த்ததை விட நிலைமை மோசமாக இருப்பதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது.

அவசர கால மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்கும்படி ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினரை பாதுகாப்புத்துறை மந்திரி ஏ.கே.அந்தோணி கேட்டுக்கொண்டுள்ளார். 

இதற்கிடையே புயல் தீவிரமடைந்திருப்பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் தனது கவலையைத் தெரிவித்துள்ளார். மேலும் புயலால் பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.