Sunday, September 01, 2013

இன,மதம் எதுவாக இருந்தாலும் சகவாழ்வு முக்கியமானது: வாகரையில் ஜனாதிபதி மகிந்த


ஒரு நாட்டிற்குள் வாழும் போது இனம், மதம் என்பன எதுவாக இருந்தாலும் அமைதியும் சகவாழ்வுமே முக்கியமானது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்தில் சுனாமி பேரலையால் சேதமடைந்த புனித பேதுருவானவரின் தேவாலயத் திறப்பு விழாவும், திருப்பலி நிகழ்வும் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் பசீர் சேகுதாவூத், பிரதியமைச்சர்களான விநாயகமூர்த்தி முரளிதரன், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் ஜயவிக்கிரம, வாகரை பிரதேச செயலாளர் செல்வி. ஆர். இராகுலநாயகி, மறைமாவட்ட ஆயர் யோசப் பொன்னையா ஆண்டகை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மீள்நிர்மானிக்கப்பட்ட நிலையில் இவ்தேவாலயம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி,
சகலரும் ஒத்துழைப்புடன் வாழ்வதன் மூலம் சுதந்திரம் மற்றும் அமைதியான நாட்டை கட்டியெழுப்ப முடியும்.
வைராக்கியம், குரோத மனபான்மைகளை கைவிட்டு, அமைதியாகவும் ஐக்கியமாகவும் சகவாழ்வுடன் வாழவேண்டும் என்று கடந்த காலத்தில் சகல மதத் தலைவர்களுக்கு போதித்தவை அன்றைய காலத்தை விட இன்று மிகவும் முக்கியமானதாக உள்ளது.
மூன்று தசாப்தங்களாக போரினால் பாதிக்கப்பட்டிருந்த வாகரை பிரதேசம் துரிதமான முன்னேற்றத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கின்றது.
வளர்ச்சியடைந்து வரும் நாட்டில் எதிர்கால சந்ததியினரை நல்வழிக்கு கொண்டு வரவேண்டிய பொறுப்பு சகல மதத் தலைவர்களுக்கு இருக்கின்றது.
தற்போதைய அரசாங்கம் சகல மதங்களை சரிநிகர் சமமாக கருதும் அரசாங்கம். சகல மதங்களை சர்ந்தவர்களின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.