Saturday, May 18, 2013

லண்டன் முள்ளிவாய்க்கால் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கெடுப்பு


பிரித்தானிய தமிழர் பேரவையினால்  லண்டனில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட  முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில்  பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர்.
இப்பேரணியில் கலந்து கொண்டவர்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மகாநாட்டில் கலந்து கொள்வது என்ற பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனின் முடிவுக்கு தமது கண்டனத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியிருக்கிரார்கள்.
பிப 1.30 மணிக்கு Hyde Park இல் ஆரம்பமான ஊர்வலம் மாலை 4 மணிக்கு Waterloo Place சென்றடைந்தது. மாலை 3 மணிக்கு Waterloo Place இல் பொதுக் கூட்டம் ஆரம்பமாக இருந்த போதும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பேரணியில் கலந்து கொண்டதால் சுமார் 1மணி நேரம் தாமதமாகியே Waterloo Place ஐ பேரணி சென்றடைந்தது.
பேரணியில் கலந்து கொண்ட மக்கள் இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் மகாநாட்டில் கலந்து கொள்வது என்ற பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனின் முடிவு மற்றும் தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலையை தடுப்பதற்கு தவறிய ஐ.நா ஆகியவற்றை கண்டிக்கும் நூற்றுக்கணக்கான பதாகைகள் மற்றும் சுலோக அட்டைகள் ஆகியவற்றை ஏந்தியும் கோசங்களை எழுப்பியும் சென்றனர்.
பேரணி நகர்ந்து சென்ற இடம் லண்டன் நகரின் மைய பகுதியாக இருந்ததால் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும் பிரித்தானிய மக்களும் இந்த பேரணியை பார்வையிட்டனர்.
தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையினை வேற்றின மக்களுக்கு எடுத்துக்காட்டும் நிகழ்ச்சிகளும் கவனத்தை ஈர்த்தன. மாலை 4 மணி அளவில் Waterloo Place இல் பிரம்மாண்டமான அளவில் பொதுக்கூட்டம் ஆரம்பமானது.
இதில் இந்தியாவில் இருந்து வந்து கலந்து கொண்டிருக்கும் இந்திய கம்யூனிச கட்சியின் தமிழ்நாட்டு தலைவரும் இந்திய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தா.பாண்டியன், உலக தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவல் அடிகளார் மற்றும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றியதுடன் உலக தமிழர் இயக்க தலைவர் பழ நெடுமாறன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றகழக பொதுச் செயலாளர் வை. கோபாலசாமி மற்றும் பலரது உரைகள் திரையில் ஒலிபரப்பு செய்யப்பட்டது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.