Thursday, April 04, 2013

ஈழத்து மக்களுக்காக... உங்கள் சகோதர, சகோதரிகளுக்காக ஒருசில நிமிடங்கள் என்னோடு பேசுங்கள்!- காசி ஆனந்தன்


தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் எங்களுக்காகப் போராடும் என் இரத்தச் சொந்தங்களான மாணவச் செல்வங்களுக்கு முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சினிமா, மட்டை விளையாட்டு, பேருந்து நாள் கொண்டாட்டம், முகநூல் இவற்றில் தொலைந்து போனவர்கள் தமிழக மாணவர்கள் என்கிற தப்பிதமான கருத்துகளைத் தகர்த்தெறிந்துவிட்டது உங்கள் உணர்வுப் போராட்டம்.

அந்த எழுச்சி எப்படி சாத்தியப்பட்டது என்பது தெரியுமா..? நான் சொல்லவா?

ஈழம் குறித்த சரியான புரிதல் உலகில் யாருக்கும் இல்லை என்பேன் நான்.

ஈழப் பிரச்னையில் உலகத்துக்கான பார்வைகள் மாற வேண்டும்.
உதாரணத்துக்கு, அங்கு நடந்த விடுதலைப் போரைக் கொச்சைப்படுத்துவது, சிறுமைப்படுத்துவது மாற வேண்டும்.

இன்னும் பல விடயங்களில் உலகின் பார்வை ஆரோக்கியமானதாக எப்படி மாற வேண்டும் என்பதைச் சொல்கிறேன்.

இங்கு தமிழ்நாடு என்று வாய் நிறையச் சொல்கிறீர்கள். ஆனால், அங்கு மட்டும் 'தமிழ் ஈழம்’ என்று மனமுவந்து சொல்ல என்ன தயக்கம்?

இதன் பின்னால் இருக்கும் அரசியல் என்ன? சொல்கிறேன், கேளுங்கள்.

பலர் காஷ்மீர் பிரச்னையுடன் ஈழப் பிரச்னையை ஒப்பிடுகிறார்கள். எவ்வளவு பெரிய அபத்தம் தெரியுமா அது?

காஷ்மீரில் ஒருவர் இந்தியப் பிரதமர் ஆக முடியும். ஆனால், தமிழர் ஒருவர் இலங்கை அதிபர் ஆக முடியுமா?

காஷ்மீரிலும் பிரச்சினைகள் இருக்கின்றன... மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்... நான் இல்லை என்று சொல்லவில்லை.

காஷ்மீர் மக்களின் போராட்டங்களையும் கொச்சைப்படுத்தவில்லை.

ஆனால், காஷ்மீர் மக்களின் பிரச்சினைகளுக்கும் இலங்கைத் தமிழர்கள் சந்திக்கும் கொடுமைகளுக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது தெரியுமா?

நண்பனின் நண்பன் நமக்கு நண்பனே. ஆனால், எதிரியின் நண்பன்? நட்பு நாடு என்று நீங்கள் அழைக்கும் இலங்கை உங்கள் எதிரிகளுடன் எப்படியெல்லாம் இறுக்கமாகக் கைகோத்துள்ளது தெரியுமா?

ஆனால், என்றைக்குமே இந்தியாவை எதிரியாகப் பார்க்காத... உளமார்ந்த நண்பனாக மட்டுமே பார்த்துப் பழகிப்போன நாங்கள் என்றேனும் பாகிஸ்தான் போன்ற இந்திய விரோத சக்திகளோடு கைகோத்து இருக்கிறோமா?

இன்னும் விவரமாகச் சொல்கிறேன். உண்மையை உணருங்கள்!
ஒரு நாட்டின் இறையாண்மைக்குள் தலையிடக் கூடாது’ என்கிறார்கள். இறையாண்மையின் உண்மையான பொருள் என்னவென்று தெரியுமா?

உயிரைத் தவிர, அனைத்தையும் இழந்து நிற்கும் பாவப்பட்ட எம் ஈழத்து மக்களுக்காக... உங்கள் சகோதர, சகோதரிகளுக்காக ஒருசில நிமிடங்களை ஒதுக்குவீர்கள்தானே... எம் சனங்களின் நிதர்சனம் புரிந்துகொள்ள விரும்புவீர்கள்தானே...

4.4.2013 முதல் 10.4.2013 வரை 044 - 66802911*எண்ணில் என்னை அழையுங்கள். உண்மை பேசுவோம். 
அன்புடன்
காசி ஆனந்தன்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.