Sunday, March 17, 2013

மாமனிதர் நவசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு.


அனைவராலும் N.S.மூர்த்தி என அழைக்கப்பட்ட டாக்டர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று நடைபெற்றது.
மேற்கு லண்டன் Balham பகுதியில் அமைந்துள்ள Memon Centre மண்டபத்தில் (Memon Centre, 3 Weir road, Balham, SW12 0PS) இன்று ஞாயிற்றுக்கிழமை அவரின் இறுதிவணக்க நிகழ்வுகள் நடைபெற்றது.
மாமனிதர் சத்தியமூர்த்தி அவர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக பல வருடங்கள் தன்னை அர்ப்பணித்துப் பணியாற்றியவரும் பள்ளிப் பருவம் முதல், இறுதிக்காலம்வரை தமிழ் மக்களின் விடுதலை பற்றியே சிந்தித்துச் செயலாற்றியவரும் .தமிழீழ மக்களாலும், தலைமையாலும் ஆழமாக நேசிக்கப்பட்ட ஒரு மாமனிதர். 
இலங்கைச் சிறையில் அடைக்கபட்டு கை, கால்கள் அடித்து முறிக்கப்பட்ட பின்னரும், பல இளைஞர்களின் உயிர்களைக் காக்கும் மருத்துவப் பணியையும், கால்களை இழந்தவர்களுக்கு செயற்கைக் கால் பொருத்துதல், பெற்றோரை இழந்த சிறார்களைப் பராமரித்தல் போன்ற பல தொண்டுகளைச் செய்த மாபெரும் மனிதர் ஆவார்.

இனவாத அரசின் நெருக்கடிகளால் அவரும் அவரது குடும்பத்தினரும் பல இன்னல்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்த போதிலும், தாயகத்திலும், இந்தியாவிலும், பின்னர் லண்டனிலும் தனது கொள்கையில் இறுதிவரை உறுதியாக நின்று தமிழ் மக்களின் விடிவுக்காக தன்னை அர்ப்பணித்த, போற்றுதற்குரிய மாமனிதர்.
1985ஆம் ஆண்டு இந்தியாவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முதலாவது தலைவராக இருந்து வழி நடத்தி, அந்த அமைப்பு தாயகத்தில் பல்வேறு தொண்டுப் பணிகளைச் செய்ய வித்திட்டவர். பின்னர் பிரித்தானியாவில் வெண்புறா தொண்டமைப்பை நிறுவி பல்வேறு பணிகளை முன்னெடுத்தவர்.

‘மாமனிதர்’ என்ற தமிழீழத்தின் அதியுயர் பட்டம் அளிக்கப்பட்டுள்ள இந்த அரும்பெரும் மனிதனின் இறுதி வணக்க நிகழ்வில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.
பிரித்தானியாவில் நடைபெறும் இன்றைய இறுதி வணக்க நிகழ்வில் வெளிநாடுகளில் இருந்தும் பலர் கலந்துகொள்ளுகின்றனர். இதேவேளை, இன்று இத்தாலியிலும் மாமனிதர் சத்தியமூர்த்தி அவர்களிற்கான வணக்க நிகழ்வு நடைபெறுகின்றது. யேர்மனி, பிரான்ஸ், நோர்வே, சுவிஸ் போன்ற நாடுகளில் ஏற்கனவே இவ்வாறான வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
இரண்டாம் இணைப்பு
மாமனிதர் நமசிவாயம் சத்தியமூர்த்தியின் இறுதி வணக்க நிகழ்வு ஆயிரக்கணக்கான மக்களின் பற்கேற்புடன் இன்று நடைபெற்றது.
தமிழீழ தேசியக் கொடியை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் தனம் ஏற்றி வைக்க, அதனைத் தொடர்ந்து வெண்புறா அமைப்பின் கொடியை அதன் நிர்வாகப் பொறுப்பாளர் பொன்.சத்தியசீலன் ஏற்றினார்.
அக வணக்கத்தையடுத்து, பொதுச்சுடரை தென்மேற்கு லண்டனின் செயற்பாட்டாளர் லிங்கம் ஏற்றி வைக்க, புகழுடலுக்கான தேசியக் கொடி மரியாதை செலுத்தப்பட்டு, அது மாமனிதரின் புகழுடலுக்குப் போர்த்தப்பட்டது.
இதனையடுத்து மாமனிதர் சத்தியமூர்த்தியின் மனைவி, பிள்ளைகள் மலர் வணக்கத்தை தொடக்கி வைக்க, அங்கு வந்திருந்த மக்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று மலர் வணக்கத்தில் ஈடுபட்டனர்.
வணக்க உரைகளை, ருற்றிங் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சத்தீக் கான், மாணவர் பேரவையின் தொடக்குனரும், வெண்புறா அமைப்பின் நிர்வாகியுமான பொன்.சத்தியசீலன், குடும்ப உறவினர்கள்இ மருத்துவர் மூர்த்தியிடம் சிகிச்சை பெற்ற நோயாளி கரன், வெண்புறா அமைப்பின் தொண்டர், மருத்துவர் மூர்த்தியின் மகள் கவிதா, பிரித்தானிய தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முன்னாள் பொறுப்பாளர், மகன் மருத்துவர் இளங்கோ ஆகியோர் நிகழ்த்தினர். கவிதையும் இடம்பெற்றது.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, நோர்வே, டென்மார்க், மற்றும் சுவிஸ் ஆகிய நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன், தமது கிளைகள் சார்பாக வணக்க உரைகளையும் இரங்கல் செய்திகளையும் வழங்கினர்.
இதேவேளை, உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் ஐயா பழ.நெடுமாறன், தமிழீழ உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோரின் வணக்க உரைகள் காணொளி வடிவில் வழங்கப்பட்டன.
மிகவும் உணர்வெழுச்சியுடன் இறுதி வணக்க நிகழ்வு இடம்பெற்ற அதேவேளை, நாளை பிற்பகல் 1:45 முதல் 2:30 வரை சவுத் லண்டன் கிறிமரோறியத்தில் மாமனிதர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் புகழுடலுக்கான இறுதி தகன நிகழ்வுகள் இடம்பெறும்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.