Wednesday, March 14, 2012

இலங்கைக்கு எதிரான ஐ.நா. விவாதத்தில் பசுமைத் தாயகம் பங்கேற்றுள்ளது-டாக்டர் ராமதாஸ்

இலங்கைக்கு எதிராக ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் நடந்து வரும் விவாதத்தில் பாமகவின் பசுமைத் தாயகம் அமைப்பும் பங்கேற்றுள்ளதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றம் தொடர்பாக பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி, ஐ.நா.மனித உரிமை ஆணைய கூட்டத்தில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இதனை ஆதரிப்பது குறித்த அறிவிப்பை குடியரசு தலைவர் உரையில் மத்திய அரசு வெளியிடும் என்று ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும் எதிர்பார்த்தது.

ஆனால் குடியரசு தலைவர் உரையில் இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் வெற்றி பெற செய்வதற்காக தனிப்பட்ட முறையில் நானும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன்.

என்னால் நிறுவப்பட்ட பசுமை தாயகம் அமைப்பு, ஐ.நா.வின் அதிகாரபூர்வ ஆலோசனை அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டு இருப்பதால், மனித உரிமை ஆணைய கூட்டத்தில் பங்கேற்க அதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனை பயன்படுத்தி லண்டனை தலைமை இடமாக கொண்டு செயல்படும் உலக தமிழர் பேரவையின் செய்தி தொடர்பாளர் சுரேன் சுரேந்திரன், அமெரிக்க தமிழ் அரசியல் பேரவையைச் சேர்ந்த மருத்துவர் யசோதா நற்குணம், யேல் சட்டப்பல்கலைக் கழகத்தை சேர்ந்த சட்ட வல்லுநர் தாஷா மனோரஞ்சன்,

தமயந்தி ராஜேந்திரன், இலங்கை மீது அமெரிக்காவில் போர்க்குற்ற வழக்கு தொடர்ந்துள்ள வழக்கறிஞர் அலிபைதூன் ஆகியோர் பசுமை தாயகம் சார்பில் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர்களை சந்தித்து இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த முயற்சிக்கு உலகம் எங்கும் உள்ள தமிழர்கள் ஆதரவும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.

இப்பிரச்சனையில் உலகத் தமிழர்கள் இடையே நிலவும் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை, இந்திய அரசும் ஆதரிக்க வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.