ஐ.நா. மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஆதரிப்பது பற்றிய இந்தியப்பிரதமர் மன்மோஹனின் விளக்கம் உளச்சுத்தியோடு இல்லை. மேலும் நீர்த்துப்போன பயன் இல்லாத மழுப்பலாகவும் உள்ளது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்தத் தீர்மானத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில், மத்திய அரசு இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வாய்மூடி மெüனியாகவே இருந்து வந்தது.
இந்தத் தருணத்தில், ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஐ.நா. மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசைக் கண்டித்து அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது.
அந்த தீர்மானத்தின் மீது இந்திய அரசு இலங்கைக்கு ஆதரவாகச் செயல்படும் என இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாக கருத்துகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டது. உடனே அது குறித்து எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடந்த பிப்ரவரி 29ம் தேதி கடிதம் எழுதினேன்.
இந்தக் கடித்ததுக்கு பதில் வராத நிலையில், இலங்கை அரசைக் கண்டித்து அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் தொடர்பாக கருத்து தெரிவித்த இந்திய அரசு, 'ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு எதிரான தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்காது, உலக அளவில் நடைபெறும் பிரச்னைகளுக்கு பொதுவாக ஆய்வு செய்யும் அடிப்படையில்தான் இந்தியாவின் அணுகுமுறை இருக்கும்' என்று கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
உடனே மீண்டும் இந்த மாதம் 3-ம் தேதி பிரதமருக்கு இது குறித்துக் கடிதம் எழுதி ஐ.நா. சபையின் மனித உரிமைக் குழு கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா உறுதிபட ஆதரிக்க வேண்டும், இலங்கை அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.
இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்ட பிரச்னை தொடர்பாக இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா. சபையின் மனித உரிமைக் குழுவில் கொண்டுவரும் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டும் என நான் கடிதங்கள் எழுதிய நிலையில், திமுக தலைவர் கருணாநிதி, தன் மீது மீண்டும் பழி ஏற்படக் கூடாது என்று எண்ணி, ஒரு கபட நாடகத்தை அரங்கேற்றும் விதமாக பிரதமருக்குக் கடிதங்கள் எழுதினார்.
அந்த நாடகத்தை அரங்கேற்றும் விதமாக திமுக உயர்நிலைக் கூட்டம் மார்ச் 20ம் தேதி கூடும் என அறிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுவில் அமெரிக்காவால் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்ச் 22-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றும், சென்னையில் தன் தலைமையில் உண்ணாவிரதம் நடக்கும் என்றும் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால், இந்த முறை உண்ணாவிரத நாடகத்தைக் கூட அரங்கேற்றாமலேயே, ""இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்'' என பிரதமர் கூறியதாக சொல்லி தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டார்.
மார்ச் 19ம் தேதி மக்களவையில் பிரதமர் பேசும்போது, "அமெரிக்காவால் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தின் இறுதி வடிவம் தன்னிடம் இல்லை. தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் மனப்பாங்கில் இந்திய அரசு உள்ளது. அது இலங்கைத் தமிழர்களுக்கு சுயமரியாதை, சம அந்தஸ்து, கண்ணியம் இவற்றுடன் கூடிய எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டும் என்ற இந்தியாவின் குறிக்கோளுக்கு ஏற்றதாக இருக்கும்' என்றுதான் தெரிவித்துள்ளார்.
இந்த பதிலில் பிரதமர் மனித உரிமைகள் மீறப்பட்டது குறித்து எதையுமே குறிப்பிடவில்லை. மனித உரிமைகள் மீறலுக்காக இலங்கை அரசு கண்டிக்கப்படும் என்றும் கூறவில்லை. இது மழுப்பான, பயனில்லாத பதில்.
கருணாநிதி 2009-ல் உண்ணாவிரதம் இருந்தபோது அந்த நாடகத்தில் ஒரு பாத்திரமாக சிதம்பரம் இருந்து அந்த உண்ணாவிரதத்தை முடித்துக் கொடுத்தார். அதேபோன்று இப்போது பிரதமரே கருணாநிதியின் நாடகத்துக்கு துணைபோகும் வகையில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல் பற்றி எதையுமே குறிப்பிடாமல் தெளிவற்ற ஒரு பதிலை கூறியிருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது என்று கண்டித்துள்ளார் ஜெயலலிதா.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.