Wednesday, February 29, 2012

தமிழ் மக்களின் உணர்வுகளைச் சிதைக்கும் அரசியல் தீர்மானங்களை நிராகரிக்கின்றோம் - யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஜெனிவா மனித உரிமைக்கவுன்சில் மாநாடுட்டில் பங்குபற்றுவது தொடர்பான முடிவினைக் கேள்வியுற்றுத் ஒட்டுமொத்தத் தமிழினமும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றது.

தமிழ் மக்களின் தேசிய அரசியல் பிரதிநிதித்துவமாக தமிழ் மக்கள் அங்கீகரித்திருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமை, மக்களின் மனவிம்பங்களைப் பிரதிபலிக்க வேண்டிய தருணங்களில், மக்களுடனான கலந்துரையாடலின்றி, அவர்களின் விருப்பிற்கு எதிராக, நம்பச் செய்து, இறுதி நேரத்தில் எதிர்பாராத முடிவொன்றினை எடுத்தமையை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

போரில் நாம் இழந்த இழப்புக்களும், எமக்குச் சாதகமானதொரு சூழலைச் சர்வதேசத்தில் உருவாக்குவதற்குப் புலம்பெயர் உறவுகள் காட்டிவரும் அக்கறையினையும், அதற்கான அவர்களின் காத்திரமான பங்களிப்பினையும் பெறுமதியற்றதாக்கும் வகையிலும் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதனையொரு வரலாற்றுத் தவறாகவும் நாம் பதிவு செய்ய விரும்புகின்றோம்.

இவ்வாறான மக்கள் விருப்புக்கு முரணான முடிவுகளை எடுப்பது இது முதற்தடவையல்ல என்பதனையும் ஞாபகம் செய்வதுடன், இத்தீர்மானத்தின் பின்னரான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் மாநாட்டின் காலப்பகுதிக்குள் அதில் பங்குபற்றுவது தொடர்பில் சாதகமான தீர்மானமொன்றினை விரைந்து எடுக்க வேண்டுகின்றோம்.

இன்றைய தேசிய, சர்வதேசிய அரசியல் சூழ்நிலைக்குள் தமிழர் போராட்டமும், தமிழினம் முகங்கொண்ட இன அழிவுகளும் இராஜதந்திர அணுகுமுறைக்குள் முக்கியமானதொரு கருப்பொருளாகப் பார்க்கப்படும் இத்தருணத்தில், அதனைக் கருத்தின்றிச் செல்லுபடியற்றதாக்கும் வகையிலும், இழப்புக்களுக்குப் பொருளற்றதாக்கும் வகையிலும் எவரேனும் செயற்படுவதை அனுமதிக்க முடியாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நிகழ்ச்சி நிரலானது மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கேற்ற வகையிலும், மக்களின் கருத்துக்களை உள்வாங்கிய முறையிலான விருப்பொன்றிலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டுமேயன்றி, வேறறெந்த சமூகத்தவர்களின் விருப்புக்களை உள்ளடக்கிய, அவர்களின் எதிர்பார்ப்புக்களைப் பிரதிபலிக்கின்ற, வேண்டுகோள்களுக்குச் செவிசாய்க்கின்றதான அரசியல் செயன்முறைகளைக் கொண்டிருப்பதனை நாம் நிராகரிக்கின்றோம்.

குறிப்பாக, தமிழ்த் தேசியம் தொடர்பான நிலைப்பாடுகளிலும், இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனைகளிலும் தமிழ் மக்களின் விருப்புக்களிலான தீர்மானங்களையே எப்பொழுதும் எடுக்க முயலவேண்டும். அதற்கென்றே மக்கள் ஆணையும் வழங்கியுள்ளார்கள். இவ்வாணைக்குச் சாதகமா புலத்திலுள்ள மக்கள் ஆதரவினையும் சுட்டிக்காட்டுகின்றோம். இவ்வாறான ஆணைக்கு எதிரான தீர்மானம் ஒன்றாகவே தற்போதைய முடிவினைக் கருதுகின்றோம்.

அத்துடன் ஜெனிவா மனிதவுரிமைக் கவுன்சிலில் கொண்டுவரப்பட உள்ளதாகக் கூறப்படும் இலங்கை தொடர்பான தீர்மானம் தொடர்பில், அரசாங்கமும் அதனோடு இணைந்துள்ள கட்சிகளும் காட்டிவரும் பிரதிபலிப்புக்களும் எமக்கு அதிர்ச்சியளிக்கின்றது.

 அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும், அதற்காக முழு அரச நிர்வாகங்களையும் பலாத்காரமாக நிர்ப்பந்திக்கும் நடவடிக்கைகளும், பாதிக்கப்பட்ட மக்களின் மனவுணர்வுகளுக்கு எதிரான விதத்தில் மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கான பலாத்காரமான ஆட்சேர்ப்புக்களும் நாட்டில் இனரீதியான வேற்றுமையையும், சிங்களத் தேசியவாதத்தையுமே பிரதிபலிக்கின்றதேயன்றி வேறொன்றுமில்லை.

இவ்வாறான தீவிர, தமிழர்களை அடிமைப்படுத்தும் மனநிலை கொண்டுள்ள அரசாங்கம் தமிழ்மக்களுடன் நல்லுறவைப் பேணுவதற்கு முயற்சிப்பதாகக் கூறுவதும், அதற்கான வேலைப்பாடுகளும் வெறும் ஏமாற்று வேலையே.
இதற்குத் துணைபோகும் வகையிலோ, மக்களின் உணர்வுகளைச் சிதைக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள எந்த முடிவுகளுக்கும் எதிராக நாம் தொடர்ந்தும் குரல் கொடுப்போம் என்பதுடன், அதற்காக ஜனநாய ரீதியில் போராடவும் நாம் தள்ளப்படுவோம் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி
29-02-2012
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.