
இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறுகையில்,
இந்த தீர்மானம் ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைகள் பேரவையில் வெற்றிக்கரமாக நிறைவேறியிருக்கிறது என்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இது உலக தமிழினத்திற்கு கிடைத்திருக்கிற முதல் வெற்றி. இதுவே ஈழத் தமிழர்களுக்கு ஒரு நிலையான தீர்வு வழங்கிவிடும் என்று நாம் நம்பவில்லை. ஆனால் ஒரு சர்வதேச தலையீடு என்பது இப்போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. கண்டுகொள்வதற்கு ஆளே இல்லை. இந்த மக்கள் அனாதையாகிவிட்டார்கள் என்ற நிலை மாறி சர்வதேச நாடுகளின் தலையீடு இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதும் ஆறுதல் அளிக்கிறது
முக்கியமான கோரிக்கைகளாக நான் முன் வைப்பது, இந்த தீர்மானம் போர்க்குற்ற விசாரணையை நடத்துவதற்கு, இனப்படுகொலையை விசாரிப்பதற்கு ஏற்ற வகையில் அமையவில்லை. எனவே இந்திய அரசு இந்த தீர்மானத்தை ஆதரிக்கிற அதே வேளையில் சில திருத்தங்களை கொண்டு வருவதற்கு முன்வர வேண்டும். ஐ.நா.வுடைய கண்காணிப்பில் கீழ் உள்ள ஒரு சுயதன்மையோடு விசாரிக்கக் கூடிய ஒரு விசாரணை ஆணையத்தை நியமிக்க வேண்டும்.
இந்த தீர்மானம் என்பது அமெரிக்கா முன்மொழிந்த தீர்மானம். ஆனால் இந்த அமெரிக்காதான் முள்ளிவாய்க்கால் போர் நிகழ்ந்தபோது, வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. பான் கி மூன் அவர்களால் அன்றைக்கு அனுப்பப்பட்ட வல்லுநர் குழு, நேரில் சென்று ஆய்வு செய்ய முடியாத அளவுக்கு ராஜபக்சே அரசு தடுத்தாலும் கூட தனக்கு கிடைத்த தரவுகளை வைத்துக்கொண்டு ஒரு அறிக்கையை சமர்பித்தது. அந்த அறிக்கையில் போர்க்குற்றம் நடந்ததை உறுதி செய்திருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட நிலையிலே போர்க்குற்ற விசாரணை செய்வதற்கு ஏற்ற வகையில் தீர்மானம் அமைக்கப்படவில்லை என்பது நமக்கு வருத்தமாக இருந்தாலும் கூட, சர்வதேச சட்டம்
மீறப்பட்டிருக்கிறது என்கிற சொற்றொடர் அதிலே இணைக்கப்பட்டிருக்கிறது. சர்வதேச சட்டங்களை மீறியிருக்கிறது இலங்கை அரசு என்பது இன்றைக்கு இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் அது உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது.
எனவே 24 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 15 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 8 நாடுகள் நடுநிலையாக இருந்திருக்கின்றன என்பது நமக்கு கிடைத்த வெற்றி. நாடாளுமன்றத்தில் தமிழ் எம்பிக்கள் இரு அவைகளிலும் குரல் எழுப்பினார்கள். தமிழக வரலாற்றில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த குரல் கொடுத்தனர். ஒட்டுமொத்த தமிழகமும் இதில் ஒற்றுமையாக நின்றது மகத்தான சாதனைதான். ஆகவே நமக்கு இது ஒரு ஆறுதல் அளிக்கக் கூடிய ஒரு வெற்றி என்றார்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.