Tuesday, February 28, 2012

நீதிகேட்கும் வேட்கையுடன் சுதந்திர தமிழீழம் நோக்கிய விடுதலைப்பயணம் ! - பிரதமர் வி.உருத்திரகுமாரன்

மக்கள் உயிர்களைவிட அரசியல் நலன்களை பெரிதென மதிக்கும் இந்த சர்வதேச ஒழுங்கின் அறமுறை அற்ற அணுகுமுறைகள் நமது மக்கள் கொல்லப்படுவதனை அனுமதித்து நின்றன.

நமது மக்கள் கொல்லப்படுவதை அனுமதித்த அதே உலக சமுதாயத்திடம் நமது மக்களுக்கான நீதியனை கோருவதற்கு நமக்கு எல்லாவித தார்மீக உரிமைகளும் உள்ளன.
இந்தத் தார்மீக உரிமையின் அடிப்படையில், நீதியின் அடிப்படையில், நியாயத்தின் அடிப்படையில், தர்மத்தின் அடிப்படையில் நாம் இங்கு நீதி கேட்டுக் கூடியுள்ளோம்.

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் சதுக்கத்தில் இடம்பெற்ற கவனயீர்ப்பு மக்கள் எழுச்சி நிகழ்விற்கு வழங்கிய சிறப்புரையில் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழலில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இத்தகைய சிறிலங்காவுக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றக்கூடிய சாத்தியக்கூறு இல்லை. குறைந்தபட்சம் சீனா, ரஸ்யா இத்தகைய பிரேணைகளை வீட்டோ செய்துவிடும்.

இத்தகைய ஒரு சூழலில் சிறிலங்கா அரசின் மீதான அனைத்தலக விசாரணகளைக் கொண்டுவருவதற்கு ஐ.நா மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடர்கள் போன்றவற்றிற்கு ஊடாக அழுத்தங்களைக் கொடுப்பது நம் முன்னால் இருக்கும் ஒரு வாய்ப்பாகும்.

இந்த யதார்தத்தினையும் நாம் புரிந்து வைத்துக் கொண்டுதான் நமது செயற்பாடுகளை நாம் ஆற்ற வேண்டும் எனவும் தனதுரையில் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

 உரையின் முழுவடிவம் :

அன்பான தமிழீழ மக்களே!

இன்று இந்த ஐக்கியநாடுகள் சபை முன்றிலே நாம் நீதிக்காகக் கூடியுள்ளோம்.

தமிழீழ மக்கள் மீது சிறிலங்கா அரசு புரிந்து வரும் இன அழிப்பையும் (Genocide) போர் மற்றும் மானிடத்துக்கெதிரான குற்றங்கங்களையும் அனைத்துலக சமூகத்தின் முன்நிறுத்த இன்றைய தினம் ஜெனிவா ஜக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்துக்கு முன்னே நாங்கள் கூடியிருக்கிறோம்.

நமது மக்களுக்கான நீதியினைக் கோரி இலண்டனில் இருந்து ஜெனிவாவரை நடைப்பயணம் செய்து இங்கு நம்முடன் இணைந்திருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர் ஜெயசங்கர் முருகையா அவர்களையும் ஏனைய தோழர்களையும் வாழ்த்தி வரவேற்று  இவர்களது இலட்சிய உறுதியினையும் நமக்குள் உள்வாங்கியவாறு நமது மக்களுக்கு நியாயம் கோருவதற்காக இங்கு கூடியிருக்கிறோம்.

சிங்களத்தால் இன அழிப்புக்குள்ளாக்கப்பட்ட எமது மக்களின் சார்பில் அனைத்துலக சமூகத்திடம் நீதிகோரி நாம் இங்கு கூடியிருக்கிறோம்.
இன்றைய தினம், பெப்ரவரி மாதம் 27 ஆம் நாள், ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகும் முதல்நாளிலேயே நீதிகோரும் வேட்கையுடன் நாம் இங்கு கூடியிருக்கிறோம்.

2009 ஆம் ஆண்டு அனைத்துலக சமூகமும், ஐக்கியநாடுகள் சபையும் வாய்மூடி மௌனித்துப் போய் நமது மக்களுக்கு பெரும் தவறிழைக்க, அந்த வெளியினை நன்கு பயன்படுத்தியவாறு சிங்களம் நமது மக்களை கொன்றெழித்தது. நாகரீக உலகையே அதிரச் செய்யும் வகையில் பெரும் நரபலி எடுத்தது.

சிங்களத்தின் இந்த தமிழினஅழிப்பில் 100,000 க்கும் மேற்பட்ட நமது உறவுகள் கொத்துக் கொத்தாக நம் கண்முன்னாலேயே கொல்லப்பட்டார்கள். வீதிகளில், வீடுகளில், பள்ளிக்கூடங்களில், வழிபாட்டுத்தலங்களில், மருத்துவமனைகளில், திருமணவீடுகளில், இழவுச் சடங்குகளில் எங்கும் நமது மக்கள் துரத்தித் துரத்திக் கொல்லப்பட்டார்கள்.

நமது மக்கள் நடக்கும் போதும் கொல்லப்பட்டார்கள். படிக்கும்போதும் கொல்லப்பட்டார்கள். உண்ணும்போதும் கொல்லப்பட்டார்கள். உறங்கும்போதும் போது கொல்லப்பட்டார்கள். கூடும்போதும் கொல்லப்பட்டார்கள். ஓடும் போதும் கொல்லப்பட்டனர். இயற்கை கழிக்கும் போதும் கொல்லப்பட்டார்கள். இயலாது இருக்கும் போதும் கொல்லப்பட்டார்கள்.

குப்பை கூளங்களைக் கூட்டித் தள்ளி ஒரு மூலைக்குள் வைத்துத் தீயிட்டுக்; கொழுத்துவதைப்போல  மூட்டைப்பூச்சிகைள தட்டிக் கொட்டி ஒருங்கு சேர்த்து காலால் நசுக்குவதைப்போல  நமது மக்களை அடித்துத் கலைத்து விரட்டிச் சென்று கடற்கரையோரத்தில், ஒரு சிறிய நிலப்பகுதியில் வைத்து நரபலி எடுத்தது சிங்களம்.

இவற்றையெல்லாம் இந்த அனைத்துலக சமூகம், இந்த ஐக்கிய நாடுகள் சபை அனுமதித்து நின்றது. மக்கள் உயிர்களைவிட அரசியல் நலன்களை பெரிதென மதிக்கும் இந்த சர்வதேச ஒழுங்கின் அறமுறை அற்ற அணுகுமுறைகள் நமது மக்கள் கொல்லப்படுவதனை அனுமதித்து நின்றன. நமது மக்கள் கொல்லப்படுவதை அனுமதித்த அதே உலக சமுதாயத்திடம் நமது மக்களுக்கான நீதியனை கோருவதற்கு நமக்கு எல்லாவித தார்மீக உரிமைகளும் உள்ளன.

இந்தத் தார்மீக உரிமையின் அடிப்படையில், நீதியின் அடிப்படையில், நியாயத்தின் அடிப்படையில், தர்மத்தின் அடிப்;படையில் நாம் இங்கு நீதி கேட்டுக் கூடியுள்ளோம்.

நமது மக்கள் மீதான சிங்களத்தின் தொடரும் இனஅழிப்பை தடுத்து நிறுத்த நமக்கான ஒரு பாதுகாப்பு ஏற்பாடு தேவை என்ற அடிப்படையில்  ஈழத் தமிழர் தேசத்தின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில்  எமக்கான நீதி, சுதந்திமும் இறைமையும் உடைய சுதந்திரத் தமிழீழ அரசினை அமைப்பதாகத்தான் இருக்கமுடியும் என ஓங்கி உரத்த குரலில் அனைத்துலக சமூகத்தின் முன் பிரகடனப்படுத்தியவாறு 
நமது மக்களை இனஅழிப்புக்குள்ளாக்கிய, இனஅழிப்புக்குள்ளாக்கும் சிங்கள அரசு மீது அனைத்துலக விசாரணையினைத் உடனடியாகத் தொடங்கு எனவும்  விசாரணைகளின் அடிப்படையில் சிறலங்காவின் ஐனாதிபதி மகிந்த இராஜபக்ச உட்பட அனைத்துக் குற்றவாளிகளையும் குற்றவாறிக்கூண்டில் ஏற்றித் தண்டனை வழங்கு எனவும்  நாம் அனைத்துலச சமூகத்திடம்  இந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம் கொன்றொழிக்கப்பட்ட நமது மக்களின் பெயரால் கோருகிறோம்.

அன்பான மக்களே!

மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகள் ஒன்றுகூடி உலகின் மனித உரிமை நிலைமை குறித்து இன்று ஆரம்பமாகும் இக் கூட்டத்தொடரில் விவாதிக்கின்றனர்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் 2012 ஆம் ஆண்டை அனைத்துலக விசாரணைகளைவலியுத்தும் ஆண்டாகபிரகடனப்படுத்தயுள்ளமையினை நீங்கள் அறிவீர்கள்.

சிறிலங்கா அரசு புரிந்த குற்றங்களுக்கு எதிராக அனைத்துலக விசாரணைகளை கோரும் நமது நிலைப்பாட்டை இம் மனித உரிமைப் பேரவையின் இக் கூட்டத்தொடரின் போதும் நாம் வலுப்படுத்த வேண்டும்.

இதற்காக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளை நோக்கிய தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரவையின் கூட்டத் தொடர் நடைபெறும் காலகட்டத்தில் ஐ.நா. மண்டபத்துக்குள்ளும் சிறலங்கா அரசின் மீதான அனைத்துலக விசாரணைகளைக் கோரும் செயற்பாடுகளுக்கான ஏற்பாடுகளை நாம் செய்திருக்கிறோம்.

சிறிலங்கா அரசின் மீது அனைத்துலக விசாரணைகளைக் கோரும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களுடன் இணைந்து நின்று சிறிலங்கா மீது விசாரணைககைளக் கோரக்கூடிய நாடுகளை உற்சாகப்படுத்துவதும் ஆதரவு தரக்கூடிய நாடுகளின் எண்ணிக்கையினை அதிகரிக்கச் செய்வதும் நாம் மேற்கொள்ளும் இத்தகைய அரசியல் இராஜதந்திர செயற்பாடுகளில் கூடுதல் இடம் பிடிக்கும். ஐக்கிய நாடுகள் சபை மண்டபத்துக்கு உள்ளே மட்டுமன்றி மண்டபத்துக்கு வெளியே நடைபெறும் செயற்பாடுகளும் இவ் விடயத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.
 
இன்று நாம் ஐக்கியநாடுகள் சபைக்கு வெளியில் நடாத்தும் இப்போராட்டம் மண்டபத்தின் உள்ளே அதிர்வலைகளை ஏற்படுத்தும். லண்டனிலும் இருந்து புறப்பட்டு இஙகு வந்தடைந்து நீதி கோரும் நடைப்பயணமும் நமது மனவலிமையினை உள்ளே கூடியிருக்கும் அரச மற்றும் மனித உரிமை அமைப்பின் பிரதிநிதிகளுக்கு வெளிப்படுத்தும்.
நாம் சிறிலங்கா அரசினைக் குற்றவாளிக்கூண்டில் ஏற்றி நமது மக்களுக்காய் நீதி கோரும் முயற்சியும் தொடர்ச்சியான செயற்பாடுகளை வேண்டி நிற்பது. விடாமுயற்சியுடன் மேற்கோள்ளப்பட வேண்டியது. நீதி, நீதி என்பதற்காகத் தானாக வென்று விடுவதில்லை. நீதியினை நாம் வெற்றி பெற வைக்க வேண்டும். இதற்கான உறுதியும் தூரநோக்கும் நம்மிடம் இருக்க வேண்டும்.

2012 ஆண்டில் நாம் முக்கியமான வரலாற்றுக் கட்டத்தில் நிற்கிறோம். சிறலங்கா மீது அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அனைத்துலக அழுத்தம் கணிசமாக எழுந்துள்ளது. அனைத்துலக பிணக்குக்குழு (International Crisis Group)> , அனைத்;துலக மன்னிப்புச்சபை (Amnestry International), மனித உரிமைகள் காப்பகம் (Human Rights Watch) சனல் 4 தொலைக்காட்சி (Channel 4) போன்ற அனைத்துலக நிறுவனங்கள் சிறிலங்கா அரசு மீதான அழுத்தத்தை உருவாக்குவதில் முன்னின்று செயற்பட்டு வருகின்றன.

சிறிலங்கா மீதான விசாரணை விடயத்தில் அரசுகளுக்கும் சர்வதேச குடிசார் சமுகத்திற்குமிடையே இடையே ஒரு வேறுபாடும் தெரிகிறது. அரசுகள் இந்த விசாரணையினை சிறிலங்கா அரசு அனைத்துலக தராதரத்துக்கிணங்க மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றன.
ஆனால் ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்தின் நிபுனர் குழு, மனித உரிமை அமைப்புக்கள், தமிழ் மக்கள் சிறலங்கா அரசுக்கு இந்த தகைமையோ அல்லது விருப்பமோ இல்லை என்கின்றன. அனைத்துலக விசாரணைகளைக் கோருகின்றன.

சிறிலங்கா அரசு சர்வதேச குடிசார் சமுகத்தால் (சிவில் சமுகத்தால்), தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட தனது நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையினை முன்வைத்து தன் மீதான அழுத்தத்தைச் சமாளிக்கப் பார்க்கிறது.

போர்குற்றங்கள் தொடர்பான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை திருப்பதிகரமாக இல்லையென அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா, தென்னாபிரிக்கா கருத்து தெரிவித்துள்ளன. மன்னதர் முன்னாள் பேராய கலாநிதி ராயப்பு 146,679 மக்கள் தொடர்பாக தகவல் இல்லையென இந்த நல்லிண ஆணைக்குழவின் முன்னால் மகஜர் சமர்பித்தார்.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் நிபுனர் குழு 40,000 மேற்பட்ட மக்கள் இறந்துள்ளார்கள் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆயினும் நல்லிணக்க ஆணைக்குழு சிறிலங்கா இராணுவம் மனித உரிமைகளை யுத்தத்தின்போது மதித்ததெனவும் சில ராணுவ உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் நான்கே நான்கு சமயங்களில் மட்டும் அத்துமீறி நடந்திருக்ககூடும் என கூறியுள்ளது.

பொது அறிவு நான்கு சந்தர்ப்பங்களில் நாப்பதாயிரம் மக்கள் அல்லது 146,679 மக்கள் இறந்திருப்பார்களென்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது. நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை இன அழிப்பு, மானிடத்திற்கு எதிரான குற்றங்கள், போர்குற்றங்கள் புரிந்த சிறிலங்கா அரசின் அரசியல் ராணுவ தலைவர்களை தப்பவைக்கும் பொறிமுறையாக அமைகின்றது.

எனவே அனைத்துலக விசாரணைக்கு மாற்றீடாக நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையை ஏற்பது முழுப்பூசணிக்காயினைச் ஒரு கோப்பைச் சோற்றினுள் மறைக்கும் மூடத்தனத்தை ஒத்தது.
இத்தகைய ஒரு பின்னணியில் மனித உரிமைப் பேரவையின் 19 வது கூட்டத் தொடர் ஆரம்ப்பமாகும் பெப்ரவரி 27 ஆம் நாள் ஜெனிவாயில் ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் நாம் ஒன்றுகூடி நியாயம் கோருவது மிகவும் முக்கியத்தும் வாய்ந்ததாகும்.

நாம் நமது சக்தியெல்லாம் திரட்டி சிறிலங்கா அரசின் பொய்மையினையும் கபடத்தனத்தையும் அம்;பலப்படுத்தி அனைத்துலக விசாரணைகளைக் கோரும் முயற்சிகைள வலுப்படுத்த வேண்டும்.
மிகக் கொடுமையான முறையில் கொன்றொழிக்கப்பட்ட நமது மக்களுக்காக நாம் அனைத்துலக அரங்கில் நியாயம் கோருகின்றோம் என்ற தார்மீக ஆவேசத்துடன் நாம் அனைவரும் செயற்படுவது மிகவும் முக்கியத்தும் வாய்ந்தது.

அன்பான மக்களே!

நாம் இன்று மேற்கொள்ளும் முயற்சி ஒரு அரசினை வேறு அரசுகளைக் கொண்டு தண்டிக்க வைக்கும் முயற்சி. சிறிலங்கா அரசு உலகில் தனித்த விடப்பட்ட ஒரு அரசு அல்ல. சிறிலங்கா அரசு பல நண்பர்களை  பலமிக்க அரசுளையும் தனது நண்பர்களாகக் கொண்டுள்ளது.

அரசுகளுக்கிடையிலான உறவுகள் தர்மத்தின் அடிப்படையில் நிகழ்பவை அல்ல. இவை நலன்களின் அடிப்படையில் சுழல்பவை. இதனால் சிறலங்கா அரசினைக் குற்றவாளிக்கூண்டில் எற்றச் சற்றுக் காலம் எடுக்கக்கூடும்.

இன்று சிறிலங்கா மீது யுத்தக்குற்ற விசாரணைக்கான அழுத்தங்களைக் கொடுக்கும் பலமிக்க பல அரசுகளும் தற்போதய சிறிலங்கா அரசாங்கத்தை தம்முன்னே பணியவைக்கும் நோக்கத்தை தமது நலன்கள் சார்ந்து கொண்டுள்ளனர் என்புதனையும் நாம் புரிந்து வைத்திருக்க வேண்டும்.

சிறிலங்கா அரசு இந்த பலம் மிக்க அரசுகளுக்கு பணிவதுபோல நடித்து தனது குற்றங்களில் இருந்து உச்சித் தப்பி விடலாம் என்ற திட்டத்தை வகுத்துச் செயற்படும் நிலைமைகளும் உள்ளன.

சிறிலங்கா அரசு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ரோம் நகரத்து பிரகடனத்தில் கையெழுத்திடவில்லை. இதனால் போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஐக்கியநாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையின் அங்கீகாரம் தேவைப்படும்.

தற்போதைய சூழலில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இத்தகைய சிறிலங்காவுக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றக்கூடிய சாத்தியக்கூறு இல்லை. குறைந்தபட்சம் சீனா, ரஸ்யா இத்தகைய பிரேணைகளை வீட்டோ செய்துவிடும்.

இத்தகைய ஒரு சூழலில் சிறிலங்கா அரசின் மீதான அனைத்தலக விசாரணகளைக் கொண்டுவருவதற்கு இந்த மனித உரிமைப் பேரவையின் கூட்டததொடர்கள் போன்றவற்றிற்கு ஊடாக அழுத்தங்களைக் கொடுப்பது நம் முன்னால் இருக்கும் ஒரு வாய்ப்பாகும். இந்த நடைமுறை காலஅவகாசத்தையும் கோரி நிற்கக் கூடியவை.
இதனால் சிறிலங்கா அரசினை நாம் விரும்புவது போலத் தண்டனைக்குள்ளாக்குவது சவால் மிக்கதொரு விடயமாகத்தான் இருக்கும். இந்த யதார்தத்தினையும் நாம் புரிந்து வைத்துக் கொண்டுதான் நமது செயற்பாடுகளை நாம் ஆற்ற வேண்டும்.

இருப்பினும் உலகினில் உண்மையும், நியாயமும், தர்மமும் என்றும் தோற்பதில்லை. ஏனெனில் அவை மிகவும் சக்தி மிக்கவை. ஒரு மானுட சமூகத்தின் இயக்கத்தில் மிகுந்த முக்கியம் பெறுவவை. இதனால் காலம் சற்றுச் சென்றாலும் நாம் நமது முயற்சியில் வெற்றி பெறுவோம். ஏனெனில் நமது பக்கம்தான் நீதி உள்ளது.

அதுவரை உறுதியுடன் நமது மக்களின் விடுதலைக்காய் செயற்படுவோம். நமது மக்களுக்கு நீதிகிடைக்கும் வரை ஓயமாடடோம் என உறுதி எடுத்துக் கொள்வோம்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.