Monday, January 23, 2012

பிரபாகரனைக் காப்பாற்ற தீவிர முயற்சி எடுத்த கஜேந்திரகுமார்!

வன்னிப் போரின் இறுதி நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரை காப்பாற்றுகின்றமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பகீரத முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றார்.

போரில் மிஞ்சிய புலிகளுக்கு இராணுவத்திடம் சரண் அடைகின்றமைக்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கின்றமைக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேரடியாக பாடுபட்டு இருக்கின்றார்.

இதற்கான ஏற்பாடுகளை செய்கின்றமை தொடர்பாக கே.பி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பசில் ராஜபக்ஸ, அமெரிக்க தூதரக அதிகாரிகள் உட்பட வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகள் போன்ற பல தரப்பினரோடும் தொடர்பில் இருந்திருக்கின்றார்.

புலிகளை சரண் அடைய வைக்கின்றமைக்கான ஏற்பாட்டில் நேரடியாக பங்கேற்கின்றமைக்காக கிறிஸ்தவ மத குரு ஒருவருடன் வன்னியில் யுத்த பிரதேசத்துக்கு செல்கின்றமைக்கு தயாராகவும் இருந்திருக்கின்றார்.
ஆனால் பசில் ராஜபக்ஸ கடைசி நேரத்தில் இவரை கை விட்டு விட்டார். கஜேந்திரகுமாரும் கே.பியும் 2009 ஆம் ஆண்டு மே 16 ஆம் திகதி இரவு தொலைபேசியில் பேசி இருக்கின்றனர்.

3000 பேர் அன்று கொல்லப்பட்டமையுடன் 25000 பேர் காயம் அடைந்து உள்ளனர் என்று குமாருக்கு கே.பி சொல்லி இருக்கின்றார். எறிகணைத் தாக்குதல் தொடர்கின்றன என்றும் கே.பி சொல்லி இருக்கின்றார்.
சரண் அடைகின்றமைக்கு புலிகள் தற்போது தயாராக உள்ளனர் என்றும் கே.பி சொல்லி இருக்கின்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சரண் அடைதலுக்கு ஏற்பாடு செய்கின்றமைக்கு பாதிரி ஒருவருடன் கூடவே யுத்த பிரதேசத்துக்கு செல்ல தயார் என்றும் அதற்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்றும் ஜனாதிபதியுடன் குமார் ஏற்கனவே கலந்துரையாடி இருக்கின்றார்.
ஜனாதிபதியுடன் ஏற்கனவே பேசி இருந்தமைக்கு அமைய யுத்த பிரதேசத்துக்கு செல்கின்றமைக்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் ஜனாதிபதியின் ஆலோசகர் பசிலை குமார் கேட்டு இருக்கின்றார். ஜனாதிபதி இணங்கி இருக்கின்றார்.

ஜனாதிபதி ஜோர்தானுக்கு சென்று விட்டு திரும்பி வந்திருந்த நேரம் அது. ஆனால் பசில் மறுத்து விட்டார்.
இநிலையில் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு குமார் 17 ஆம் திகதி அழைப்பு மேற்கொண்டு பசிலின் நிலைப்பாட்டை தெரியப்படுத்தி இருக்கின்றார்.

2009 ஆம் ஆண்டு மே 17 ஆம் திகதி கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து இவ்வளவு தகவல்களையும் பெற முடிந்து உள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.