Sunday, June 12, 2011

குப்பிளான் கற்பக விநாயகர் ஆலயத்தில் பல லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன:கடந்த வெள்ளியிரவு சம்பவம்.

குப்பிளான் வடக்குக்கரை கற்பக விநாயகர் ஆலயத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு பாரிய திருட்டுச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. ஆலயத்தின் கூரையைப் பிரித்து உள்நுழைந்த திருடர்கள் மூலஸ்தான விக்கிரகம் உட்பட ஆலயத்திலுள்ள விக்கிரகங்களிலிருந்த பெறுமதியான ஆபரணங்களையும் விக்கிரகத்தை புரட்டி அடியிலிருந்த இயந்திரத் தகடுகளையும் அபகரித்துச் சென்றுள்ளனர்.

சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் இங்கு திருடப்பட்டுள்ளன. விக்கிரகங்களின் பீடத்திற்குக் கீழ் வைக்கப்பட்டிருந்த பெறுமதிமிக்க இயந்திரத் தகடுகளை எடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்ட திருடர்கள் சுவாமி விக்கிரகங்களை புரட்டி வீழ்த்திவிட்டுச் சென்றுள்ளனர்.

சம்பவ தினம் இரவு ஆலயத்திற்கு அண்மையிலுள்ள மக்கள் அனைவரும் உறங்கிய பின்னர் ஆலயக்கூரையைப் பிரித்து உள்ளே நுழைந்த திருடர்கள் நீண்ட நேரம் உள்ளே நின்று திருட்டில் ஈடுபட்டுள்ளனர். விக்கிரகங்களில் அணியப்பட்டிருந்த வெள்ளி அங்கிகள், ஆபரணங்கள் போன்றவற்றைத் திருடியபின் அலவாங்குகளைப் பயன்படுத்தி விக்கிரகங்களின் பீடங்களை உடைத்து அதன் கீழ் வைக்கப்படிருந்த இயந்திரத் தகடுகளையும் திருடியுள்ளனர். இதன் போது விக்கிரகங்கள் புரட்டி விழ்த்தப்பட்டுள்ளன.

ஆலய உண்டியல் உடைக்கப்பட்டு அதற்குள்ளிருந்த 10 ஆயிரம் ரூபா வரையிலான பணமும் எடுக்கப்பட்டுள்ளது. இதன்பின் திருடர்கள் வடக்கு வாயில் கதவை உடைத்து வெளியேறிச் சென்றுள்ளனர். இதேநேரம் ஆலயத்திற்கு சற்றுத்தொலைவிலுள்ள பனை மரத்திடியிலிருந்து திருடர்களின் இரண்டு துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்த இடத்தில் அலவாங்கு ஒன்று கிடந்ததாகவும் அப்பகுதி கிராம முகாமையாளர் தெரிவித்தார். இரண்டு சைக்கிள்களையும் அலவாங்குகளையும் பொலிஸார் கொண்டு சென்றுள்ளனர்.

இதேவேளை ஆலயத்திற்கு அருகில் வசிக்கும் ஒருவர் தனது இரண்டு துவிச்சக்கர வண்டிகள் சம்பவ தினம் இரவு திருடப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளாரென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.