Friday, May 27, 2011

சவேந்திர சில்வா பலவீனமுற்ற படை அதிகாரி – பொன்சேகா வாக்குமூலம்!

கைது செய்யப்பட்ட கே.பி. அரசாங்கத்தின் கைதியாகவும், தான் அரசியல் கைதியாகவும் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் படைத்தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வெள்ளைக்கொடி விவகார வழக்கில் நேற்று ஐந்தாம் நாளாக சாட்சியம் அளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தனது சாட்சியத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அரசியல் பழிவாங்கல் நோக்கத்திற்காகவே நான் சிறைவைக்கப்பட்டுள்ளேன். இராணுவ நீதிமன்றத்தில் நடந்த விடயங்கள் ஊடகவியலாளர்களின் ஊடாக வெளியிட அனுமதி மறுக்கப்பட்டது. அத்தோடு இராணுவ நீதிமன்றத்தில் சட்டத்தரணிகளுடன் கலந்துரையாட எனக்கு இடமளிக்கவில்லை. இராணுவ நீதிமன்றத்தின் தலைவராக ஜனாதிபதிக்கும், படைத்துறைச் செயலாளருக்கும் தேவைக்கேற்ப செயல்படக்கூடியவர்கள் நியமிக்கப்பட்டனர்.

என்னைச் சிறையில் அடைத்து வைத்தாலும் எனது அரசியல் கொள்கை மாறாது. அதனை எவராலும் அழிக்கவும் முடியாது. சுயாதீன நீதிமன்றமோ அல்லது இயற்கையோ என்னைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியவர்களை சரியான நேரத்தில் தண்டிக்கும். இது நிச்சயம்.

பிரதம நீதியரசராக புதியவர் ஒருவர் பதவியேற்றுள்ளார். நீதிமன்ற 19ஆம் இலக்க அரசியலமைப்பு சீர்திருத்தத்தினை அரசாங்கம் கொண்டுவர முயல்கிறது. இதன்மூலம் ஜனாதிபதி நீதிமன்றக் கட்டமைப்பின் சகல அதிகாரங்களையும் பெற முயற்சிக்கிறார். நீதிமன்றக் கட்டமைப்பும், நீதிச் சேவைகள் ஆணைக்குழுவும் ஜனாதிபதியின் கைப்பிடிக்குள் மாற்றுவதற்கு ஜனாதிபதி முயல்கிறார். ஐக்கிய நாடுகள் சபையினாலும், சர்வதேச சமூகத்தினாலும் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள இராணுவம் தொடர்பான அனைத்துக் குற்றச்சாட்டுக்களுக்கும் பதிலளிக்கக் கூட்டிய சரியான நபர் நானே.

நாட்டை மீட்டெடுத்த எனக்கோ அரசியல் கைதியாக பட்டம் சூட்டப்பட்டுள்ளது. நான் படைத் தளபதியாக பதவியேற்றதன் பின்னர் எனக்கு அடுத்துவரும் படைத்தளபதிக்கு யுத்த சூழ்நிலையை மீதம் வைக்க மாட்டேன் என உறுதியளித்திருந்தேன். அந்த வாக்குறுதியை நான் நிறைவேற்றியிருந்தேன். அந்த வாக்குறுதியை நான் நிறைவேற்றி யிருக்காவிட்டால் இன்னும் யுத்தம் தொடர்ந்திருக்கும்.

நான் எனது கண்காணிப்பால் திறமை மிக்க அதிகாரிகளாக மாற்றிய பல படையதிகாரிகளை அரசாங்கம் பழிவாங்கியுள்ளது. அவர்களுக்கு ஓய்வூதியம் கூட மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் சவேந்திர சில்வா போன்ற பலவீனமுற்ற அதிகாரிகளுக்கு வெளிநாடுகளில் சிறந்த பதவிகளும், பதவி உயர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன என்றார். இவ்வழக்கு விசாரணை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு தீபாலி விஜயசுந்தர தலைமையிலான நீதிபதிகள் அடங்கிய குழு ஒத்திவைத்துள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.