Saturday, December 04, 2010

இலங்கை அரசாங்கத்தின் போர்க்குற்றம் உலகளாவிய குற்றவியல் நீதிமன்றம் தலையிட வேண்டும்: மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்

இனப்படுகொலையன் மகிந்த ராஜபக்சே, ஈழத் தமிழர்களை கொன்று குவித்துவிட்டு லண்டனில் உல்லாச ஊர்வலம் வந்த இடத்தில் உணர்வுள்ள தமிழர்கள் அவருக்கு எதிராக பேரணி நடத்தினார்கள். அதனை கண்டு தத்தளிக்கும் நிலைமையில் ராஜபக்சேவும் தனது சகாக்களும் தப்பி சென்றது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

லண்டனில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஏற்பாட்டில் உரை நிகழ்த்தும் நிகழ்வும் ரத்து செய்திருப்பதாக அறிவிப்பு வந்துள்ளது. மேலும் இது போன்ற இன படுகொலையாளனுக்கு எந்த ஒரு நாட்டு பல்கலைக்கழகத்திலும் உரை நிகழ்த்த வாய்ப்பு வழங்கப்படக்கூடாது என்பது என்னுடைய வேண்டுகோள்.

மானமுள்ள தமிழன் எங்கு வாழ்ந்தாலும் அங்கே ராஜபக்சே போன்ற இனவாதிகளின் கால் பாதங்களை பதிக்க யாரும் அனுமதிக்க மாட்டார்கள் என்பதனை ராஜபக்சே புரிந்து கொள்ளவேண்டும். தனது நாட்டில் அனைத்து போர் குற்றங்களையும் செய்த பிறகு எந்த சூழ்நிலையிலும் நிம்மதியாக உலகம் சுற்ற முடியாது என்பதனை ராஜபக்சே மறந்து விடக்கூடாது.

ராஜபக்சே தனது கொடிய இராணுவத்தை வைத்து பல அப்பாவி மக்களை கொன்ற உண்மை அம்மபலமாகியுள்ளது. அதனை தொடர்ந்து, தான் போர் காலத்தில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக செய்த அனைத்து போர்க்குற்றம், மனித உரிமை மீறல், இனப் படுகொலை அனைத்தும் வெட்ட வெளிச்சமாகும்.

அதே வேளையில், ஐ.நா பாதுகாப்பு சபை உடனடியாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தை, இதன் தொடர்பில் முழுமையான நேர்மையான விசாரணை ஒன்றை ஆரம்பிக்க ஆணை பிறப்பிக்க வேண்டும்.

மனித உயிர்கள் வதைக்கப்பட்டதின் ஆழங்களை உலக நாட்டுக்கு தெளிவு படுத்த வேண்டும். சூடான் நாட்டு அதிபர் பஷீர் இனபடுகொலை புரிந்ததின் காரணமாக உலகளாவியல் குற்றவியல் நீதிமன்றம் கைது செய்ய ஆணை பிறப்பித்தது போல இலங்கை அதிபர் மகிந்தவுக்கும் அதே போன்ற கைது ஆணை ஒன்றை பிறப்பிக்க வேண்டும்.

இலங்கையில் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது கையில் கிடைத்த தமிழர்களையும் பெண் போராளிகளையும் மிகவும் கொடூரமாக கொன்று குவித்துள்ளது இலங்கை இராணுவம். இதுகுறித்து இதுவரை வெளிவராத புதிய படங்கள் வெளியிடப்படுள்ளன.

புலிகளுடனான போரில், பொதுமக்களை இராணுவம் கொல்லவில்லை என இலங்கை அரசாங்கம் தொடர்ந்து மறுத்து வருகிறது. ஆனால் சர்வதேச அளவில் பெருமளவில் போர்க்குற்றம் செய்த நாடு என பல நாடுகளும் குற்றம் சாட்டியுள்ளன என்பது உண்மை.

அந்த வகையில் மிக அண்மையில் சில கொடூரமான படங்கள் வெளியாகியுள்ளன. வன்னியில் இடம்பெற்ற கொடூர யுத்தத்தின்போது சிங்களப் படைகள் தமிழர் மீது நடத்திய வெறியாட்டத்தின்போது எடுக்கப்பட்டவை என்று தெரியவந்துள்ளது.

ஆண்கள் பெண்கள் என்ற பேதமின்றி, அனைவரும் நிர்வாணமாக்கப்பட்டு, மிகக் கோரமாக கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக தமிழ்ப் பெண்கள் மற்றும் போராளிகளைக் கொன்று உடல்களை தெருவில் வீசிவிட்டு சிங்களவர்கள் செல்லும் காட்சிகள், உயிரோடு தமிழர்களை ஓடவிட்டு சுட்டுக் கொல்லும் கொடூரம் போன்றவை அந்தப் படங்களில் இடம்பெற்றுள்ளன.

இவை அனைத்தையும் ஆதாரமாக கொண்டு ஐ.நா பாதுகாப்பு சபை மனிதாபிமான அடிப்படையில் விசாரணையை துரிதப்படுத்தி மகிந்த ராஜபக்சேவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற முயற்சி செய்ய வேண்டும்.

மு.குலசேகரன்
மலேசியா மக்கள் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.