சர்வதேச நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவில் விரிசலை உருவாக்குகிறது விக்கிலீக்ஸ் (Wikileaks) எனப்படும் புலனாய்வு இணையத்தளம்.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த யூலியன் போல் அசாங்ஜ் (Julian Paul Assange) என்பவரைப் பிரதம ஆசிரியராகக் கொண்ட இந்த இணையத்தளமானது 2006ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது.
மேற்குலக ஊடகங்களால் விசிலடிக்கும் இணையத்தளமென்று, வேடிக்கையாக அழைக்கப்படும் இந்த “விக்கிலீக்ஸ்’ 1964 ஆம் ஆண்டிலிருந்து 2010ஆம் ஆண்டு பெப்ரவரி மாத காலப்பகுதி வரை அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்கும் அதன் தூதரகங்களுக்குமிடையே மேற்கொள்ளப்பட்ட தகவல் பரிமõற்றங்கள் தொடர்பான தரவுகளை அம் பலப்படுத்தியுள்ளது.
300,000 மேற்பட்ட இரகசிய ஆவணங் களில் 3166 ஆவணங்கள் இலங்கையில் பெறப்பட்ட தகவல்களை உள்ளடக்கியுள் ளது. கடந்த 28ஆம் திகதி விக்கிலீக்ஸி னால் வெளியிடப்பட்ட இந்த ஆவணங்க ளால் அதிர்ந்துள்ள அமெரிக்கா, இத்தளச் செயற்பாடுகளை முடக்குவதற்கு முயல்கி றது. அதேவேளை ஆசிரியர் யூலியன் அசாங்ஜ் மீது பாலியல் குற்றச்சாட்டினைச் சுமத்தி தேடப்படும் நபராக அறிவித்தலொன்றினை விடுத்துள்ளது இன்டர்போல்.
அனைத்துலக மன்னிப்புச்சபையின் பிரித்தானிய பிரிவினரால் 2009ஆம் ஆண்டுக்கான ஊடகவிருதை பெற்ற “விக்கிலீக்ஸ்’ இணையத்தளமானது 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், ’2007 சம்பவம்’ (2007 INCIDENT) என்ற கானொளி ஒன்றினை வெளியிட்டது.
“கோலட்டரல் மேடர்’ (Collateral Murder) என்கிற இணையத்தளத்தில் அமெரிக்க படையினரால் ஈராக்கிய பொதுமக்கள் கொல்லப்படுவது போன்ற காட்சிகளை அந்த ஆவணம் வெளிப்படுத்தியிருந்தது.அத்தோடு 2010 ஜுலை மாதம் ஆப்கானிஸ்தான் போர் குறித்தான 76900 ஆவணங்கள் அடங்கிய “ஆப் கான் யுத்த நாட் குறிப்பு’ (Afgan War Diary) ஒன்றினை இந்த இணையம் அம்பலமாக்கியது.
இந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில், ஈராக் போரில் பதிவான 2004 இலிருந்து 2009 ஆம் ஆண்டு வரையான அமெரிக்க இராணுவ கள அறிக்கைகளை (Iraq War logs) வெளியிட்டதோடு அதில் இறந்த 109,000 பேரில் 66,081 பேர் பொது மக்கள் என்ற தகவலையும் தெரியப்படுத்தியுள்ளது.
நவம்பர் 28ஆம் திகதி வெளிவந்த 251,287 இரகசிய ஆவணங்களில் ஜனவரி 15ஆம் திகதியன்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பற்றீஷியா புடேனிஸ் (Patricia Butens) அவர்கள் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்கு அனுப்பிய அறிக்கையில், இலங்கை நிலவரம் குறித்து தெரிவித்த செய்தியே, இருநாடுகளுக்குமிடையே இராஜதந்திர முறுகலை உருவாக்குமென பரவலாகப் பேசப்படுவதனைக் காணலாம்.
அந்த அறிக்கையில், தற்போதைய ஆட்சித் தலைவர்கள், ஜனாதிபதி வேட்பாளர் சரத்பொன்சேகா ஆகியோர் போர் குற்றச் செயல்கள் தொடர்பான பொறுப்பினை ஏற்கவேண்டிய நிலையில், நீதியான விசாரணையென்பது சிக்கலான நிலையை அடைந்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த இரகசிய ஆவணத்தில், முன்னாள் நாடாளுமன்ற தமிழ் உறுப்பினர்கள் மற்றும் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் இரா.சம்பந்தன் ஆகியோரோடு, அமெரிக்க தூதுவர் நிகழ்த்திய உரையாடல்களும் போர் குற்றவிசாரணை தொடர்பாக அவர்களின் கருத்துக்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
போர் குற்றவிசாரணை குறித்து நாடாளுமன்றத்தில் பிரஸ்தாபித்தால் அது மோசமான பின்விளைவுகளை தமிழ் சமுகத்தின் மீது ஏற்படுத்தி விடும் என்கிற காரணத்தால் அதனை தவிர்ப்பதாகக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் இரா.சம்பந்தன் தெரிவித்த செய்தி குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் சர்வதேச போர்க்குற்ற விசா ரணை அவசியமென முன்னாள் தமிழ் எம்.பி.சிவாஜிலிங்கம் அழுத்தமாக குறிப்பிட்ட விடயமும் அதில் உள்ளடங்குகின்றது.
இந்த விக்கிலீக்ஸின் விசில் ஊதும் அதிரடியான தகவல்கள், மேற்குலகெங் கும் வியாபித்தவேளை, பிரித்தானியா வில் வந்திறங்கினார் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சிறப்புரையாற்ற இலண்டனிற்கு வருகை தந்த ஜனாதிபதி ராஜபக்ஷவிற்கு, ஹித்ரூ விமான நிலையத்தில் பலமான[ !] வரவேற்பளிக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கில் ஒன்றுதிரண்ட தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்க ளின் எதிர்ப்புணர்வினை புரிந்துகொண்ட இலண்டன் காவல்துறையினர் அவரை வேறு பாதையூடாக வெளியேற்றினர்.
அதேவேளை, சரமாரியாக அனுப்பப் பட்ட மின்னஞ்சல்கள் மற்றும் தொலை பேசி அழைப்புக்களால் சிறப்புரையை நிறுத்தவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளா கியது பல்கலைக்கழக நிர்வாகம்.
ஆனாலும் பாதுகாப்பு கருதி ஜனாதிபதி மஹிந்தவின் உரை நிறுத்தப்பட்டதாக நிர் வாகம் தெரிவிக்கும் வியாக்கியானம் பிரித்தானிய காவல்துறையின் ஆற்றலை குறைத்து மதிப்பிடுவதாகவே கருத இடமுண்டு.
ஜனாதிபதி மஹிந்த லண்டனில் தங்கி நின்றவேளை “சனல்4′ தொலைக்காட்சி ஒளிபரப்பிய இறுதிபோர் படுகொலை காட்சியினை ஆதாரமாக கொண்டு, பிரித்தானிய மண்ணில் மஹிந்த ராஜபக்ஷ இருக்கும் பொழுதே விசாரணைகளை மேற்கொள்ளவேண்டுமென அனைத் துலக மன்னிப்புச் சபை வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் ஒகஸ்ட் மாதமளவில் “சனல்4′ தொலைக்காட்சி ஒளிபரப்பிய காணொளி காட்சிகளில் காண்பிக்கப்ப டாத பல நிகழ்வுகளின் நீட்சியாக இப்புதிய காட்சிகள் அமைந்திருக்கின்றன.
சட்டவரையறைக்குட்பட்டு பல கோரமான காட்சிகளை “சனல்4′ தவிர்த்திருந்தாலும் அதன் முழுமையான காட்சிப் பதிவுகள் பல இணையத்தளங்களில் வெளிவந்தன.
இதேவேளை, ஜனாதிபதியோடு வருகை தந்த இலங்கை வெளிநாட்டமைச்சர் ஜி.எல்.பீரிஸ், ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்ட விடயத்தை கவனிக்கவேண்டும்.
ஒக்ஸ்போர்ட் சிறப்புரை நிறுத்தப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் இது ஒரு அப்பட்டமான கருத்துச் சுதந்திர மீறல் என்று குறிப்பிடுகையில், ‘இலங்கையில் ஊடக சுதந்திரம் ஏன் ஒடுக்கப்படுகின்றது?’ என்கிற கேள்வியினை அங்கு பிரசன்னமாகியிருந்த ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் முன்வைத்தார்.
வழமைபோன்று அக்கேள்விக்கு பதிலளிப்பதை தவிர்த்த அமைச்சர் “சனல் 4′ தொலைக்காட்சி ஒளிபரப்பிய காணொளி, இலங்கை அரசுக்கு எதிராக உருவாக்கப்படும் சதியென்றும் அது போலியானது எனவும் வாதிட்டார்.
இத் தொலைக்காட்சி முன்வெளியிட்ட காணொளியின் நம்பகத்தன்மை குறித்து ஐ.நா.சபையின் நீதிக்குப் புறம்பான கூட்டு படுகொலைகள் குறித்து ஆராயும் அமைப்பின் விசேட பிரதிநிதி பேராசிரியர் கிறிஸ்ரோப் ஹெயின் (Prof. Christof Heyn) அவர்கள் கூறுகையில் இது அதிர்ச்சிகரமான ஆதாரமென்றும் விசார ணைக்குட்படுத்தக்கூடிய தகைமைகளைக் கொண்டதென முன்பு தெரிவித்த கருத்து குறிப்பிடத்தக்கது.
இக்காணொளி குறித்து ஆய்வுசெய்த ஐ.நா.சபையின் நிபுணர்களான ஜெவ் ஸ்பிவிக் (JEFF SPIVICK), டானியல் ஸ்பிட்ஸ் (DANIEL SPITZ) , பீற்றர் டியூஸ்க் (Peter Diaczuk) ஆகியோர் இது குறித்து தெரிவிக்கையில் கைத்தொலைப்பேசியூடாக பதிவுசெய்யப்பட்ட இக்காட்சிகள் வெட்டு ஒட்டுதலுக்கு (Editing) உட்படாமலும் ஒளிப்பதிவு சீராக உடையதாகவும் ஏ.கே. 47 துப்பாக்கியால் சுடப் படும்போது கொலை செய்யப்பட்டோரின் அங்க அசைவுகள் நிஜமாய் இருந்ததாக கூறியிருந்தார்கள்.
ஏற்கனவே ஒளிபரப்பப்பட்ட இக்காட்சிகள் நம்பகத் தன்மையுடையவை என்று சர்வதேச பகுப்பாய்வு நிபுணர்கள் நிரூபித்தாலும் அதனை போலியானதென்று திரும்ப திரும்ப மறுக்கின்றார் ஜி.எல். பீரிஸ். இருப்பினும் சுயாதீன போர்க்குற்ற விசாரணை ஒன்றின் அவசியம் குறித்து புதிதாக வெளிவரும் பல கானொளி ஆதாரங்கள் சொல்லும் செய்தியை சர்வதேச நாடுகள் கருத்தில் கொள்ளவேண்டு மென்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு.
வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ஸ பிரித்தானிய தூதரகத்தின் முன்னாள் ஆர்ப்பாட்டம் செய்வதும் நாட்டின் நன்மதிப்பை உயர்த்த பிரித்தானிய நிறுவனமான பெல் பொற்றிஞ்ஞரை வாடகைக்கு அமர்த்துவதும், வெளிநாட்டு முதலீடுகள் வந்து குவிந்தால் தேசிய இனப் பிரச்சினை தீர்ந்துவிடுமென கற்பிதம் கொள்வதும் இரு தேசங்களுக்குமிடையே இனநல்லிணக்கத்தை ஏற்படுத்த உதவாது.
இதயச்சந்திரன்
ithayachandran@hotmail.co.uk







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.