Saturday, November 20, 2010

கிளிநொச்சியில் இராணுவ வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த குடும்பத்தினர் இருவர் பலி! படையினர் எண்மரும் காயம்.

கிளிநொச்சி, முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தில் நேர்த்திக் கடன் செலுத்தச் சென்ற நல்லூரைச் சேர்ந்த தம்பதியர் இராணுவ வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். நேற்றுக்காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் நல்லூர் செட்டித்தெருவைச் சேர்ந்த பவுண்ராஜா செல்வராஜா (வயது 52), அவரது மனைவியான செல்வராசா நகுலேஸ்வரி(வயது 48) ஆகியோரே உயிரிழந்தவர்கள் ஆவர்.

மாங்குளத்தில் இருந்து வந்த படையினரின் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவத்திலேயே தம்பதியினர் கொல்லப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் 8 படையினர் காயமடைந்தனர். படையினரின் வாகனத்தைச் செலுத்தி வந்தவர் படுகாயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்துத் மேலும் தெரியவருகையில், வெளிநாட்டில் இருந்து வந்த தமது பிள்ளைகளின் நேர்த்தியைப் பூர்த்தி செய்வதற்காக நல்லூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் உயிரிழந்த தம்பதியினர் முறிகண்டிப் பிள்ளையார் ஆலயம் நோக்கிச் சென்றனர்.

முறிகண்டி, இந்துபுரம் பகுதியில் இவர்கள் சென்றுகொண்டிருந்தபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்தது. தம்பதியர் அந்த வாகனத்துக்குள் சிக்கி அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். சடலங்கள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு வெளிநோயாளர் பிரிவில் சடலங்கள் வைக்கப்பட்டிருந்தன.

எதிர்பாராதவிதமாக அங்கு சிகிச்சைபெற சென்ற பெண் ஒருவர் சடலங்களை அடையாளம் காட்டினார். அந்தப் பெண் உயிரிழந்தவர்களின் உறவினர் ஆவார். அதைத் தொடர்ந்து விபத்தில் பலியானவர்களின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. முல்லைத்தீவு பதில் நீதிவான் தங்கராசா பரஞ்சோதி வைத்தியசாலைக்கு நேற்று நண்பகல் வந்து விசாரணைகளை நடத்தினார்.

விசாரணைகளின் பின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் இராணுவ வாகனத்தின் சாரதியை எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறும் பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டார் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.