வன்னிப் பிரதேசத்தில் இடம்பெற்று வருகின்ற மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் மனிதாபிமான உதவிகளை மேற்கொண்டு வருகின்ற ஐக்கிய நாடுகள் அமைப்புக்களைச் சேர்ந்த தொண்டு நிறுவனப் பணியாளர்கள் ஏ-9 வீதி வழியாக வன்னிப் பகுதிக்குச் செல்வதற்கு இப்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீள்குடியேற்றப்படுகின்ற, இடம்பெயர்ந்த மக்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கின்ற மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்வதற்கும் அந்தப் பணிகளை மேற்பார்வை செய்வதற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் அந்தப் பகுதிகளுக்குச் சென்று வரவேண்டியுள்ளது.
எனினும் இவ்வாறு செல்பவர்களுக்குக் கடந்த திங்கட்கிழமை முதல் ஓமந்தைச் சோதனைச் சாவடியில் உள்ள இராணுவத்தினர் அனுமதி மறுத்திருப்பதாகவும் வன்னிப் பிரதேசத்திற்குச் செல்வதற்குப் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற்று வருமாறும் தெரிவித்துள்ளார்கள் எனக் கூறப்படுகின்றது.
வன்னிப் பிரதேசத்தின் மீள்குடியேற்றப் பகுதிகளில் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபடுவதற்கு விரல் விட்டு எண்ணக் கூடிய தொண்டு நிறுவனங்களுக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் ஐக்கிய நாடுகள் சபையின் தொண்டு நிறுவனங்களே முக்கியமானவை. இந்த நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்கள் அங்கு சென்று வருவதற்கான அனுமதி ஏற்கனவே அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்தது. எனினும் கடந்த திங்கட்கிழமை முதல் இந்த நடைமுறையில் மாற்றம் ஏற்பட் டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் மீளக்குடியமர்ந்துள்ள மக்களுக்கான மனிதாபிமானப் பணிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படு கின்றது. இலங்கையின் போர்க் குற்றச் செயற்பாடுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு ஆலோசனை தெரிவிப்பதற்காகக் குழு நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து ஐக்கிய நாடுகள் சபைக்கும் இலங்கை அரசாங்கத்திற்குமிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருப்பது தெரிந்ததே.
இந்த முரண்பாட்டின் காரணமாகவே ஐ.நா. அமைப்புக்கள் வன்னிப் பிரதேசத்திற்குச் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. எனினும் இதற்கான காரணங்களை ஐ.நா. அமைப்புகளோ அல்லது அரசாங்கமோ இன்னும் உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.