Wednesday, June 23, 2010

செம்மொழி மாநாட்டுச் சிறப்பு மலர் வெளியீடு

கோவையில் நடைபெறும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுச் சிறப்பு மலரைத் தமிழக ஆளுந‌ர் சுர்ஜித்சிங் பர்னாலா வெளியிட குடியரசு‌த் தலைவ‌ர் பிரதீபா பாட்டீல் பெற்றுக்கொண்டார்.

உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் ஆவலோடு எதிர்பார்த்த உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் இன்று கோலாகலமாக ஆரம்பமானது.

மாநாட்டை முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் குடியரசு‌த் தலைவ‌ர் பிரதீபா பாட்டீல் ஆரம்பித்து வைத்தார். ஆரம்ப விழாவைக் காண கொடிசியா வளாகத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.

ஆரம்ப நிகழ்வாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை சீர்காழி சிவ சிதம்பரம் பாடினார். பின்னர் மாநாட்டின் மைய நோக்க பாடலுடன் மாநாடு ஆரம்பமானது. துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்புரையாற்றினார்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்று பொக்கிஷங்களுடன் மாநாட்டு பந்தலில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கம் நாளை வியாழக்கிழமை (ஜூன் 24) பொது மக்கள் பார்வைக்காகத் திறந்து வைக்கப்படுகிறது.

இந்தக் கண்காட்சியில் 700 அரிய வகை கலைப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு அரங்கில் பொது மக்கள் கண்டுகளிக்கும் வகையில் கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, தமிழர்களின் வரலாறு, தமிழர்களின் நாகரிகம், தொல்லியல், தமிழ் இலக்கியம் ஆகிய சிறப்பு அம்சங்களை வெளிப்படுத்தும் வகையில் இந்தக் கண்காட்சி அரங்கில் 700 அரியவகை கலைப்பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிந்துவெளி நாகரிகத்தைக் குறிக்கும் வகையில் செங்கற்களால் வடிவமைக்கப்பட்ட குளியல் தொட்டி, கட்டிடங்கள் மற்றும் விளக்கப் படங்கள் இன்றைய இளம் தலைமுறையினரும் தெரிந்துகொள்ளும் வகையில் அரங்கில் வைக்கப்பட்டுள்ளன.

1012இன் தெய்வச் சிலைகள்

1012ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பார்வதி சிலை, ரிஷபாந்திகர் சிலை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு, பழங்கால துர்க்கை சிலை, தமிழர்களின் பண்டைய கால இசைக் கருவிகள், ஓலைச் சுவடிகள், அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய பொருட்கள், பழங்கால நாணயங்கள் என 26 பெரிய அரங்குகளில் இடம்பெற்றுள்ளன. தமிழர்கள் அனைவரும் பார்த்து மகிழக்கூடிய வகையில் இந்த கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

கண்காட்சி அரங்க திறப்பு விழா நாளை (வியாழக்கிழமை) பகல் 12.00 மணிக்கு நடக்கிறது. மலேசிய மனித வளத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் இந்த கண்காட்சி அரங்கைத் திறந்துவைக்கிறார். மத்திய உரம் மற்றும் இரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரி முன்னிலை வகிக்கிறார்.

பொதுமக்கள், மாணவர்களின் பயன்பாடு கருதி மாநாடு முடிவடைந்த பின்னரும் இந்த கண்காட்சி அரங்கை பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

புத்தக கண்காட்சி

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி 500 ஆண்டுகளுக்கு முந்தயவை உட்பட பல்வேறு அரியவகை புத்தகங்களும் கண்காட்சி அரங்கில் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் புத்தகக் கண்காட்சியினை மாலைத்தீவு அரசின் பண்பாட்டுத்துறை இணை அமைச்சர் அகமது நசீர் திறந்து வைக்கிறார். இந்த விழாவுக்கு மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் முன்னிலை வகிக்கிறார்.

6 அடி உயர திருக்குறள் புத்தகம்

இந்த கண்காட்சியில் தமிழ் சார்ந்த ஏராளமான புத்தகங்கள் இடம் பெறுகின்றன. கண்காட்சியில் 6 அடி உயரத்தில் பிரமாண்ட அளவில் திருக்குறள் புத்தகம் ஒன்று தயாரித்து வைக்கப்பட்டுள்ளது. வி.ஜி.பி. தமிழ்ச்சங்கம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் திருக்குறள் 6 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்டது.

தண்ணீர் பட்டாலும் நனையாத அளவில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிரத்தியேக தாள்களில் இது உருவாக்கப்பட்டுள்ளது. புத்தகத்தின் எடை 11/4 தொன். இதில் 1,330 திருக்குறளும் பெரிய எழுத்துகளில் அச்சிடப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.