வவுனியா "மனிக் பாம்" முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அகதிகளைச் சந்திக்கவென, நேற்று அங்கு சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 12 நா.உறுப்பினர்களுக்கும், பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் உத்தரவின் பிரகாரம் எவரும் முகாமுக்குச் செல்லமுடியாது என்று வன்னிப் படைத் தளபதி அனுமதி மறுத்துவிட்டார். இந்த விவரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியவை வருமாறு:-
மனிக் பாம் முகாமில் 80 ஆயிரம் பேர் தங்கியுள்ளனர். அவர்களைச் சந்தித்து அவர்களின் நிலைமைகளை அறிந்து கொள்வதற்காக கூட்டமைப்பின் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றுக் காலை 9.30 மணியளவில் அங்கு சென்றிருந்தோம். எம்மவர்களைச் சந்திக்க ஆவலுடன் அங்கு சென்றிருந்த தம்மை முகாமுக்குள் செல்ல படைத் தரப்பினர் அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
வன்னியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டதாக அரசு அறிவித்த பிரதேசங்களுக்கும் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள வவுனியா "மனிக் பாம்" முகாமுக்கும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்களுக்கும் செல்வதாக எமது கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஜனாதிபதிக்கு தொலைபேசியில் தெரிவித்திருந்தார். நாம் அங்கு செல்வதை ஜனாதிபதி வரவேற்றார்.
அதன் பிரகாரம் நேற்று முன்தினம் முல்லைத்தீவுப் பகுதிக்குச் சென்றோம். எமது நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் நேற்றுக் காலை வவுனியாவில் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள "மனிக்" முகாம் மற்றும் விடுதலைப் புலிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள முகாம் ஆகியவற்றுக்குச் செல்ல முடிவு செய்திருந்தோம்.
"மனிக் பாம்" முகாமுக்குச் சென்ற போது, பாதுகாப்பு அமைச்சுச் செயலர் கோத்தபாய ராஐபக்ஷவின் உத்தரவின் பிரகாரம் முகாமுக்குள் செல்ல அனுமதிக்க முடியாது என்று வன்னி இராணுவ அதிகாரி எங்களிடம் தெரிவித்தார்.
ஒரு மணிநேரம் படை அதிகாரிகளுடன் காரசாரமாக நாம் விவாதித்த போதும், படையினர் முகாமுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. அங்குள்ள மக்களைச் சந்தித்து அவர்களின் துயரங்கள், தேவைகள் போன்றவற்றை அறிந்துகொள்ள ஆவலுடன் சென்றிருந்த எமக்கு அனுமதியளிக்காதது பெரும் ஏமாற்றத்தைத் தந்தது.
அதன் பின்னர் மன்னாருக்குச் சென்றோம். அகதிகளை மீள்குடியமர்த்தியுள்ளதாகத் தெரிவித்துவரும் தட்சனார் மருதமடு, மன்னார், விடத்தல்தீவு ஆகிய இடங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித் துக் கலந்துரையாடினோம். அவர்கள் தங்களுக்குள்ள கஷ்டங்களைத் தெரிவித்தனர். திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்குச் சென்று வழிபட்டோம் என்றார் மாவை சேனாதிராசா.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.