விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து காயமுற்ற போராளி ஒருவர் படையினரால் முள்ளிவாய்க்காலில் கைது செய்யப்பட்டு பின்னர் 9 மாதத்தின் பின்னர் வலுவிழந்தோர் பட்டியலில் விடுவிக்கப்பட்டார். இவர் மேலதிக சிகிச்சைக்காக இந்தியாவுக்கு புறப்படவிருந்த நிலையில், கல்கிசையில் வைத்து பொலிஸாரினால் மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஸ்ரீதரன் ஐங்கரன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
இவரிடம் பாரியளவிலான ஆயுதங்கள் மற்றும் யுத்த தளபாடங்களை குறித்த தகவல்களை வைத்திருந்தார் என்பது விசாரணைகள் மூலம் தெரியவந்ததை அடுத்தே, தாம் கைது செய்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அதேவேளை, இவ்வாறு விடுவிக்கப்பட்ட பல போராளிகளை இராணுவ உளவுப்பிரிவு கைது செய்துள்ளது.
கடந்த மாதம் மன்னாரில் விடுவிக்கப்பட்ட இரு வலுவிழந்த போராளிகளை இராணுவ உளவு பிரிவு கைது செய்துள்ளது. அத்துடன் விடுவிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள பத்திரத்தில் 06 மாதத்திற்கே அந்த பத்திரம் செல்லுபடியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே அந்த பத்திரம் காலாவதியாகிய பின்னர் எங்கும் எப்போதும் மீண்டும் கைது செய்யப்படலாம் எனவும் விடுவிக்கபட்ட போராளிகள் அச்சமடைந்துள்ளனர்.
இது தவிர சில விடுவிக்கப்பட்ட வலுவிழந்த போராளிகளை அருகில் உள்ள இராணுவ முகாமிற்கு வந்து செல்லுமாறும் படையினர் புதிய அறிவுறுத்தல்களை விடுத்துள்ளதாகவும் விடுவிக்கப்பட்ட போராளிகள் கூறியுள்ளனர்.





