Monday, May 24, 2010

'எங்களது வாகனங்கள் எங்கே?' - கிளிநொச்சியில் தமது வாகனங்களைத் தேடும் மக்கள் கேள்வி!

வன்னிப் போரின் போது கைவிடப்பட்ட வாகனங்கள் கிளிநொச்சியில் கொண்டு வந்து குவிக்கப்படும் நிலையில் தமது வாகனங்களைத் தேடி மக்கள் அலைந்து திரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

6,250 மோட்டார் சைக்கிள்களும், 11,000 உந்துருளிகளும், 45 ஏனைய ரக வாகனங்களும் கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்திற்கு எதிர்புறமாக திருநகர் செல்லும் வீதிக்கு அருகேயுள்ள வளாகத்தில் கடந்தவாரம் வரை கொண்டு வந்து குவிக்கப்பட்டுள்ளன.

தற்போது உள்ள வாகனங்களை விடவும் மேலும் 10,000 மோட்டார் வண்டிகளும், ஏனைய வாகனங்களும் கிளிநொச்சிக்கு கொண்டு வரப்படவுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், இதற்கான திகதி குறித்து தெளிவாக கூறமுடியாது என வாகனங்களைக் கொண்டு வந்து இறக்கப்படும் வளாகத்தில் பணிபுரிபவர்கள் தெரிவிக்கின்றனர்.

தமது வாகனத்தை மீளப்பெற்றுக் கொள்வதற்காக வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து சென்றவர்கள் முகாம்களில் இருந்தும் வவுனியா, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் இருந்தும் கிளிநொச்சி வந்து வாகனங்களை தேடி வருகின்றனர்.

குறித்த திகதியில் வாகனங்கள் கையளிக்கப்படும் என எத்தனையோ திகதிகள் குறிக்கப்பட்டு அவை கடந்து போயுள்ள நிலையில் தற்போது இம்மாதம் 27ஆம் திகதி வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது பிள்ளைகளை இழந்த பெற்றோர் பிள்ளைகளின் புகைப்படங்களை ஏந்திக் கொண்டு பிள்ளைகளைத் தேடுவது போன்று, தமது வாகனங்களின் படங்களுடன் தேடுதல் நடவடிக்கையில் மக்கள் அலைந்து திரிவதாக தெரிவிக்கப்படுகின்றது. கொண்டுவரப்பட்டுள்ள வாகனங்களில் அநேகமானவற்றின் பெறுமதி மிக்க பாகங்கள் அகற்றப்பட்ட நிலையில் அன்றேல் இல்லாத நிலையிலேயே கிளிநொச்சியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வாகனங்களைத் தேடும் சிலர் கவலை தெரிவித்துள்ளனர்.

இப்படியான நிலையில் வாகனங்களைப் பார்த்து நொந்து போவதை விட தம் உயிராக கருதிய வாகனங்களை காணமல் இருந்திருந்தால் பரவாயில்லை என அங்கலாய்க்கும் மக்களையும் கிளிநொச்சியில் வாகனங்கள் கொண்டு வந்து குவிக்கப்படும் இடத்தில் காண முடிகின்றது.

தற்போதும் வவுனியா மெனிக் பண்ணை முகாமில் இருக்கின்ற 46 வயதுடைய ஒருவர் கருத்து வெளியிடுகையில், கடந்த வாரத்தில் கிளிநொச்சிக்கு வந்து தமது வாகனங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த போது, தமது வாகனங்களைக் காணமுடியவில்லை என கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

'என்னிடம் இரண்டு மோட்டார் சைக்கிள்களும், ஒரு ட்ரக்டரும் இருந்தன. ஆனால் தற்போது எதுவுமே இல்லை. இங்கே ஆயிரக்கணக்கான வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ள போதும் என்னுடைய வாகனங்கள் எதனையும் காண முடியவில்லை. என்னுடைய வாகனத்தை என்னால் இனங்காண முடியும். பிள்ளைகளைப் போன்று பல வருடங்களாக நான் பராமரித்த வாகனங்களை என்னால் இனங்காணமுடியும்.

ஆனால், இங்குள்ள வாகனங்களைப் பார்க்கும் போது என்னுடைய வாகனத்திற்கு என்னவாகியிருக்குமோ எனக் கவலை ஏற்படுகின்றது. நாங்கள் மாங்குளம் அம்பகாமம் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

ஆனால் தொடர்ந்தும் வவுனியா மெனிக் பண்ணை முகாமிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளோம். எமது பகுதியில் இன்னமும் மீள் குடியேற்றம் இடம்பெறவில்லை ஏன் என்று எமக்கு புரியவில்லை' எனக் குறிப்பிட்டுள்ளார்.

போருக்கு முன்பாக வன்னிப்பகுதியில் ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்களைச் சேர்நத மூன்று இலட்சம் மக்கள் வாழ்ந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில், ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் குறைந்தது இரண்டு சைக்கிள்கள் காணப்பட்டன எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி வன்னியில் மொத்தமாக ஒரு இலட்சத்திற்கு அதிகமான சைக்கிள்கள் இருந்திருக்கக் கூடும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது. இதனைத்தவிர வன்னியில் முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களும், ஆயிரக்கணக்கான உழவு இயந்திரங்களும் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.