Wednesday, October 28, 2009

இலங்கை தமிழர்கள் மீது ஹிட்லரை விட மோசமாக ராஜபக்ச நடந்து கொள்கிறார்: பழ.நெடுமாறன் வேதனை


[புதன்கிழமை, 28 ஒக்ரோபர் 2009,]

இலங்கையில் முள்வேலி முகாம்களில் 3 1/2 லட்சம் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். ஹிட்லரைவிட ஆயிரம் மடங்கு கொடுமையை இலங்கை தமிழர்களுக்கு ராஜபக்சே செய்து வருகிறார். இவ்வாறு நேற்று கோவையில் தொடங்கிய பிரச்சாரப்பயண பொதுக்கூட்டத்தில் பழ.நெடுமாறன் பேசினார்.

இலங்கையில் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுவிக்ககோரியும், இனபடுகொலை செய்யும் இலங்கை அரசை கண்டித்தும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து விழிப்புணர்வு பிரசார பயணம் தொடங்கியது.

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமையில் கோவையில் தொடங்கிய பிரச்சாரப்பயணம் ஈரோடு வந்தது. பின்னர் ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் நடந்த வரவேற்பு பொதுக்கூட்டத்தில் பழ.நெடுமாறன் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இலங்கையில் முள்வேலி முகாம்களில் 3 1/2 லட்சம் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு சரியான உணவு, குடிநீர், மருத்துவவசதி, தங்கும் இடம் இல்லாமல் அவர்கள் அவதிப்படுகிறார்கள். தினமும் 300 பேர் இறக்கிறார்கள்.

ஹிட்லரைவிட ஆயிரம் மடங்கு கொடுமையை இலங்கை தமிழர்களுக்கு ராஜபக்சே செய்து வருகிறார். ஆனால் மனிதநேய உணர்வுகூட இல்லாமல் இந்திய மற்றும் தமிழக அரசுகள் உள்ளன.

இலங்கையில் மனித உரிமை மீறல் நடப்பதாக கூறி ராஜபக்சே கேட்ட ரூ.5 ஆயிரம் கோடி கடனை வழங்க உலக வங்கி மறுத்து விட்டது. ஆனால் இந்திய அரசு ரூ.5 ஆயிரம் கோடி கடன் வழங்குவதாக உறுதி அளித்துள்ளது.

இலங்கை அகதிகள் முகாமில் இருந்து 50 ஆயிரம் பேர் விடுவிக்கப்பட்டதாக தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி கூறுகிறார். அவர்கள் தங்கள் வீடுகளுக்கு பத்திரமாக சென்று சேர்ந்தார்களா? என்று யாரும் உறுதி செய்யவில்லை.

தமிழர்களின் பிரச்சினையை வெளிபடுத்த மக்களின் ஆதரவு திரட்ட இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது. தமிழர்களின் உரிமை பாதுகாக்கபடவும், இலங்கை தமிழ் மக்கள் விடுதலை பெற்று சொந்த இடம் செல்லும் வரை இந்த போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.