Wednesday, August 26, 2009

கண்களையும் கைகளையும் கட்டிப் போட்டுவிட்டு சிங்களப் படை தமிழர்களை சுட்டுக்கொல்லும் கோரக் காட்சிகள்: அம்பலப்படுத்துகின்றது 'சனல் - 4'

[புதன்கிழமை, 26 ஓகஸ்ட் 2009] வன்னி படையெடுப்பை நடத்திய சிறிலங்காப் படைகள் கைகளையும் கண்களையும் கட்டி வைத்துவிட்டுத் தமிழர்களைச் சுட்டுக்கொல்லும் பட்டவர்த்தனமான காட்சிகளை பிரித்தானிய காணொலிச் செய்திச் சேவையான 'சனல் -4' நிறுவனத்தின் ஜொனதன் மில்லர் வெளியிட்டுள்ளார். இந்தக் காணொலிக் காட்சிகளை வெளியிட்டுள்ள 'சிறிலங்காவில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள்' (Journalists for Democracy in Sri Lanka) என்ற அமைப்பு, இந்தக் காட்சிகள் கடந்த ஜனவரி 2009 இல் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளதாகவும், இதே காலப் பகுதியில் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் போர்ப் பகுதிகளுக்குச் செல்வதை சிறிலங்கா அரசு தடை செய்துவிட்டிருந்தது எனவும் 'சனல் - 4' தெரிவிக்கின்றது. இந்தக் காட்சிகள், "சிறிலங்கா அரசின் போர்க் குற்றங்களுக்கான ஆதாரங்களாக இல்லையா?" என ஜொனதன் மில்லர் கேள்வி எழுப்புகினன்றார். இதேவேளையில் இந்த காணொலி காட்சிகள் பற்றி கருத்து தெரிவித்துள்ள பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதுவரகம் - தமிழ் மக்களுக்கு எதிரான கோரச் செயல்களில் தமது படையினர் ஈடுபட்டனர் என்பதை மறுத்துள்ளதுடன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் மட்டுமே தமது படையினர் ஈடுபட்டனர் எனவும் தெரிவித்துள்ளதாக 'சனல் - 4' தெரிவிக்கின்றது. மேலும் - "கடந்த காலங்களில் சிறிலங்கா அரசையும் படையினரையும் மாசுபடுத்தும் விதமாக இவ்வாறான - பொய்யாக உருவாக்கப்பட்ட - ஆவணங்களை ஊடக நிறுவனங்கள் வெளியிட்டதாகவும். அதனால், இந்தக் காணொலிக் காட்சிகளின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திய பின்னரே இதனை வெளியிடுமாறும் பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதுவரகம் தம்மிடம் கோரியதாகவும் 'சனல் - 4' நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தக் காணொலியை தன்னோடு சோர்ந்து பார்த்த, பக்க சார்பற்ற ஒரு சிங்கள ஊடகவியலாளர் - இது உண்மையானது தான் என தன்னிடம் கூறியதாகவும் ஜொனதன் மில்லர் குறிப்பிடுகின்றார். குறிப்பு: மனதை மோசமாக பாதிக்கும் காட்சிகள் இந்த காணலியில் இடம்பெற்றுள்ளன. 'சிறிலங்காவில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள்' அமைப்பு வெளியிட்ட காணொலி காட்சியை பார்வையிட: /video/2009/aug/channel4_video.asx

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.