Saturday, February 14, 2009

ராஜபக்சவின் நிலைப்பாட்டை மத்திய அரசு வழிமொழிந்திருக்கிறது: குடியரசுத் தலைவர் உரை குறித்து பழ.நெடுமாறன்

[சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2009] இலங்கைப் பிரச்னையில், அந்த நாட்டு அதிபர் ராஜபக்சவின் நிலைப்பாட்டை மத்திய அரசு வழிமொழிந்து இருக்கிறது என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் குற்றம்சாட்டியுள்ளார். வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் போர் நிறுத்தம் குறித்த மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி குடியரசுத் தலைவரின் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைப்பாடு முழுமையானதாக இல்லை. ஏற்கெனவே, இலங்கை அதிபர் ராஜபக்ச எடுத்துள்ள நிலைப்பாட்டினையே இந்திய குடியரசுத் தலைவரும் வழி மொழிந்து இருக்கிறார். இலங்கைத் தமிழர்களின் பாதுகாவலர்களாக விடுதலைப்புலிகள் மட்டுமே இருக்கிறார்கள். அவர்களும் ஆயுதங்களை கீழே வைத்து விட்டால் அந்த மக்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுவிடும். தமிழினப் படுகொலையை நடத்த இலங்கை இராணுவத்துக்கு வசதியாகி விடும். பாலஸ்தீனப் பிரச்னை... பாலஸ்தீனத்தில் காஸா பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் திடீரெனப் புகுந்து அப்பாவி மக்களை படுகொலை செய்தது. இதனை, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கண்டித்தன. உடனடியாக, இஸ்ரேலியப் படை காஸா பகுதியில் இருந்து வெளியேற வேண்டுமெனவும், அங்கு இருதரப்பும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் எனவும் இந்தியாவும், உலக நாடுகளும் வற்புறுத்தின. ஆனால், போர் நிறுத்தத்துக்கு நிபந்தனையாக பாலஸ்தீன ஹமாஸ் இயக்கம் ஆயுதங்களை கீழே போட வேண்டுமென இந்தியாவோ, பிற நாடுகளோ கூறவில்லை. எரிவதை இழுத்தால்...எரிவதை இழுத்தால் கொதிப்பது நிற்கும் என்ற பழமொழிக்கு இணங்க இலங்கை அரசுக்கு இந்தியா அளித்து வரும் இராணுவ ரீதியான உதவிகளை நிறுத்தினால் ஒழிய உண்மையான போர் நிறுத்தத்துக்கு இலங்கை அரசு ஒரு போதும் சம்மதிக்காது. இலங்கை இராணுவத்தால் மருத்துவமனைகள் தாக்கப்பட்டு, மருத்துவர்களும், தாதிகளும் வெளியேற்றப்பட்டு விட்டனர். எனவே, உடனடியாக மருத்துவர்கள் குழு ஒன்றை அனுப்பி உதவ வேண்டும் என்று பழ.நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.