Friday, November 02, 2007

தமிழ்ச்செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து ஏராளமான இளைஞர்கள் தோன்றுவார்கள்: பழ.நெடுமாறன்

[வெள்ளிக்கிழமை, 02 நவம்பர் 2007]


தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் சிந்திய இரத்ததிலிருந்து ஏராளமான இளைஞர்கள் தோன்றி தமிழீழ விடுதலைப் போரை தொடர்ந்து நடத்துவார்கள் என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

மதுரையிலிருந்து பழ. நெடுமாறன் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச் செல்வன் சிங்கள வான்குண்டு வீச்சுக்குப் பலியாகி உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். கடந்த 25 ஆண்டுகாலத்திற்கும் மேலாக தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் நம்பிக்கையினைப் பெற்றவர். பல்வேறு களங்களில் தலைமை தாங்கி போராடியவர்.

சந்திரிகா அரசு இருந்த போது நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும் பின்னர் நார்வேயின் முயற்சியால் நடைபெற்ற அனைத்து பேச்சு வார்த்தைகளிலும் புலிகளின் பிரதிநிதியாக கலந்து கொண்டவர். இளம் வயதில் சர்வதேச ராஜதந்திர அரசியலில் சிறந்து விளங்கியவர். புலிகளின் சார்பில் சமரச பேச்சுக்களுக்கு தலைமை தாங்கிய தளபதியை குறிவைத்து குண்டுவீசி படுகொலை செய்ததன் மூலம் இனி சமரசப் பேச்சுக்களுக்கு சிங்கள அரசு தயாராக இல்லை என்பதை வெளிப்படுத்தி விட்டது.

மாவீரர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள் என்பதற்கு இணங்க மறைந்த தமிழ்ச்செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து ஏராளமான இளைஞர்கள் தோன்றி விடுதலைப் போரை தொடர்ந்து நடத்துவார்கள் என்பதில் அய்யமில்லை.

மறைந்த தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழகமெங்கும் கூட்டங்களை நடத்தும்படி அனைத்து தமிழ்த்தேசிய அமைப்புகளை வேண்டிக்கொள்கிறேன் என்றார் அவர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.