[வியாழக்கிழமை, 13 செப்ரெம்பர் 2007]
தமிழக முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தலாம் என்ற அடிப்படையில் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பழ. நெடுமாறன் தனது உண்ணாநிலைப் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் சென்னையில் இன்று வியாழக்கிழமை சுப.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை:
பழ. நெடுமாறன் அவர்கள் மேற்கொண்டு வரும் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தையொட்டி பேரவையின் பொதுச்செயலாளர் சுபவீ இன்று வியாழக்கிழமை பிற்பகல் தமிழக முதலசமைச்சர் கலைஞர் அவர்களைத் தொடர்பு கொண்டார்.
அப்போது ஈழ மக்களிடம் எப்போதும் தான் அன்போடும் பரிவோடும் இருப்பதை விளக்கிய முதலமைச்சர் தன்னைச் சந்திக்க விரும்பும் குழுவினரை சந்திக்க என்றும் தான் தயங்கியதில்லை என்பதையும் தெளிவுபடுத்தினார்.
எனவே விரைவில் முதலமைச்சர் அவர்களைச் சந்தித்து தம் கோரிக்கைகளை வலியுறுத்தலாம் என்ற அடிப்படையில் இப்போது உண்ணாநிலைப் போராட்டத்தை உடன் கைவிடுமாறு பழ நெடுமாறன் அவர்களை பேரவை வேண்டிக் கேட்டுக் கொள்கிறது
அவர்கள் விரும்பினால் முதலமைச்சருடனான சந்திப்பிற்கு பேரவை தன்னால் இயன்ற முயற்சிகளை செய்யும் என்று உறுதி கூறுகின்றது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






ஈழப் பிரச்சினையில் இன்னும் செல்ல வேண்டிய தொலைவு இருக்கிறது.இதில் இவ்வளவு நாட்கள் இதய பூர்வமாக உழைத்து வரும் அய்யா நெடுமாறனின் தலைமை மிக்க அவசியம்.
ReplyDeleteஅவருடைய தலைமையின் வெற்றியே அனைத்துத் தமிழரையும் அவர்களால் முடிந்த வரை ஒத்துழைக்க வைப்பதில்தான் இருக்கிறது.நாம் எதிர்பார்க்கிற அளவிற்கு ஒத்துழைக்காதவர்களையும் நம்முடன் அணைத்துச் செல்வதில் தான் அவருடைய திறமையைப் பயன் படுத்த வேண்டும்.தமிழர்களைப் பிரிப்பதற்கு மற்றவர்கள் நிறைய இருக்கிறார்கள்.
பேரன்பு அய்யா அவர்களே தயை செய்து உண்ணாவிரதத்தை உடனே நிறுத்துங்கள்.கலைஞரைச் சந்தித்து வற்புறுத்துங்கள்.இதனால் தாங்கள் தமிழிதயங்களில் உயர்வீர்களே அல்லாது குறையவே மாட்டீர்கள்.
தமிழன்பர்களே அய்யா அவர்களிடம் வேண்டுகோள் விட்டு உண்ணாவிரதத்தை உடனே நிறுத்தவேண்டியது நம் கடமை.