Saturday, September 29, 2007

தமிழர்களின் ஏகபிரதிநிதிகளாக புலிகளை ஏற்கவே மாட்டோம்! அரசாங்கம் திட்டவட்டமாக அறிவிப்பு.!!

[சனிக்கிழமை, 29 செப்ரெம்பர் 2007]

தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் புலிகள்தான் என்ற பேச்சுக்கே இடமில்லை. எந்த அமைதிப் பேச்சும் புலிகளோடு நாடாளுமன்றத்தில் தமிழ் முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஏனைய அனைத்து அரசியல் கட்சிகளையும் இணைத்துக் கொண்டே நடைபெறும். இவ்வாறு திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றது இலங்கை அரசு.

அரசின் இந்த நிலைப்பாட்டை அரசின் பாதுகாப்புத்துறைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல நேற்று வெளியிட்டார்.

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவிற்கு தமிழ் தலைவர்களும் தீர்வு யோசனைகளை முன்வைத்திருக்கின்றனர். இதன் மூலம் புலிகளைத் தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்றும், புலிகளுடன் மாத்திரம் பேச்சு நடத்துவது என்பது ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் செயல் என்றும் அவர் மேலும் சொன்னார்.

அமைதிப் பேச்சின் போது ஆனந்தசங்கரி போன்றோரின் யோசனைகள் கூட உள்வாங்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:கடந்த ஒன்றரை வருடகாலமாக புலிகளுடன் பேச்சு நடத்த அரசு மேற்கொண்டு வந்த முயற்சிகள் பற்றியும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை பற்றியும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐ.நா. பொதுச்சபையின் 62ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் விளக்கிக் கூறினார்.

இவை தொடர்பான பல முக்கியமான விடயங்களை அவர் அவ்வுரையில் குறிப்பிட்டுள்ளார்.பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட வேண்டும் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட வேண்டுமென்பது இந்த உலகமே ஏற்றுக்கொண்ட ஒன்று. இலங்கையிலும் அதுதான் நடைபெறுகிறது. புலிகளின் பயங்கரவாதம் தோற்கடிக்கப்படும்போது, அரசுமீது புலிகள் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றனர். பயங்கரவாத முறியடிப்பு நடவடிக்கையின்போது மனித உரிமை தொடர்பில் அரசு மிகவும் விழிப்பாகவுள்ளது.

பயங்கரவாதத்தை முறியடிப்புச் செயற்பாட்டை மனித உரிமை மீறல் செயற்பாட்டாகக் காட்ட புலிகள் முயலுகின்றனர். இந்த நாட்டு மக்கள் ஜனநாயகரீதியான தேர்தலின் ஊடாக மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்தமை இந்நாட்டின் இறைமையையும் இந்நாட்டு மக்களின் உயிர்களையும் காப்பாற்றத்தான். இந்நாட்டு மக்கள் பயங்கரவாதத்தால் பாதிக்கப்படும் போது அவர்களைக் காப்பாற்றவேண்டிய கடமை ஜனாதிபதிக்குண்டு. அதை அவர் சரிவர நிறைவேற்றி வருகின்றார்.

இப்போது தொடர்கின்ற இந்த இராணுவ நடவடிக்கை இப்பிரச்சினையின் இறுதித் தீர்வாக அமையாது. இந்நாட்டு மக்களை அடிமைப்படுத்தாத வகையில் நாட்டைக் காட்டிக் கொடுக்காத வகையில் நீதியான சமாதானம் ஒன்று எம்மால் முன்வைக்கப்படும்.

அரசியல் தீர்வே இறுதித் தீர்வாக அமையும்
அமைதிப் பேச்சின் ஊடாக எட்டப்படும் அரசியல் தீர்வே நிச்சயம் இறுதித் தீர்வாக அமையும். புலிகளைத் தமிழர்களின் ஏகபிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டு அவர்களுடன் மாத்திரம்தான் பேச்சு நடத்தவேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசு இல்லை. தமிழர்களின் உண்மையான பிரதிநிதிகள் தமிழர்களின் வாக்குகளால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்டவர்கள் தான்.

அமைதிப் பேச்சின்போது தமிழ் முஸ்லிம் மக்களை நாடாளுமன்றில் பிரதிநிதித்துவம் செய்யும் ஏனைய அரசியல் கட்சிகளும் அப்பேச்சில் கலந்துகொள்ளச் செய்யப்படும்.

தமிழர்களின் அரசியல் தலைவர்கள் ஏற்கனவே சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கு தமது அரசியல் தீர்வு யோசனைகளைச் சமர்ப்பித்துள்ளனர். இதன் மூலம் புலிகள் தமிழர்களின் ஏகபிரதிநிதிகள் அல்லர் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.