Wednesday, August 29, 2007

கிழக்கு அபிவிருத்தி எனும் பெயரில் சிங்கள மயமாக்கல் நடவடிக்கைகள்: விடுதலைப் புலிகள்

[புதன்கிழமை, 29 ஓகஸ்ட் 2007]


கிழக்கு அபிவிருத்தி எனும் பெயரில் தமிழர்களின் வரலாற்று வாழ்விடங்களை சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கமும் அதனது இராணுவமும் மேற்கொண்டு வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பில் இன்று புதன்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமை விவகாரங்களுக்கான பேச்சாளர் நவரூபன் செல்வி வெளியிட்டுள்ள அறிக்கை:

தமது சொந்த வாழ்விடங்களில் வாழும் உரிமை என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமையாகும். அந்த அடிப்படை உரிமையானது இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் தங்களது வாழ்விடங்களில் வசிக்கும் உரிமையை சிறிலங்கா அரசாங்கமானது மறுப்பதன் மூலம் மனித உரிமைகள் தொடர்பான அனைத்துலக பிரகடனம் மீறப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தின் இராணுவமானது திருகோணமலை மற்றும் மட்டக்களப்பில் தமிழர் தாயகப் பிரதேசங்களை ஆக்கிரமித்து சிங்களக் குடியேற்றங்களை மீண்டும் உருவாக்க முயற்சிக்கின்றன.

12 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 28 கிராமங்கள் அடங்கிய தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் மூதூர் கிழக்கு மற்றும் சம்பூர் பகுதிகளை அதிஉயர் பாதுகாப்பு வலய பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவித்தல் மூலமாக தமிழ் மக்கள் தங்களது சொந்த நிலத்தில் வாழும் உரிமையை சிறிலங்கா அரசாங்கம் மறுத்துள்ளது.

அப்பகுதிகளைச் சேர்ந்த தமிழ் மக்கள் தங்கள் சொந்த வீடுகளுக்குத் திரும்ப இயலாமல் அடிப்படை வசதிகள் ஏதுமற்ற நலன்புரி மையங்களில் துன்பப்படுகின்றனர்.

திருகோணமலை கிண்ணியாப் பகுதியில் தமிழ் மக்கள் தங்களது நிலங்களை பயன்படுத்துவதில் சிறிலங்கா அரசாங்கம் தடை விதித்திருக்கிறது.

திருகோணமலையில் உள்ள இலங்கைத்துறைமுகம் முருகன் ஆலயத்தை சிறிலங்கா இராணுவம் அழித்து விட்டது. அதே இடத்தில் இப்போது பௌத்த ஆலயத்தை கட்டியுள்ளனர்.

கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம் பகுதிகளில் ஏராளமான பௌத்த விகாரைகள் நிறுவனப்பட்டுள்ளன.

தமிழர்களின் வரலாற்று வாழ்விடமான முதலிக்குளம் பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட சிங்களக் குடும்பங்களை குடியேற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோல் புல்மோட்டை அருகே உள்ள தென்னைமரவாடி, வாகரை போன்ற பகுதிகள், கந்தளாய் சுண்டையாற்று பகுதிகளில் சிறிலங்கா அரசாங்கமும் அதனது இராணுவமும் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்க முயற்சிக்கின்றன.

1948ஆம் ஆண்டிலிருந்தே மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் அப்போதைய பிரதமர் டட்லி சேனநாயக்கவினால் தமிழ்க் கிராமங்களை சிங்கள மயமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போதும் அத்தகைய சிங்கள மயமாக்கல் தொடர்கின்றன என்று தனது அறிக்கையில் நவரூபன் செல்வி தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.