Wednesday, August 29, 2007

ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வருவதனைத் தடுக்க சிறிலங்கா குழு ஜெனீவா பயணம்

[புதன்கிழமை, 29 ஓகஸ்ட் 2007] ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவதைத் தடுக்க சிறிலங்கா அரசாங்கத்தின் குழு ஒன்று எதிர்வரும் மாதம் ஜெனீவாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது. செப்ரெம்பர் 10 முதல் 28 ஆம் நாள் வரை ஜெனீவாவில் மனித உரிமைகள் சபையின் கூட்டம் நடைபெறுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு தற்போது போர்த்துக்கல் தலைமைப் பொறுப்பு வகிக்கிறது. சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான மனித உரிமைகள் சபையில் தீர்மானம் கொண்டு வருவது குறித்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் தற்போது விவாதித்து வருகின்றன. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மனித உரிமைகள் சபையின் கூட்டத்திலும் இத்தகையதொரு தீர்மானம் கொண்டுவரப்பட இருந்தது. சிறிலங்காவின் உத்தரவாதத்தினால் அத்தீர்மானம் கொண்டுவரப்படவில்லை. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான அதிகாரி ஜோன் ஹோல்ம்சின் இலங்கை பயணம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அவரை ஒரு பயங்கரவாதி என்றும் புலிகளிடம் கையூட்டுப் பணம் பெற்றவர் என்றும் சிறிலங்கா குற்றம்சாட்டியது. இத்தனை கடுமையான குற்றச்சாட்டுகளுக்குப் பின்னரும் ஐ.நா. ஏன் காத்திரமான எதிர் வினையாற்றவில்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையனும் கேள்வி எழுப்பியிருந்தார். தற்போது வடக்கில் வலிந்த இராணுவ நடவடிக்கை ஒன்றை தொடங்கப் போவதாக சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அறிவித்துள்ளார். இப்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தை சமாதானப்படுத்த ஜெனீவாவுக்கு அரசாங்க குழு ஒன்றை மகிந்த ராஜபக்ச அனுப்ப உள்ளார். அமைச்சர் மகிந்த சமரசிங்க, சட்டமா அதிபர் சி.ஆர்.டி.சில்வா மற்றும் சிறிலங்கா சமாதான செயலகப் பணிப்பாளர் ரஜீவ விஜயசிங்க ஆகியோர் அடங்கிய குழுவினர் எதிர்வரும் வாரம் ஜெனீவாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். இப்பயணத்தின் போது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உறுப்பினர்களிடம் மீண்டும் ஒரு வாக்குறுதியை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிகிறது. இதனை வெளிப்படுத்தும் வகையில் இன்று புதன்கிழமை ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனமானது, ஆட்கடத்தல்களில் இராணுவத்தினருக்குத் தொடர்பிருக்குமேயானால் விசாரணைகளை மேற்கொள்வோம்" என்று சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறிய விடயத்தை பெரிதுபடுத்தி செய்தி வெளியிட்டுள்ளது. ஜெனீவா செல்லும் இக்குழு செப்ரம்பர் 10 ஆம் நாளுக்கு முன்னதாக சிறிலங்காவுக்குத் திரும்ப உள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத்தில் சிறிலங்கா சார்பில் தயான் ஜெயதிலக்க, உதவி சட்டமா அதிபர்கள் சவிந்திர பெர்னாண்டோ, யசந்த கொடகொட, ரஜீவ விஜயசிங்க, சிரானி குணதிலக்க மற்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சு அதிகாரி ஆகியோர் பங்கேற்கின்றனர். நன்றி : புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.