Wednesday, August 08, 2007

செஞ்சோலைப் படுகொலைக்கான இந்திய அரசின் வெகுமதிதான் ராடார்கள்?: இந்தியப் பிரதமருக்கு வைகோ கடிதம்

[புதன்கிழமை 8 ஓகஸ்ட் 2007]


செஞ்சோலைப் படுகொலை நடத்திய சிங்கள அரசுக்கு வெகுமதி அளிக்கவா இந்திய அரசு ராடார்கள் வழங்கியுள்ளது? என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதத்தில் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

மன்மோகன் சிங்குக்கு வைகோ எழுதியுள்ள கடித விபரம்:
கடந்த 2007 ஜூலை 16 ஆம் நாள் நான் தங்களுக்கு எழுதிய கடிதத்தின் தொடர்ச்சியாக இந்த கடிதத்தை எழுதுகிறேன். இலங்கைத் தீவில் தமிழ் இனத்தைப் பூண்டோடு அழிக்க தொடர்ந்து கொடூரமான இராணுவத் தாக்குதல்களை நடத்தி வரும் சிங்கள இனவெறி அரசுக்கு, இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ராணுவ ஆயுதங்களையும், உதவியையும் வழங்கி வருவது குறித்து, என்னுடைய வேதனையையும் எதிர்ப்பையும் தெரிவிக்கிறேன்.

தமிழ் இனத்தை இராணுவ ரீதியாக தாக்கி அழிக்கும் இனப்படுகொலையைச் செய்யும் குற்றவாளிதான் சிங்கள அரசு என்பது, மறுக்க முடியாத நிரூபிக்கப்பட்ட உண்மை ஆகும். ஈழத்தமிழர்களின் நலனில் உண்மையான அக்கறை உள்ள அரசியல் கட்சிகளும், ம.தி.மு.க.வும் கடுமையாக எதிர்த்ததன் விளைவாக, இந்தியா-இலங்கை இராணுவக்கூட்டு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து இடவில்லை என்றாலும் திரைமறைவில் அத்தகைய இராணுவ ஒப்பந்தத்தின் கூட்டாளியாகவே இந்தியா செயல்பட்டு வருகிறது என்று குற்றம் சாட்டுகிறேன்.

என் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக, இலங்கைக் கடலிலும், பன்னாட்டுக் கடல் பகுதியிலும், கடல் புலிகளுக்கும் இலங்கை கடற்படைக்கும் நடக்கும் சண்டையில், இந்தியக் கடற்படை சிங்கள கடற்படைக்கு தகவல் பரிமாற்றங்கள் முதல் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறேன்.

இலங்கைக்கு இந்தியா எந்தவிதமான ஆயுத உதவியோ, விற்பனையோ செய்வது இல்லை என்று 1998-ல் அனைத்துகட்சி கூட்டத்தில் இந்திய அரசு மேற்கொண்ட முடிவுக்கு முற்றிலும் எதிராக, உங்கள் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சிங்கள அரசுக்கு ஆயுதங்களை அனுப்பி வருகிறது. தமிழர்களின் பிரதிநிதிகளாகப் போராடும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிங்கள இராணுவம் இந்த ஆயுதங்களைப் பயன்படுத்துகிறது.

மேலும், இலங்கை விமானப்படைக்கு உதவுவதற்காக இந்தியா தொடர்ந்து ராடார்களை வழங்கி வருகிறது என்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. எந்த விமானப் படைக்கு இந்த உதவி? இத்தனை ஆண்டுகளாகப் பெண்களை, குழந்தைகளை அப்பாவித் தமிழர்களை ஆயிரக்கணக்கில் குண்டுவீசிப் படுகொலை செய்த இலங்கை விமானப் படைக்குத்தான் இந்த உதவி.

பல தாக்குதல்களை நடத்தி அப்பாவி மக்களை கொன்ற இலங்கை விமானப்படைக்கு இந்த ஆண்டு ஜனவரியிலும், ஜூன் மாதத்திலும் இந்திய அரசு மீண்டும் ராடார்களை வழங்கி உள்ளது. இலங்கை விமானப்படை செஞ்சோலைப் படுகொலை நடத்தியதற்காக இந்திய அரசு அளித்த வெகுமதிதான் இந்த ரேடார்களா? என்ற கேள்வி எழுகிறது.

இத்தகைய அக்கிரமமான நடவடிக்கைகளால், செயல்பாட்டால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, நேரு, இந்திராகாந்தி ஆகியோர் தொலைநோக்கோடு உருவாக்கிப் பின்பற்றிய அயல் உறவுக்கொள்கையை ஆயிரம் அடிக்கு கீழே குழிதோண்டி புதைத்துவிட்டது. இலங்கைத் தீவில் உள்ள தமிழர்களுக்கு எதிராக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, கொடிய துரோகம் இழைத்துவிட்டது.

இலங்கைக்கு இனி எந்தவிதமான ஆயுதங்களும் விற்பதையோ, வாங்குவதையோ உடனடியாக நிறுத்திக் கொள்ளுமாறும், ஏற்கனவே கொடுத்த ரேடார்களை திரும்பப் பெறுமாறும் தங்களை நான் வலியுறுத்திக் வேண்டுகிறேன் என்று அதில் வைகோ தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.