Friday, June 15, 2007

3 ஆண்டுகளுக்குள் பிரபாகரனை படுகொலை செய்ய சிறிலங்கா இராணுவத்துக்கு உத்தரவு:கோத்தபாய ராஜபக்ச.!

[வெள்ளிக்கிழமை, 15 யூன் 2007]

தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை படுகொலை செய்ய சிறிலங்கா இராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளதாக நியூயோர்க் ரைம்சின் அனைத்துலக பதிப்பான அனைத்துலக "ஹெரால்ட் டிரிபியூன்" செய்தி வெளியிட்டுள்ளது.

பாரிசில் அச்சிடப்பட்டு 35 நாடுகளில் விநியோகிக்கப்படும் அனைத்துலக "ஹெரால்ட் டிரிபியூ"னில் நேற்றைய வெளியீட்டின் முதல் பக்கத்தில் புதுடில்லியைச் சேர்ந்த அதன் தெற்காசிய செய்தியாளர் சோமினி சென் குப்தா எழுதியுள்ள கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:

யாழ். குடாநாட்டில் தற்போது புதிய ஒரு அச்சம் தோன்றியுள்ளது. முன்னர் நடந்தவைகளை விட இது புதுவிதமான ஆபத்தாகும். இந்த விசித்திரமான அச்சம் ஊரடங்கு வேளைகளில் மக்கள் கடத்தப்படுவதனால் ஏற்பட்டுள்ளது. கடத்தல்கள் நிகழும் போது இராணுவத்தினரும் கட்டாக்காலி நாய்களும் தான் வீதிகளை ஆட்சி புரிகின்றன.

கறுப்பு நிற ஏரியைத் தாண்டி நிகழ்த்தப்பட்ட பீரங்கித் தாக்குதல் இரவின் அமைதியை குலைத்தது. யாழ். குடாநாட்டில் இருந்து வெளியே செல்லும் சாலை கடந்த ஆண்டு ஓகஸ்டில் இருந்து மூடப்பட்டுள்ளது. இது அந்தப்பகுதியை மக்கள் செல்ல முடியாத பகுதியாக மாற்றியுள்ளது.

இன்று உணவு, எரிபொருட்கள் என்பன குடாநாட்டுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. எனினும் அங்குள்ள நகரத்தின் சந்தை மாலை வேளைகளில் மூடப்பட்டுவிடும். கடை உரிமையாளர்கள் அதிகளவு பொருட்களை கையிருப்பில் வைத்திருக்க விரும்புவதில்லை ஏனெனில் எப்போது கடையை மூடிவிட்டு ஓடிவிடுவோம் என்பது அவர்களுக்கு தெரியாது.

இரவு 7.00 மணிக்கே எல்லாக்கடைகளும் யாழ். நகரத்தில் மூடப்பட்டுவிடும் கட்டாக்காலி நாய்கள் மட்டுமே நகரத் தெருக்களில் ஓடித்திரிகின்றன. இரவு 8.00 மணிக்கு அமுல்ப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டத்திற்கு முன்னராக மக்கள் விடுகளுக்குள் முடங்கிவிடுவார்கள், கதவுகள் பூட்டப்பட்டுவிடும். இது கடந்த 10 மாதங்களாக நடந்துவரும் நிகழ்வு.

இராணுவத்தினர் ஒடுங்கிய வீதிகளில் முனைகளில் மறைந்து பதுங்கிவிடுவார்கள். வாகனங்கள் செல்லும் போது வெளிச்சங்கள் பாய்ச்சப்படும். நாய்களைத்தவிர எல்லாம் அசைவின்றி இருக்கும். இது தான் இன்றைய யாழ்ப்பாணம். கால் நூற்றாண்டு இனப்போரின் வடிவம் இது. புதிய பூகம்பத்துக்கான ஆயத்தம் இது.

எதிர்வரும் ஓகஸ்ட் மாத பருவ மழைக்கு முன்னர் யாழ். குடாநாட்டுக்கான பெரும் சமரை தான் எதிர்பார்ப்பதாக யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறீ தெரிவித்துள்ளார்.

2002 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் செயலிழந்துவிட்டது. கடந்த ஒரு வருடமாக, தீவில் விடுதலைப் புலிகளுக்கும் அரச படையினருக்கும் இடையில் மோதல்கள் வலுவடைந்துள்ளன. இராணுவம் சிங்களவர்களையே பெரும்பான்மையாக கொண்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் தகவல்களின் படி கடந்த 18 மாதங்களில் 4,800 பேருக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

எனினும் இது சுயாதீன தகவல்கள் அல்ல. இது மேலும் தொடரலாம். விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை அழிப்பதற்கும், விடுதலைப் புலிகளை முற்றாக ஒழிப்பதற்கும் தமது படையினருக்கு தான் அறிவுறுத்தி உள்ளதாகவும், விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்தை அழிப்பதே தமது பிரதான இலக்கு எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கடந்த மாதம் எமக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்தப்ப் பணி முடிய 3 ஆண்டு காலமாகும் என்றும் அவர் கூறினார்.

அமைதிப்பேச்சுக்கள் அண்மையில் இல்லை. அனைத்துலக நாடுகளின் அழுத்தங்களும், அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளின் உதவி நிதிகளின் நிறுத்தங்களும் சிறிலங்கா அரசின் இராணுவ தீர்வுத் திட்டத்தில் சிறிய தாக்கத்தையே உண்டு பண்ணியுள்ளது.

விடுதலைப் புலிகளை அமெரிக்கா உட்பட பல நாடுகள் தடை செய்துள்ளன. இரு இருக்கைகளைக்கொண்ட இலகுரக வானூர்திகள் மூலம் அவர்கள் வான் தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். இந்த ஆயுதம் தற்போதுள்ள மிகவும் வலிமையானது.

ஊடகவியலாளர்கள், இராஜதந்திரிகள், உதவி நிறுவனப்பணியாளர்கள் ஆகியோர் படையினரின் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். ஏப்பிரல் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை யாழ். மாவட்டத்தில் இயங்கும் தமிழ் நாளேடு ஒன்றின் ஊடகவியலாளர் தனது வேலைக்கு ஈருளியில் செல்லும் போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மே மாதம், விடுதலைப் புலிகளின் அனுதாபிகள் எனக்கருதப்படுவோருக்கு எதிரான எச்சரிக்கை துண்டுப்பிரசுரங்கள் யாழ். பல்கலைக்கழகத்தில் ஒட்டப்பட்டிருந்தது. பாதுகாப்புத் தேடி கொழும்புக்கு வருவதற்காக 15,000 மக்கள் கப்பலுக்கு காத்திருக்கின்றனர். அவர்கள் தற்போதும் அச்சத்துடன் தான் வாழ்கின்றனர். எந்த நேரமும் எதுவும் நடைபெறலாம் என ரவீந்திரன் இராமநாதன் என்ற தையல் தொழிலாளி தெரிவித்தார். எல்லாவற்றிலும் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திற்கு போர் புதிதல்ல. அங்குள்ள ஆலயங்கள் மற்றும் தேவாலயங்களிலும் முன்னர் நடைபெற்ற போரின் வடுக்கள் உள்ளன. அங்குள்ள மக்களுக்கு ஓடுவதும், மரணங்களும் பழக்கமாகி விட்டது. வேறு எந்த இடமும் இவ்வளவு துன்பத்தை அனுபவிக்கவில்லை, ஏனெனில் அவற்றிற்கு யாழ்ப்பாணத்திற்கு உள்ள சிறப்பம்சங்கள் இல்லை. அது விடுதலைப் புலிகள் போர் புரியும் தாய்நாட்டின் இதயப்பகுதியாகும்.

எனினும் யாழ். குடாநாட்டில் தற்போது புதிய ஒரு அச்சம் தோன்றியுள்ளது. முன்னர் நடந்தவைகளை விட இது புதுவிதமான ஆபத்தாகும். இந்த விசித்திரமான அச்சம் ஊரடங்கு வேளைகளில் மக்கள் கடத்தப்படுவதனால் ஏற்பட்டுள்ளது. இந்த கடத்தல்கள் நிகழும் போது இராணுவத்தினரும் கட்டாக்காலி நாய்களும் தான் வீதிகளை ஆட்சி புரிகின்றன.

யார் கடத்தப்படப் போகின்றனர்? ஏன்? என்பது யாருக்கும் தெரிவதில்லை. சில சமயங்களில் வீதிகளில் சடலங்கள் கிடக்கும் பல சமயங்களில் அதுவும் கிடைப்பதில்லை.

கடந்த மே மாதத்தில் ஒரு இரவில் ஊரடங்குச் சட்ட வேளையில் சி.குகரஞ்சனின் மகனான கண்ணன், தனது பெற்றோரின் படுக்கை அறையின் தரையில் இருந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென முன்கதவை தள்ளித் திறந்து கொண்டு உள்நுழைந்த நான்கு ஆயுததாரிகள் கண்ணனை விசாரணைக்காக தம்முடன் வருமாறு பலவந்தமாக அழைத்துச் சென்றுவிட்டனர். அவர்கள் தம்மை இனங்காட்டிக் கொள்ளவில்லை. தமது அடையாளங்களை தெரிவிப்பது உங்களுக்கு தேவையற்றது என தெரிவித்தனர். ஏன்? எங்கு கண்ணன் கொண்டு செல்லப்படுகின்றார் என்ற விளங்கங்களும் தரப்படவில்லை. ஆயுததாரிகள் சிவில் உடையில், கைத்துப்பாகியுடன் வந்திருந்தனர். மகனை விரைவில் விட்டுவிடுவதாக உறுதியளித்தனர்.

பாடசாலை உயர்தர மாணவனான கண்ணன் மே 4 ஆம் நாள் கடத்தப்பட்ட பின்னர் இன்று வரை வீடு திரும்பவில்லை. உயர்தர வகுப்பு மாணவனான கண்ணன் மாணவச் செயற்பாட்டாளர் ஆவார். அவர் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடன் தொடர்புகளை கொண்டிருந்தவர். இதனை படையினர் அரச எதிர்ப்பு போராட்டம் எனக்கூறி வருகின்றனர். எனினும் அரசியலில் ஈடுபட வேண்டாம் என தனது மகனுக்கு தாம் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியதாகவும், அவரை மேற்படிப்புக்காக வெளிநாட்டுக்கு அனுப்ப திட்டமிட்டிருந்ததாகவும் கண்ணனின் தந்தை தெரிவித்துள்ளார்.

ஒரு மாதம் காத்திருந்து மற்றும் தேடுதல் நடத்தியதற்கு பின்னர், கடத்தியவர்கள் ஏன் தனது மகனை வீட்டில் வந்து விசாரணை செய்யவில்லை? ஏன் கைது செய்து சிறையில் அடைக்கவில்லை என்ற கேள்விகளை கண்ணனின் தந்தை எழுப்பியுள்ளார். பெற்றோரின் கரங்களில் இருந்து பிள்ளைகளை பறித்துச்செல்வது மிகவும் கொடுமையானது என அவர் மேலும் தெரிவித்தார்.

2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து 2007 ஆம் ஆண்டு ஏப்பிரல் வரையிலும் யாழ். குடாநாட்டில் நடைபெற்ற கடத்தல்கள் தொடர்பாக தமக்கு 805 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு, அரச நிறுவனங்கள் என்பன தெரிவித்துள்ளன. எனினும் 230 கடத்தல்களே நடைபெற்றுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

சில சமயங்களில் மட்டும் சிலர் இதில் இருந்து தப்புவதுண்டு. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அருணகிரிநாதன் நிரூபராஜ் என்ற பல்கலைக்கழக மாணவன் அவரது கிராமத்தில் இருந்து கடத்திச் செல்லப்பட்டிருந்தார். அவர் பலதடவை தொடர்ச்சியாக இராணுவ முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை கொண்டுள்ளாரா என விசாரணை செய்யப்பட்டார்.

அதன் போது கடத்தல் காரர்கள் தன்னை தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு தமது பாதத்தில் அடித்ததாகவும், தனது தலையை பொலித்தின் பையினால் மூடிக் கட்டிவிட்டு அதற்குள் பெற்றோலை ஊற்றியதாகவும், தனது மல வாசலின் ஊடாக தடியை செலுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

7 நாட்களின் பின்னர் தொடரூந்து பாதையருகே அவர் விடப்பட்டிருந்தார். அதன் பின்னர் அவரது சிறுநீரகம் செயலிழந்து விட்டது. ஒரு காதும் கேட்பதில்லை. எந்த உணவையும் அவரால் உண்ண முடியவில்லை. ஏப்பிரல் மாதம் நிரூபராஜ் (வயது 26) தென்னிந்திய நகரான சென்னைக்கு சென்று விட்டார். தனக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்புகள் இல்லை என அவர் கூறிவருவதுடன் தனது கடத்தல் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளை அகற்றும் நோக்குடன் கடத்தல்களை துணை இராணுவக்குழுவினர் செய்வதாக யாழ். மாவட்ட இராணுவத் தளபதி சந்திரசிறீ தெரிவித்துள்ளார். எனினும் படையினரிலும் எல்லோரும் சுத்தமானவர்கள் என தன்னால் கூற முடியாது எனவும், தமது கடமை அவர்களை பிடித்து தண்டிப்பது தான், கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் அல்ல விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குகரஞ்சனின் மகன் தொடர்பாக கருதத்து தெரிவிக்கையில், தன்னால் அவரை தனிப்பட்ட முறையில் கண்டறிய முடியும் எனவும், நாம் தினமும் மக்களை கொல்வதாக அனைத்துலக சமூகம் நினைப்பதனை நான் விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த மே மாதம் அமெரிக்காவின் உயர் பிரதிநிதியான ரிச்சர்ட் பெளச்சர், யாழ். வந்த போது சந்திரசிறியை சந்தித்து கடத்தல்கள் தொடர்பாக தமது அதிருப்தியை தெரிவித்திருந்தார். அதன் பின்னர் கடத்தல்கள் குறைந்திருந்தன. கத்தோலிக்க ஆலயங்களுக்கும் நிச்சயம் அற்ற தன்மை தோன்றியுள்ளது. அது அல்லைப்பிட்டியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களின் இல்லமாக மாறியிருந்தது.

இலங்கையில் 300,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

போர் ஆரம்பமாகியதில் இருந்து இந்த ஆலயத்திற்கு சில குடும்பங்கள் 4 முறை இடம்பெயர்ந்துள்ளன. கடந்த ஓகஸ்ட்டில் அல்லைப்பிட்டியில் மோதல் நடைபெற்ற போது மக்கள் தேவாலயத்தை நோக்கி ஓடினார்கள். ஆனால் எறிகணைகள் அங்கு ஏவப்பட்டன.

தேவாலயத்தின் மதகுருவான வண. ஜிம் பிறவுண் அடிகளார், வெள்ளைக்கொடியை பிடித்தவாறு மக்களை இங்கு கொண்டு வந்து சேர்த்தார். சிறீலங்கா கடற்படையினர் மக்களை தாக்கிய போது பிறவுண் கோபத்துடன் வாதாடியிருந்தார். ஆனால் சில நாட்களில் அவர் காணாமல் போய்விட்டார்.

கடற்கரைப் பகுதியை படையினர் ஆக்கிரமித்துள்ளதால் அங்கு மீன் பிடிக்க முடியாது என பல குடும்பங்கள் துன்பத்தில் மூழ்கியுள்ளன. பல வராங்களாக உணவு உதவிகளும் கிடைக்கவில்லை. அரிசிக்காக பெண்கள் தமது தங்க வளையல்களை விற்பனை செய்து வருகின்றனர். சில சமயம் அவர்கள் சாப்பிடுவதில்லை. அதனை தமது பிள்ளைகளுக்காக சேமிக்கின்றனர்.

சத்தியசீலன் திலகா என்ற தாய் சிறிதளவான உணவே உட்கொள்வதால் முகாமில் பிறந்த தனது 4 மாதக் குழந்தைக்கு போதிய பாலூட்ட முடியாத நிலையில் உள்ளார்.

முன்னைய போர் நிலைமைகளிலும் தான் 4 பிள்ளைகளை வளர்த்ததாகவும், எனினும் பாலுக்கு பற்றக்குறை அப்போது ஏற்படவில்லை எனவும், இன்று காலை தனது மூத்த மகன் சாப்பாடு இன்றியே பாடசாலை சென்றதாகவும், தாயாரும் எதுவும் சாப்பிடவில்லை எனவும் சத்தியசீலன் (வயது 39) தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையினால் மேற்கொள்ளப்பட்ட அவசர ஆய்வுகளில் யாழில் பெருமளவான சிறுவர்கள் போசாக்கின்மையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அதன் ஆய்வு வெளியீடுகளை அரசு தடுத்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்: புதினம்

2 comments:

  1. இப்படி சொன்னவைதான் ஜெயவர்த்தனா,பிரேமதாச டிபி விஜயதுங்க சந்திரிகா ஏன் ராஜீவ் காந்தி டிக்ஸிட் எல்லோரும் போய் விட்டீனம் பிரபாகரன் மட்டும் இன்னும் வெற்றியுடன் இருகின்றார் இந்த கோத்தா பையா தலைவருக்கு எம்மாத்திரம்

    ReplyDelete
  2. ஹீ ஹீ உங்களுக்கு 3மாசமே ரொம்ப கூட மிஸ்ட்டர் கோத்தபாய.?

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.