Saturday, February 03, 2007

வெள்ளவத்தைப் பகுதியில் தமிழ் பெண்களை இலக்கு வைத்து வழிப்பறிக்காரர்கள் கைவரிசை.!!!

[03 - February - 2007] கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் வழிப்பறிக்காரர்களினால் தினமும் தமிழ்ப் பெண்களும் யுவதிகளும், பெறுமதியான தங்கள் உடைமைகளை இழந்து வருகின்றனர். வீதிகளில் செல்லும் பெண்களின் தங்கச் சங்கிலியை அறுத்துச் செல்வதும் மிரட்டிப் பறிப்பதும் வாடிக்கையாகிவிட்ட நிலையில் அண்மைக்காலமாக குறிப்பிட்ட ஒரு குழுவால் பஸ் பயணிகள் பெரும் தொல்லைக்குள்ளாகின்றனர். வெள்ளவத்தைக்கும் தெகிவளைக்குமிடையில் பஸ் பயணிகளை இலக்கு வைக்கும், நால்வரைக் கொண்ட குழுவால் தினமும் தமிழ்ப் பெண்களும் யுவதிகளும் பணம், நகைகள் என பெறுமதியான பொருட்களை இழந்து வருகின்றனர். பயணிகள் பஸ்களின் பின்புற மிதிபலகையில் பயணம் செய்யும் இந்த வழிப்பறிக்காரர்கள் தமிழ் பெண்களும் யுவதிகளும் பஸ்களிலிருந்து இறங்கும் போது வழியை மறித்து நிற்பர். இருவர் மிதிபலகையில் வழிமறித்து நிற்கையில், பஸ் புறப்படுவதற்கு முன் இறங்கிவிடவேண்டுமென்ற அவசரத்தில் இவர்களை இடித்துத் தள்ளிக்கொண்டு இறங்கும் பெண்களின் உடைமைகளை இந்த வழிப்பறிக்காரர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் மிக நுட்பமாக அபகரித்து விடுகின்றனர். பஸ்ஸிலிருந்து இறங்கியபின்னர்தான் தாங்கள் சங்கிலியையோ, அல்லது பேர்ஸுடன் பணத்தையோ அல்லது அடையாள அட்டை உட்பட முக்கிய ஆவணங்களையும் பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளையும் இழந்த விடயம் தெரியவரும். நால்வர் கொண்ட இந்த வழிப்பறிக்காரர்களால் வெள்ளவத்தைக்கும் தெகிவளைக்குமிடையில் தினமும் பெண்கள் பலர் இவ்வாறு பொருட்களை இழந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.