Friday, February 02, 2007

இன்று நாடு திரும்பும் ரணிலுக்கு அமோக வரவேற்பளிக்க ஏற்பாடு!

[வெள்ளிக்கிழமை, 2 பெப்ரவரி 2007]


தென்னிலங்கை அரசியல் களத்தில் திடீர் திருப்பங்கள் நிகழ்ந்தபோது வெளிநாடுகளில் தங்கியிருந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடு திரும்புகிறார்.
இன்று நண்பகல் நாடு திரும்பவுள்ள அவருக்கு அமோக வரவேற்பு அளிக்க ஐக்கியதேசியக் கட்சியினர் ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.


18 நாடாளுமன்ற உறுப்பினர்களை ஐ.தே.கட்சி இழந்துள்ள மிகவும் நெருக்கடியான ஒரு தருணத்தில் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்புகிறார்.

அவர் கட்டுநாயக்கவிலிருந்து வாகனத் தொடரணி மூலம் கொழும்புக்கு அழைத்துவர கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்கவை வரவேற்க செல்பவர்களுக்கு வாகன வசதிகள் மற்றும் ஏனைய வசதிகள் செய்துகொடுக்கப்படும் என கட்சியின் முக்கியஸ்தர் தினேஷ் வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

இன்று நாடு திரும்பும் ரணில் விக்கிரமசிங்க நாளை 3ஆம் திகதி ஐ.தே.க. மாகாணசபை உறுப்பினர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவார்.

ஐ.தே.கட்சியின் செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை 5ஆம் திகதி நடைபெறவுள்ளது. அரசுடன் இணைந்து அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட 18 பேர் தொடர்பாக எடுக்கவேண்டிய நடவடிக்கை குறித்தும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். அரசுடன் இணைந்துஅமைச்சுப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட 18 பேரும் ஐ.தே.க. மாற்றுக் குழு வென தம்மை இனங்காட்டிக் கொள்வதை எதிர்த்து நீதிமன்ற தடை உத்தரவொன்றைப் பெறவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.