Thursday, February 15, 2007

முல்லைத்தீவில் வான்குண்டு வீச்சு: 3 பொதுமக்கள் காயம்.

[வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2007]

முல்லைத்தீவு மாவட்டம் நாயாறு மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து சிறிலங்கா வான்படையினரின் மிக் - 27 ரக விமானங்கள் நடத்திய குண்டுத் தாக்குதலில் 3 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

இத்தாக்குதல் இன்று வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் இடம்பெற்றது.

தாக்குதலில் பொதுமக்களின் 2 வீடுகளும் சேதமடைந்துள்ளன.

ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் குடியிருப்புப் பகுதி மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இரு தடவைகள் தாக்குதல் நடத்தப்பட்ட வேளை, பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் சிதறி ஓடி அவலப்பட்டனர்.

தாக்குதல் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் சிறிலங்கா வான்படையினரின் வேவு விமானம் தொடர்ச்சியாக அப்பகுதிகளை வட்டமிட்டது.

வான்குண்டு வீச்சின் பின்னர் 12 மணிமுதல் மணலாற்றுப் பகுதியிலிருந்து சிறிலங்காப் படையினர் ஆட்டிலெறி மற்றும் பல்குழல் எறிகணை தாக்குதலை செறிவாக நடத்தியுள்ளனர்.

மக்கள் குடியிருப்புகளை அண்மித்து எறிகணைகள் செறிவாக வீழ்ந்துவெடித்துள்ளன.

சிறிலங்கா வான் படையினர் அண்மையில் புதிதாக கொள்வனவு செய்த மிக் - 27 ரக விமானங்களே தாக்குதலை நடத்தியதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆதாரம்:புதினம்