Wednesday, February 14, 2007

சிறிலங்காப் படையினரின் மீசாலை முகாம் மீது எறிகணை வீச்சு: 10 படையினர் காயம்.

[புதன்கிழமை, 14 பெப்ரவரி 2007]

யாழ். தென்மராட்சியில் ஏ-9 வீதியுடன் இணைந்ததாக உள்ள மீசாலை சிறிலங்காப் படையினரின் முகாம் மீது இன்று எறிகணை வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


இன்று புதன்கிழமை மதியம் 11.30 மணியிலிருந்து 12 மணிவரை நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 40-க்கும் அதிகமான எறிகணைகள் வீசப்பட்டுள்ளன. இதில் முகாமிலிருந்த 10-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர்.

கொடிகாமம், மீசாலை, சாவகச்சேரி உட்பட அப்பகுதிகளில் அமைந்துள்ள பல்வேறு படை முகாம்கள் மீதும் தமிழீழு விடுதலைப் புலிகள் ஏக காலத்தில் எறிகணை வீச்சுத் தாக்குதல்களை நடத்தினர்.

படையினரின் முகாம்களில் இருந்து பதிலுக்கு ஏவப்பட்ட எறிகணைகள் மக்கள் குடியிருப்புக்கள் மீது வீழ்ந்து வெடித்துள்ளன.

கொடிகாமம், அல்லாரை வடக்கைச் சேர்ந்த சி.குலசேகரம் (வயது 64), இவ்வாறு விழுந்து வெடித்த எறிகணையில் படுகாயமடைந்துள்ளார்.

கொடிகாமம் சந்தைப் பகுதியில், சனநெருக்கடி மிகுந்த வேளையில் படையினர் வீசிய எறிகணை வீழ்ந்து வெடித்ததில் மேலும் சில பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

படையினர், பழி தீர்க்கும் முயற்சியில் இறங்கலாம் என்பதால், தென்மராட்சி வீதிகள் வெறிச்சோடிக் கிடப்பதுடன், அங்கு பதற்ற நிலையும் காணப்படுகின்றது.