Monday, January 29, 2007

அரசு – ஐ.தே.க. உடன்படிக்கை கிழித்தெறியப்பட்டது

[திங்கட்கிழமை, 29 சனவரி 2007]

சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஐக்கிய தேசியக் கட்சி செய்துகொண்ட நல்லாட்சிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை காலாவதியாகிவிட்டது என உத்தியோகபூர்வமாக அறிவித்த ஐ.தே.க. தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ருக்மன் சேனாநாயக்க, உடன்படிக்கையின் நகலைக் கிளித்தெறிந்ததோடு, இனிமேல் அரசாங்கத்துக்கு அரசியல் ரீதியான எந்தவிதமான ஒத்துழைப்பையும் தமது கட்சி வழங்காது எனவும் அறிவித்திருக்கின்றார்.


கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே ருக்மன் சேனாநாயக்க இந்த அறிவிப்பை வெளியிட்டார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்தததாவது:

''கட்சிக்கு எவ்விமான அறிவித்தல்களையும் வழங்காது, செயற்குழுவின் அனுமதியின்றி அரசாங்கத்துடன் இணைந்து பதவிகளைப் பெற்றுள்ளோருக்கு எதிராக கட்சியின் யாப்பின் அடிப்படையில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

கட்சியிலிருந்து வெளியேறுவது என்பது ஒன்றும் புதிய விடயமல்ல. இது அந்தக் காலத்திலிருந்து இடம்பெற்றுவரும் ஒரு நிகழ்வாகும். எமது கட்சி ஆலமரத்தைப் போன்ற பலமானதாகும். அது ஒரு சிலரில் தங்கியிருக்கவில்லை. எனவே, ஒரு சில குழுவினரின் வெளியேற்றம் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது.

அரசாங்கத்துடன் எமது உறவு முறிவடைந்துள்ள போதிலும், தேசியப் பிரச்சினை தொடர்பாக எமது ஆதரவை வழங்குவோம். அதற்காகத்தான் புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொண்டோம். ஆனால், அரசுத் தலைவர் புரிந்துணர்வுடன் நடந்துகொள்ளவில்லை. எனவே நாம் தொடர்ந்தும் புரிந்துணர்வைக் கடைப்பிடிப்பதில் அர்த்தம் இருக்கப்போவதில்லை.'' இவ்வாறு ருக்மன் சேனாநாயக்க தெரிவித்தார்.