Friday, December 15, 2006

தமிழீழ விடுதலைப் போராட்டக் களத்தில் ஒரு மலை சரிந்தது

தமிழீழ விடுதலைப் போராட்டக் களத்தில் ஒரு மலை சரிந்தது: தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் தமிழீழ விடுதலைப் போராட்டக் களத்தில் ஒரு மலை சரிந்து விட்டது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசர் அன்ரன் பாலசிங்கத்தின் மறைவு குறித்து தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழீழ விடுதலைப் புலிகளின் நீண்டகால அரசியல் மதியுரைஞரும் கொள்கை வகுப்பாளரும் அரச தந்திரியும் ஆன திரு. அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவு கேட்டு மீளாத் துயர் அடைகிறோம். அவர் கொடிய நோயினால் படுக்கையில் வீழ்ந்திருந்தாலும் அவர் இன்னும் சிறிது காலம் உயிர் வாழ்வார் என்று நம்பி இருந்தோம். அந்த நம்பிக்கை பொய்த்துவிட்டது. திரு. பாலசிங்கம் 30 ஆண்டுகாலத்துக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டக் களத்தில் கொள்கைப் பற்றோடும் நெஞ்சுறுதியோடும் மலைபோல உயர்ந்து நின்ற ஆயுதம் ஏந்தாத போராளி ஆவார். யாழ்ப்பாணத்திலும் வன்னிக் காடுகளிலும் இணையரோடு கரந்து வாழ்ந்த காலங்களில் எதிரி படையிடம் இருந்து மயிரிழையில் உயிர் தப்பியவர். சொத்தும் சுகமுமே வாழ்க்கை என்று வாழ்பவர்கள் மத்தியில் அவர் ஒரு அப்பழுக்கற்ற கொள்கைவாதியாகவும் இலட்சியவாதியாகவும் வாழ்ந்தார். தனக்காக வாழாமல் தான் பிறந்த மண்ணும் மக்களும் இனமும் விடுதலை பெற வேண்டும் என்ற அசைக்க முடியாத வேட்கையோடு வாழ்ந்தார். திம்பு முதல் ஜெனிவா வரை நடந்த அமைதிப் பேச்சு வார்த்தைகள் அனைத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பாகக் கலந்து கொண்டு தமிழ்மக்களது பக்களம் உள்ள நியாயத்தை எடுத்துக்காட்டி வழக்குரைத்தவர். . அண்மையில் பேராசிரியர் எச்.எல்.பீரீஸ் பேசும் போது பாலசிங்கத்தின் இழப்பு தமிழர்களைவிட சிங்களவர்களுக்குப் பெரிய இழப்பாக இருக்கும் எனக் கூறினார். விடுதலை பெற்ற தமிழீழ நாட்டின் வரலாறு எழுதப்படும் போது அவருக்கு ஒரு அத்தியாயம் ஒதுக்கப்படும் என்பது திண்ணம். மேடைகளில் சாதாரண பேச்சுத் தமிழில் மணிக்கணக்கில் நகைச்சுவையோடு பேசிக் கைதட்டல் வாங்கிய ஒரே பேச்சாளர் அவர்தான். ஆண்டு தோறும் தமிழீழத் தேசியத் தலைவர் ஆற்றும் மாவீரர் உரைக்கு பொழிப்புரை வழங்கி உலகம் வாழ் தமிழ்மக்கள் அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியவர். ஆங்கிலம் தமிழ் இரண்டு மொழிகளிலும் புலமை படைத்த அவர் (1) போரும் அமைதியும் (2) The Duplicity of Politics என்ற இரண்டு நூல்களை எழுதிச் சமகாலத் தமிழர் அரசியல் வரலாற்றைப் பதிவு செய்துள்ளார். அன்ரன் பாலசிங்கம் அவர்களுடைய கல்லும் முள்ளும் நிறைந்த அரசியல் வாழ்க்கையில் அவருக்கு ஒல்லும் வகை அனைத்திலும் கைகோர்த்துத் தானும் ஒரு போராளியாக வாழும் திருமதி அடேல் பாலசிங்கம் அவர்களுக்கு எங்களது இரங்கலையும் துயர் பகிர்வினையையும் தெரிவித்துக் கொள்கிறோம்.