Wednesday, November 29, 2006

பிரபாகரனின் உரையினை உதாசினப்படுத்தி எதிர்விளைவுகளை ...

பிரபாகரன் யுத்தத்தை பிரகடனப்படுத்தியுள்ளார் சிக்கலான நிலையை எதிர்கொள்ளப்போகின்றோம் அமைச்சர் அநுரா எச்சரிக்கை; பேச்சுமேசைக்கு வரவழைக்க வேண்டும் என்கிறார். [Wednesday November 29 2006 ] [virakesari.lk] தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தனது மாவீரர் தின உரையில் வாய்மூலமாக யுத்தத்தை பிரகடனப்படுத்தியுள் ளார். இதனூடாக சிக்கலான நிலைமைகளை எதிர்கொள்ளப்போகின்றோம் என்பது மட்டும் உண்மை என்று சுற்றுலாத்துறை அமைச்சர் அநுரா பண்டாரநாயக்க சபையில் நேற்று தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவுசெலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு பதிலளித்து உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் புரிந்துணர்வு உடன்படிக்கை.செய்து கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்திலேயே பிரபாகரன் வாய்மூலம் யுத்த பிரகடனத்தை விடுத்துள்ளார். இவ்வாறான சூழ்நிலையில் பிரபாகரன் மீண்டும் பேச்சுக்கு வருவாரா? என்பது சந்தேகமே.பிரபாகரனின் உலகளாவிய பேச்சுக்கு இலங்கை ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆக குறைந்தது ஒரு சொல்லைக்கூட ஒலி, ஒளிபரப்பு செய்யவில்லை. ஆனால், பிரபாகரனின் உரை வெளிநாட்டு ஊடகமொன்றில் ஒளிபரப்பு செய்தபோது நான் பார்த்து கொண்டிருந்தேன். பிரபாகரன் தனதுரையில் வாய்மூலமாக யுத்தத்தை பிரகடனப்படுத்தியதுடன் மிகவும் நிதானத்துடன் நம்பிக்கையுடன் உரையாற்றிக்கொண்டிருந்தார்.இனப்பிரச்சினைக்கு "அதிகாரபகிர்வு முறையூடாக அல்லது சொல்லை வைத்துக்கொண்டு முரண்டுபிடிக்காமல் ஏதாவது ஒரு முறையில் தீர்வு கண்டேயாக வேண்டும். இல்லையென்றால் சிக்கலான நிலைமைகளை எதிர்கொள்ள வேண்டிவரும். எதிர்கொள்ள போகின்றோம்.பேச்சுக்கு வரவழைக்க வேண்டும் பிரபாகரன் தனது உரைக்கு பின்னர் மீண்டும் பேச்சுக்கு வருவாரா? என்பது சந்தேகமே. எவ்வாறெனினும் இந்தியா அல்லது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் உதவிகளை பெற்றுக்கொண்டு புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்கு எப்படியாவது வரவழைக்க வேண்டும்.பேச்சுமூலம் தீர்வு காண்பதற்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டு சமாதானத்தை ஏற்படுத்துவதனூடாக மட்டுமே நாட்டை முன்னேற்றமடையச் செய்ய முடியும். கடந்த காலத்தை மறந்து விட்டு எந்த நாட்டையாவது அழைத்துக் கொண்டு புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து பேச்சின் மூலமாக தீர்வு காண வேண்டும். ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை பிரபாகரனின் மாவீரர் தின உரைக்கு முக்கியத்துவம் கொடுக்காத இலங்கை ஊடகங்கள் பிரபாகரன் சுனாமியால் பலியாகிவிட்டார், அவருக்கு உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கின்றது என்றெல்லாம் செய்திகளை வெளியிட்டன. ஆனால், அவர் திடகாத்திரத்துடன் ஆரோக்கியமுடனே இருந்து கொண்டிருக்கின்றார். தயவு செய்து பொய்யான செய்திகளை பரப்பாதீர்கள்.இலங்கையில் எந்தவொரு அரசியல் தலைவர் கூட பிரபாகரனை சந்தித்ததில்லை. ஆனால், பல தலைவர்களை இழந்துவிட்டோம். ஐ.தே.க. தலைவர்களை கூட கொலை செய்தனர் என்பதனால் அவர் தொடர்பான ""புரட்டுகளை நிறுத்துங்கள். புஷ் தோல்வி வெளிநாட்டுக்கொள்கை காரணமாக ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் தோல்வியை தழுவிக்கொண்டு வருகின்றார். ஈராக்கிய மக்கள் படுகின்ற துன்பங்களை புஷ் எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதனால் ஈராக்கிய மக்களுக்கு உரிய தீர்வு வழங்கப்படல் வேண்டும். இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணாவிட்டால் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்ய முடியாது. முதலீடுகள் கிடைக்காது என்பதை நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். யுத்த நிலைமையை மாற்ற வேண்டும். யுத்த நிலைமை தோன்றினால் வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்காது. சுற்றுலா துறை வீழ்ச்சியடையும். நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என்பதனால் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும். அத்துடன் சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கு ஒதுக்கப்படுகின்ற நிதிகள் முதலீடுகள் பரவலாக்கப்படல் வேண்டும் என்பதுடன் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. கடந்த கால செயற்பாடுகளை மறந்துவிட்டு ஏதோ ஒரு நாட்டினை அழைத்து புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்வு காணப்பட வேண்டும். மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் எந்த அமைச்சராக இருந்தாலும் அமைச்சினூடாக மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். சுனாமியினால் உல்லாச பிரயாணத்துறை பாதிப்படைந்தது. அத்துடன் பயங்கரவாத செயற்பாடுகளும் உல்லாச பிரயாணத்துறையின் வளர்ச்சியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திவருகின்றது. அமைச்சின் திட்டங்களை முன்னெடுக்க நிதியை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் நிதியமைச்சின் செயலாளரை கெஞ்ச வேண்டியுள்ளது. 2006 ஆம் ஆண்டிற்கான நிதி இன்னும் கிடைக்கவில்லை.பெற்றுக்கொள்ளப்படுகின்ற நிதி கூட கிடைப்பதில்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். இலங்கையில் பயங்கரவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்ற போது சில வெளிநாட்டு ஊடகங்கள் உல்லாச பிரயாணத்துறையின் கேந்திர நிலையம் தாக்கப்பட்டதாக செய்திகளை வெளியிடுகின்றன. அச்செய்தியை பார்க்கின்ற மில்லியன் கணக்கான மக்கள் இலங்கை குறித்தும் இலங்கையின் உல்லாச பிரயாணத்துறை குறித்தும் தப்பான கண்கொண்டு பார்த்து வருவார்கள்..அத்துடன் கொழும்பில் பயங்கரவாத செயற்பõடுகள் முன்னெடுக்கின்றபோது உல்லாசதுறை பெரிதும் பாதிப்படைகின்றது. உல்லாச பிரயாண துறையை மேம்படுத்துவதற்கு தேவையான உதவிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செய்து வருகின்றார். அத்துடன் மஹிந்த சிந்தனையிலும் பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்பதையும் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். உல்லாச பிரயாணத்துறைக்கு கடந்த வருடங்களைப் பார்க்கினும் குறைந்தளவான தொகையையே செலவு செய்துள்ளோம் என்பதை கூறுவதுடன் உல்லாச பயணத்துøறக்கு கூடுதலான நிதி தேவைப்படுகின்றது. இலங்கைக்கு வருகின்ற உல்லாச பிரயாணிகள் விபசாரிகளா? இல்லையா? என்பது குறித்து எம்மால் எப்படி இனங்காண முடியும். விபசாரத்தை அரசாங்கம் ஊக்குவிக்கவில்லை என்பதுடன் சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றோம். விடுதலைப் புலிகளுடன் முன்னெடுக்கப்படுகின்ற சிவில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டில் நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்துவதனூடாக மட்டுமே உல்லாச பிரயாணத்துறையை வளர்ச்சியடைய செய்ய முடியும்..