கிண்ணியாவுக்கு இடம்பெயர்ந்த மூதூர் முஸ்லிம்கள் திரும்பினர்! கடந்த வாரம் வெளியிடப்பட்ட அநாமேதேய துண்டுப்பிரசுரத்தையடுத்து அச்சம் காரணமாக மூதூரிலிருந்து கிண்ணியாவுக்கு இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் நேற்றுக் காலை மீண்டும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் சென்றுள்ளனர். கிண்ணியா அல் அக்ஸா ஜூனியர், சீனியர் மகா வித்தியாலயங்களிலும், மாஞ்சோலை முஸ்லிம் மகளிர் மகாவித்தியாலயத்திலும் மற்றும் உறவினர், நண்பர்களின் வீடுகளிலும் தங்கியிருந்த மக்கள் இவ்வாறு சென்றுள்ளனர். கிண்ணியா துறையடியிலிருந்து கடல் மார்க்கமாக சுமார் 10 இற்கும் மேற்பட்ட இயந்திரப் படகுகளில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வயோதிபர்கள் எனப் பலரும் மூதூர் சென்றனர். இவர்களுக்கான கடல்வழிப் பாதுகாப்பைக் கடற்படையினர் வழங்கி வருகின்றனர். குறிப்பிட்ட சில படகுகள் மட்டும் சேவையில் ஈடுபடுத்தப்படுவதனால் அப்படகுகள் திரும்பி வரும்வரைக்கும் கிண்ணியாத் துறையடியில் பலர் காத்துநின்றனர். இதேவேளை, மீதமாக இருக்கின்ற சிலர் மீண்டும் மூதூர் செல்ல மறுத்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது.





