தமிழ் எம்.பிக்களின் அமைதிப் போராட்டத்தை அரசு ஏன் இன்னும் கணக்கில் எடுக்கவில்லை? சபையைக் குழப்பினால்தான் நடவடிக்கை எடுப்பீர்களா என்று ஹக்கீம் கேள்வி வடக்கு கிழக்கில் சுமுக நிலையை ஏற்படுத்தக் கோரி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்கள் நாடாளுமன்றில் அமைதியான முறையில் நடத்திவரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தை அரசு ஏன் இன்னும் கவனத்தில் எடுக்காமல் அப்போராட்டத்திற்கு ஒரு பதில் சொல்லாமல் இருக்கின்றது.? அமைதியாகப் போராடுவதை விட்டுவிட்டு மிகவும் ஆக்ரோசமாக ஆரவாரத்துடன் சபை நடவடிக்கைகளைக் குழப்பும் வகையில் போராட்டம் நடத்தினால்தான் அரசு கணக்கில் எடுக்குமா? இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற விவாகம், பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள் தொடர்பான சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் கேள்வி எழுப்பினார்.அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது:தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் தொடர்ந்து இரு நாள்களாக இந்தச் சபையில் அமைதியான முறையில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டத்தை அரசு கணக்கில் எடுக்காமல் அதை உதாசீனம் செய்து வருகிறது. இதற்கு ஒரு நல்ல பதிலைதர அரசு இன்னும் முன்வரவில்லை.எனக்கு முன்பு பேசிய அமைச்சர் டீ.பி ஏக்கநாயக்க, இந்தப் போராட்டத்தை உதாசீனம் செய்யும் வகையில் பேசினார்.இந்தியாவுக்குச் சென்று இந்தியப் பிரதமரைச் சந்திக்க முடியாமல் போனதால் மீண்டும் நாடு திரும்பி அமைதியான முறையில் இங்கு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இப்போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் கூறினார். அப்படியென்றால் அரசு அவர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகிறதா? அரசு தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரேனும் சும்மாவேனும் இப்போராட்டத்தைப்பற்றி ஒன்றும் பேசவில்லை. கணக்கே எடுக்காமல் நடந்துகொள்கின்றனர்.அமைதியான போராட்டத்தை விடுத்து ஆக்ரோஷமான முறையில் போராடினால்தான் அரசு கவனத்தில் எடுக்கமா? கடந்த காலங்களில் அமைதியான போராட்டங்கள் கொச்சைப் படுத்தப்பட்டதால் அவை வன்முறைகளாக மாறி நாட்டையே அழித்து வருகின்றது. நான் இவ்வாறு பேசுவதால் புலிகளுக்கு வக்காலாத்து வாங்குகிறேன் என்று சொல்லக்கூடாது. நான் புலிகளின் மனித உரிமை மீறல்களை வன்மையாகக் கண்டிப்பவன்.மூதூரில் புலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறலை நான் மிகவும் வன்மையாகக் கண்டித்திருந்தேன். புலிகளின் தலைவர்கள் அவர்களுக்குக் கீழே உள்ள புலிகள் உறுப்பினர்களைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டனர் என்று கூறியிருந்தேன்.தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சிறுபான்மை இனமக்களின் நலன்களுக்காக இவ்வாறு போரட்டத்தில் ஈடுபடுகின்றனர். நானும் சிறுபான்மை இனமக்களின் பெருபான்மையைப் பெற்ற ஏகப்பிரதிநிதி என்பதால் இதைக் கூறுகிறேன். எனது மக்களும் பல பிரச்சினைகளை எதிர்நோக்குகிறார்கள் என்பதால் கூறுகிறேன்.தற்போது நான் பிரநிதித்துவப்படுத்தும் எமது முஸ்லிம் மக்கள் பல இன்னல்களை எதிர்நோக்குகின்றனர். மூதூரில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் சரியான முறையில் மீளக்குடியமர்த்தப்படாததால் அவர்கள் மீண்டும் இடம்பெயர வேண்டியேற்பட்டுள்ளது. தமிழ் மக்களைமீளக் குடியமர்த்துங்கள்!மூதூர் முஸ்லிம் மக்களிடையே இயல்பு நிலை ஏற்படுத்தப்படவில்லை. மூதூரில் இருந்து இடம்பெயர்ந்த தமிழ் மக்களை மீளக்குடியமர்த்துவதுதான் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் இயல்பு நிலையாகும். ஆகவே, தமிழ் மக்களும் மீள்குடியேற்றப்பட வேண்டும்.இதுதவிர பொத்துவில் சம்பவம் இப்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பொத்துவில் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சர்வதேச விசாரணைக்குழு ஒன்று தேவை என நான் கூறியதால் நான் ஒரு தேசத்துரோகி போன்று பார்க்கப்படுகின்றேன்.முஸ்லிம்களின் ஏகப்பிரதிநிதியான நான் பொதுமக்கள் கொல்லப்படுகின்றபோது அது குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும் எனக்கோரும் உரிமை எனக்கில்லையா? அவ்வாறு நான் கோரிக்கை விட்டதன் காரணமாகவே எனது அதிரடிப்படை மெய்ப்பாதுகாவலர்களையும் அரசு மீளப்பெற்றுக்கொண்டது.பொத்துவில் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் மேற்கொண்டுவரும் அமைதிப் போராட்டமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றார்.





